முதல்வர் பதவி கனவே இல்லைன்னு சொல்லிட்டாரே.. ஒரு வேளை அதிலேயே கவனம் செலுத்த போறாரோ!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனக்கு முதல்வர் பதவி கனவே இல்லை என்று கூறியுள்ளதால் அவர் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும், தமிழகத்தை முதல்வராக ஆள வேண்டும் என்பது அவரது ஒவ்வொரு ரசிகருக்கும் உள்ள ஆசை, எதிர்பார்ப்பு.. கனவு..
கடந்த 25 ஆண்டுகளாக தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் உள்ளது என்று கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவது உறுதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஏமாற்றம்
மூன்று ஆண்டுகள் கடந்த போதும் ரஜினியின் அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. போருக்கு தயாராக இருங்கள் என்று ரசிகர்களை உசுப்பிவிட்ட ரஜினிகாந்த் அதன் பிறகு மவுனம் காத்து வந்தார். அதேநேரத்தில் அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி வந்தார். இதனால் ரசிகர்கள், ஒவ்வொரு படத்தின் அறிவிப்பின் போதும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

அடுத்தடுத்து படங்கள்
ஆனால் கொடி தயாரிப்பு, கட்சியின் பெயர் தேர்வு, சின்னம் தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகளில் கமுக்கமாக நடைபெறுகிறது. யாரும் எதையும் மறக்கவில்லை, எல்லா வேலையும் தன்பாட்டுக்கு நடக்கிறது என மன்றத்துக்கு நெருக்கமானவர்கள் கூறி வந்தனர். இருப்பினும் கபாலி, காலா, பேட்ட, தர்பார் என படங்களில் ஒப்பந்தமானார் ரஜினிகாந்த்.

கலக்கம்
அந்த படங்களுக்கு பிறகு நிச்சயம் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது 168வது படமான அண்ணாத்த படத்தில் கமிட்டாகி ஒரு ரசிகர்களுக்கு ஒரு பக்கம் இன்ப அதிர்ச்சியையும் ஒரு பக்கம் கலக்கத்தையும் கொடுத்தார்.

பல யோசனை
அடுத்த ஆண்டு தமிழகம் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் தொடர்பான பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். மாவட்ட செயலாளர்கள், மன்ற நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் சந்திப்பும் அவர் பேசிய பேச்சும் பல விதத்தில் யோசிக்க வைத்துள்ளது.

ரஜினியின் திட்டங்கள்
மாற்று அரசியலுக்காக தேர்தலுக்கு பிறகு கட்சி பதவிகளை குறைப்பது, ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை மற்றும் இளைஞர்களின் எழுச்சிக்கு பிறகு அரசியலுக்கு வருவேன் என்று கூறி அதிர விட்டார். அவரின் இந்த திட்டங்களுக்கு ஆதரவும் அதிருப்தியும் எழுந்திருக்கிறது. தான் முதல்வர் அல்ல, அந்த பதவி ஆசை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை கட்சி தலைமையாக இருக்க விரும்புவதாக கூறியிருக்கிறார் ரஜினி.

நடிப்பை தொடர..
கட்சி தலைமையை மட்டும் ரஜினி விரும்புவது, அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. முதல்வராகிவிட்டால் படங்களில் நடிக்க முடியாது. ஒரு வேளை நடித்தால் பெரும் சர்ச்சைகளுக்கு ஆளாக நேரிடும் என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக கட்சி பதவியில் மட்டும் இருந்து கொண்டு தனது தொழிலான நடிப்பை தொடரலாம் என நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கலாம் என்று பேச்சு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











