அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா? அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன?
சென்னை: கொரோனா ஒரு பக்கம் கிடக்கட்டும், நாம அது கூட பழகி வாழ்வோம் என்கிற ரீதியில், எல்லா தடைகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
ஆனால், திரையரங்குகளுக்கும், கேளிக்கை பூங்காகளுக்கும், நீச்சல் குளங்களுக்குமான தடைகள் இன்னமும் தொடர்கின்றன.
மால்களே திறந்து விட்ட பிறகு, தியேட்டர்களை மட்டும் ஏன் திறக்க அனுமதி அளிக்க மறுக்கின்றீர்கள் என்ற கேள்வியை வலுவாக திரையரங்க உரிமையாளர்கள் வைத்து வருகின்றனர்.

தொழில் முடக்கம்
கடந்த மார்ச் மாதம், கொரோனாவின் தாக்கம் இந்தியாவை தாக்க தொடங்கிய நிலையில், தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டன. 5 மாதங்கள் ஆகியும் இன்னமும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. சினிமாவை நம்பியும், தியேட்டர் தொழிலை நடத்தி வருபவர்கள் மிகப்பெரிய தொழில் முடக்கத்திற்கு ஆளாகி விட்டனர்.

உலக நாடுகளில் திறந்தாச்சு
இங்கிலாந்து, துபாய், சிங்கப்பூர் என ஏகப்பட்ட உலக நாடுகளில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு, மிகப்பெரிய படங்களான டெனெட் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன. பெரிய படங்களை பெரிய திரையில் பார்த்தால் தான் நல்லா இருக்கும் என்பது ரசிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் ஒருமித்த கருத்து.

சைக்கிள் கேப்பில்
திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், சைக்கிள் கேப்பில், தங்களது பிசினஸை வேற லெவலில் டெவலப் பண்ண அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஏகப்பட்ட ஒடிடி தளங்கள் களத்தில் இறங்கின. சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட பெரிய படங்களும் ஒடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பு தியேட்டர் உரிமையாளர்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது.

அனுமதி வேண்டும்
பேருந்து முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்தையும் திறக்க அனுமதி அளித்துள்ளது அரசு. திரையரங்குகளை மட்டும் ஏன் திறக்க அனுமதி அளிக்க மறுக்கிறீங்க என்ற கேள்வியை வலுவாக பல பெரிய மல்டி பிளக்ஸ் நிறுவன அதிகாரிகளும், தியேட்டர் ஓனர்களும் எழுப்பி வருகின்றனர். எங்கள் வாழ்வாதாரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.

அக்டோபர் 1
இந்நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதி நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றும், அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகள் தயாராகி வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் காரணமாகத்தான், ஒடிடியில் வெளியாவதாக இருந்த அக்ஷய் குமாரின் லக்ஷ்மி பாம் திரைப்படம் தியேட்டர் ரிலீசுக்காக மாறி உள்ள அப்டேட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

என்ன சிக்கல்
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகள் நெருங்குவதால், தியேட்டர்களை திறந்து விடுவதில் அரசு ரொம்பவே யோசனையில் ஈடுபட்டு வருகிறது. தளபதி விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசானால், தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியுமா? அரசு சொல்லும் ஆலோசனைப்படி குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் தான் விற்கப்படுமா? அதனை எப்படி கண்காணிக்க முடியும் போன்ற ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்களும் உள்ளதை தான் அரசு யோசித்து வருகிறது. எப்படி இருந்தாலும், அடுத்த மாதம் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











