மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. சிக்கும் சினிமா பிரபலங்கள்.. படப்பிடிப்புகளுக்கு தடை வருமா?
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில், லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு தளர்வு விதிக்கப்பட்டு, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன.
படப்பிடிப்புகளும் முன்பை போலவே அதிகரிக்க தொடங்கிய நிலையில், வாரத்துக்கு 4 முதல் 6 புதிய படங்கள் வரை வெளியாகி வருகின்றன.
ஆனால், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு தீவிரம் ஆகி உள்ள நிலையில், ஏகப்பட்ட பிரபலங்கள் கொரோனா பாதிப்பில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கொரோனா இன்னும் போகல
இரண்டு டோஸ் தடுப்பூசி, பூஸ்டர் எல்லாம் போட்டாச்சு, கொரோனா பாதிப்பும் கணிசமாக குறைந்து விட்டது என சினிமா பிரபலங்கள் பழையபடி தங்களின் தொழிலை தீவிரமாக தொடங்க ஆரம்பித்துள்ள நிலையில், கண்ணா நான் எங்கேயும் போகல.. இங்கே தான் இருக்கேன் என கொரோனா மீண்டும் கழட்டி வச்ச மாஸ்க்கை எல்லாம் எடுத்து மாட்ட சொல்லி பயமுறுத்தி வருகிறது.

வேதிகாவுக்கு கொரோனா
தமிழில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடித்த வேதிகா, இந்தியில் தி பாடி, தெலுங்கில் ரூலர், பங்காரராஜு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக பிரபுதேவாவின் வினோதன் படத்தில் நடித்து வரும் வேதிகாவுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா போய்விட்டது என யாரும் அலட்சியம் செய்ய வேண்டாம், பாதுகாப்பாக இருங்கள் என ட்வீட் போட்டிருந்தார்.

வரலக்ஷ்மி சரத்குமார்
சமீபத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவரும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். உரிய பாதுகாப்புடன் இருந்த போதே தனக்கு கொரோனா பாதித்து விட்டதாகவும், படப்பிடிப்பில் நடிகர்கள் மாஸ்க் அணிந்து நடிக்க முடியாது. அதனால், மற்ற அனைவரும் மாஸ்க் அணிந்து பணிபுரிய வேண்டியது அவசியம் எனக் கூறினார்.

மணிரத்னத்துக்கு கொரோனா
இந்நிலையில், தற்போது அடுத்ததாக பிரபல இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #ManiRatnam என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்துக்கான புரமோஷன்களில் தீவிரம் காட்டி வந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் படப்பிடிப்புகள் ரத்தாகுமா
தொடர்ந்து பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மீண்டும் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை உடன் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்படுமா? சினிமா, சீரியல் சூட்டிங்கிற்கு அனுமதி ரத்து செய்யப்படும் நிலை உருவாகுமா? என்கிற அச்சம் சினிமா உலகினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்புகளை நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர். சில முன்னணி நடிகர்கள் படப்பிடிப்பை தள்ளிப் போட்டும் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

பெரிய படங்கள் பாதிக்கும்
பொன்னியின் செல்வன் திரைப்படம் உரிய நேரத்தில் வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், அதிகரித்து வரும் கொரோனா, புதிய அலை உருவாகும் என்கிற அறிவிப்பு உள்ளிட்ட செய்திகள் அடுத்தடுத்து பெரிய படங்களின் படப்பிடிப்புகளையும், அதன் வெளியீட்டையும் பயங்கரமாக பாதிக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த பிரச்சனை சீக்கிரமாக முடிவடைய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் வேண்டுதலாக உள்ளது.


Click it and Unblock the Notifications











