ரஜினி படத்துக்கு ரூ 330 கோடி இன்சூரன்ஸ் எதுக்கு தெரியுமா?
ஒரு மனிதனின் ஆயுளுக்கு காப்பீடு செய்வதற்கே ஆயிரம் முறை யோசிக்கும் தேசம் இந்தியா.
இந்த நிலைக்கு காப்பீட்டு நிறுவனங்களின் மோசமான செயல்பாடும் ஒரு காரணம், என்றாலும் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டால் இந்திய நிலைமை காப்பீட்டு விஷயத்தில் மோசம்தான்.

இப்போதுதான் மெல்ல மெல்ல வர்த்தக நிறுவனங்கள் காப்பீடு செய்வதில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளன.
திரைத் துறையில் படங்களுக்கு காப்பீடு செய்வதிலும் இப்போது மெல்ல விழிப்புணர்வு தொடங்கியுள்ளது. இதுவரை சில பெரிய பட்ஜெட் இந்தி, தெலுங்குப் படங்களைத்தான் காப்பீடு செய்து வந்தனர். இப்போது தமிழ்ப் படத்துக்கும் காப்பீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அந்த ஆரம்பம் ரஜினியின் 2.ஓ படம். ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை ரூ 330 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறார்கள்.
இந்திய திரையுலக வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகைக்கு காப்பீடு செய்யப்பட்ட ஒரே படம் 2.ஓ-தான். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்ஷுரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் ஆகிய மூன்று பிரதான காப்பீட்டு நிறுவனங்களில் இந்தப் படம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காப்பீடு எதற்காக? எந்த மாதிரி இழப்பை ஈடுகட்ட?
திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு வரை உள்ள ப்ரீ புரொடக்ஷன் காலகட்டத்துக்கு ஒரு பாலிசி, படப்பிடிப்பு நடக்கும் காலகட்டத்துக்கு ஒரு பாலிசி, மூன்றாவது படப்பிடிப்பு சாதனங்களுக்கு, நான்காவது பாலிசி ஷூட்டிங் ரத்தானால் ஏற்படும் நஷ்டத்துக்காக.
2.ஓவைப் பொருத்தவரை இந்த நான்கு பாலிசிகளுமே வழங்கப்பட்டுள்ளன. அதாவது முழுமையான காப்பீடு. ஹீரோ ரஜினி உள்பட அனைத்து நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு படத்துக்கான திட்டம் தொடங்கி, ஷூட்டிங் நடந்து, அந்தப் படம் வெளியாகி தியேட்டரில் ரசிகர்கள் பார்க்கும் வரையிலான காலகட்டத்தில் படத்துக்கு ஏற்படும் எந்த வித இழப்பையும் ஈடுகட்டவே இந்த இன்சூரன்ஸ் பாலிசி.
ஒருவேளை படம் வெளியாகாமல் போகும் சூழல் ஏற்பட்டாலும், அந்த நஷ்டத்தை இந்த காப்பீடு ஈடு செய்துவிடும்.
ரஜினி - ஷங்கர் படம்... நிச்சயம் வெளியாகிவிடும், கவலை இல்லை. ஆனால் மற்றவர்களின் படங்கள் நிறைய பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அவர்களுக்கு நிச்சயம் இந்தக் காப்பீடு உதவக் கூடும். ட்ரை பண்ணலாமே!


Click it and Unblock the Notifications











