தல, தளபதி கலந்துகொள்வார்களா..? - கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
Recommended Video

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடிகர் சங்கம் சார்பில் நாளை போராட்டம் நடக்கவிருக்கிறது.
தமிழக விவசாயிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பகுதி மக்கள் ஆகியோர் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது நடிகர் சங்கம்.
இந்தப் போராட்டத்தில் நடிகர் கமல் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறியுள்ளார். ரஜினி, விஜய், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அஜித் ஆகியோர் இதில் பங்கெடுப்பார்களா எனும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம் முழுக்கவே போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினி, கமல் ஆதரவு
அரசியல் பிரவேசத்தைத் தொடங்கியுள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளனர். கமல் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாகக் கூறியுள்ளார். ரஜினியும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறவழிப் போராட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் சார்பில் அற வழியில் கண்டன போராட்டம் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம்
நடிகர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், முன்னணி நடிகைகள் பலரும் கலந்து கொள்ளவில்லை. அந்தப் போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்றதால் தான் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் வராத அஜித் கூட வந்தார்.

எதிர்பார்ப்பு
இப்போது காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் விவகாரம் என தமிழர்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னைகளுக்காக நடிகர் சங்கம் அறவழிப் போராட்டத்தை நடத்தவிருக்கிறது. இதில் தமிழ் உணர்வுள்ள முன்னணி நடிகர், நடிகைகள் தாமாக முன்வந்து கலந்துகொண்டு அவர்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அஜித், விஜய்
அஜித், விஜய் இருவரும்தான் தற்போதைய இளைஞர்களைக் கவர்ந்த நடிகர்களாக உள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

பங்கேற்பார்களா?
கர்நாடகாவில் தங்கள் படம் வெளியாகவில்லை என்றாலும் பரவாயில்லை என்று முன்னணி நடிகர்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நின்று குரல் கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். யார் யார் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











