திடீரென வந்த அந்த அறிவிப்பு.. ஆர்.ஆர்.ஆர் மற்றும் வலிமை படங்கள் திட்டமிட்டபடி வெளியாகுமா?
சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஏகப்பட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலும் தற்போது திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
எக்ஸ்ட்ரா சேர்களை எல்லாம் போட்டு வசூலை குவிக்க தியேட்டர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு பெரிய படங்களின் வசூல் மற்றும் ரிலீஸ் தேதியில் மாற்றம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 சதவீதம் மட்டுமே
2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை போலவே 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் வெறும் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன் காரணமாக பெரிய படங்களின் ரிலீஸ் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

ராஜமெளலி படம்
பாகுபலி படங்களின் மூலம் இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வரும் ஜனவரி 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற அறிவிப்பு அந்த படத்தின் ரிலீஸ் மற்றும் வசூலை பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

வலிமை வசூல் பாதிக்குமா
வரும் ஜனவரி 10ம் தேதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 13ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் வசூல் பாதிக்குமா? அப்போது திரையரங்குகள் மீண்டும் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதிக்குமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் அதிகரித்தால்
ஆனால், ஒமிக்ரான் பரவல் மேலும், அதிகரித்தால் ஜனவரி 10ம் தேதிக்கு மேல் தியேட்டர்கள் மொத்தமாக ஷட் டவுன் செய்யும் நிலையும் உருவாகும் என்கிற சூழல் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கொரோனா பரவல் குறைவானால் மட்டுமே இந்த தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

ரிலீஸ் தள்ளிப் போகுமா?
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கும் இதே சூழல் உருவானது. ஆனால், 50 சதவீதம் இருக்கைகளுடன் படம் ரிலீசான நிலையிலேயே இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையை மாஸ்டர் அடைந்துள்ளது. அதனால், ஆர்.ஆர்.ஆர் மற்றும் வலிமை படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்காமல் தைரியமாக படங்களை வெளியிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சம்மர் என்ன ஆகும்
2022ம் ஆண்டும் மீண்டும் உருமாறிய கொரோனா மக்களை படாதபாடு படுத்தினால் மார்ச் மற்றும் ஏப்ரல் ரிலீசுக்கு திட்டமிட்டுள்ள படங்களின் நிலை என்ன ஆகும்? என்கிற கேள்விக் குறியும் எழுந்துள்ளது. விரைவில் இந்த கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துக் கட்டினால் மட்டுமே மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். சினிமா உள்ளிட்ட அனைத்து தொழில் துறையும் நிம்மதி பெருமூச்சு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியே செல்லும் போது முகக்கவசத்தை கட்டாயம் சரியாக போட்டு செல்லுங்கள்!


Click it and Unblock the Notifications











