அந்த ஹீரோக்கள் ஏன் இந்தப் படத்தை நிராகரிச்சாங்க? விளக்குகிறார் இயக்குனர்
சென்னை: விஜய் சேதுபதி உட்பட சில ஹீரோக்கள் நிராகரித்த படம், இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.
அசுரன் படத்தில் கத்தரி பூவழகி, ஆடுகளம் படத்தில், ஒத்த சொல்லால, கிடாரியில், வண்டியில நெல்லு வரும் உட்பட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியிருப்பவர் ஏகாதசி.

இவர், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்போது அருவா என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில், சுகுமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தீபன் ஹீரோவாகவும் பெங்களூரைச் சேர்ந்த அக்ஷயா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். வேல ராமமூர்த்தி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜெயா கே.தாஸ் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி ஏகாதசியிடம் கேட்டபோது, 'இதை இயக்குனர் தருண் கோபி, தனது மதுரா டாக்கிஸ் மூலம் தயாரித்திருக்கிறார். அருவா என்பது வன்முறையின் சின்னம். இது யார் கையில் எடுத்தாலும் வெட்டும் என்பதுதான் கதை.
மனசாட்சியை உலுக்கும் பின்னணியோடு, ஒரு சாதி பிரச்னையை சொல்லும் படம் இது. எந்த பிரசாரமும் இல்லாமல், இயல்பாகவே கதையை சொல்லி இருக்கிறோம்.

மதுரை அருகே, சாதி பிரச்னை நடந்த ஊர் ஒன்றில் போலீஸ்காரர்களுக்கு முன்பு, அவர்களுக்கே தெரியாமல் சில காட்சிகளைப் படம்பிடித்துள்ளோம். அந்த இடத்தில் படமாக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்தோம்.
இந்தக் கதையை விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், பிரசன்னா உட்பட சில ஹீரோக்களிடம் சொன்னேன். நடிப்பதாகச் சொன்னார்கள். சில சூழ்நிலைகளால் நடிக்க முடியாமல் போனது.

இந்தப் படத்துக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பட விழாவிலும் பெர்லின் பட விழாவிலும் விருது கிடைத்துள்ளது. அடுத்த மாதம் படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications











