பிராங்க் அட்ராசிட்டிகள்..அடங்கவே அடங்காத யூடியூபர்கள்: அப்படி பண்றதுல அவங்களுக்கு என்னதான் சந்தோசம்?
சென்னை: உலக மக்கள் அனைவரின் தவிர்க்க முடியாத பொழுதுப்போக்குத் தளமான யூடியூப் கடந்த சில வருடங்களில் அசுர வளர்ச்சிக் கண்டுள்ளது.
மக்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கிடைக்கும் களஞ்சியமாக யூடியூப் பார்க்கப்படுகிறது.
ஆனால், வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணங்களுடன் சில யூடியூபர்கள் செய்யும் வேடிக்கையான அசட்டுத்தனங்கள் முகம் சுழிக்க வைக்கின்றன.
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப புரட்சி உலகையே தலைகீழாகப் புரட்டிவிட்டது என உறுதியாகக் கூறலாம். பெரும் பணக்காரர்களின் கைகளில் மட்டும் தவழ்ந்து வந்த காம்ப்யூட்டர்கள், இன்று அனைவருக்கும் சாத்தியமாகிவிட்டது. அதன் நீட்சியாக செல்போன்கள் உட்பட மேலும் கேட்ஜட்கள் மனிதர்களோடு மனிதர்களாக உண்டு உறவாடத் துவங்கிவிட்டன.

புத்தம் புது பூமி
எதனைக் கற்பனையாகக் கொண்டு 'புத்தம் புது பூமி வேண்டும்' என வைரமுத்து பாடல் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால், அது இப்போது ஆன்லைன் உலகம் மூலம் உண்மையாகிவிட்டது. இதில், யூடியூப் முதன்மையானது என்று சொன்னால் மிகையாகாது. தயிர் சாதம் சமைப்பது முதல் சகலத்தையும் கண்முன்னால் காட்டுவதில் ஜகஜால கில்லாடி இந்த யூடியூப்.

உருப்படியா எவ்ளவோ இருக்கு!
இதுவரை மக்கள் எதையெல்லாம் பெரிய பிஸ்தா என நினைத்து பிரமித்து போய் நின்றார்களோ, அவை அனைத்தையும் ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர் யூடியூபர்கள். இதில் நிறைய ஆரோக்கியமான தகவல்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் காணக் கிடைக்கின்றன. அதேநேரம் பல வேடிக்கையான யூடியூப் தளங்களும் மக்களை குஷிப்படுத்தி வருகின்றன.

அசட்டுக் கோமாளிகள்!
யூடியூப் மூலமாக இன்னும் பல பயன்கள் கிடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம். ஆனால், சில அசட்டுக் கோமாளிகள் தங்களை எண்டர்டெய்னர்களாக நினைத்துக்கொண்டு, ப்ராங்க் ஷோ செய்துவருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்களை மகிழ்விக்க எவ்வளவோ வழிகள் இருக்க, இப்படி ப்ராங்க் செய்து கடுப்பேத்துவது ஏன் எனவும், தங்கள் கேள்விகளை முன்வைக்கின்றனர்.

யூடியூப் என்ன குடிசைத் தொழிலா?
குறைந்தபட்சம் ஒரு யூடியூப் சேனலை நடத்துவதற்கு ஒரு செல்போன் மட்டுமே போதும். அதனாலோ என்னவோ?, தற்போது குடிசைத் தொழில் போல பெருகிவிட்டது யூடியூப் சேனல்கள். இதனால், பலரும் வருமானம் கிடைத்தால் போதுமென நினைத்து, ப்ராங்க் நிகழ்ச்சிகளை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிந்திப்பார்களா யூடியூபர்கள்!
உதாரணமாக விபத்தில் அடிபட்டு கிடப்பது போன்று பிராங்க் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் யூடியூபர்கள். ஒருவேளை, உண்மையாகவே ஒருவர் விபத்தில் சிக்கி ரோட்டில் கிடந்தால், இப்போதெல்லாம் பலரும் கண்டுகொள்வதே இல்லை. காரணம் ப்ராங்க் ஷோக்கள் மக்களிடம் இருந்த கொஞ்சநஞ்ச மனிதத்தையும், பகுத்தறிதலையும் மட்டையாக்கிவிட்டது. ஆகவே மக்களை விட, யூடியூபர்களே இதுகுறித்து சிந்திக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











