'குடும்பத்தோட தியேட்டருக்கு வாங்க.. சினிமா இல்லாம வாழ்க்கை முழுமை பெறாது..' மாஸ்டர் பற்றி மிஷ்கின்
சென்னை: கதைகளும், சினிமாவும் இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறாது என்றும் குடும்பத்துடன் தியேட்டருக்கு செல்வோம் என்றும் இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.
இயக்குனர் மிஷ்கின், அடுத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரே கட்டமாக
இதில் ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பூர்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் இந்த மாதம் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து ஏலகிரியில் அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

காட்சிகள் ரத்து
இந்நிலையில், கொரோனாவால் மூடப்பட்டு இருந்த திரையரங்குகள் தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஐம்பது சதவிகித இருக்கைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்கள் அதிகமாக தியேட்டருக்கு வரவில்லை. இதனால், பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இயக்குனர் மிஷ்கின்
சில தியேட்டர்களை மீண்டும் மூடியுள்ளனர். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம், வரும் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று சினிமா துறையினர் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின், அனைத்து ரசிகர்களும் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அர்த்தமற்றதாகும்
தனது ட்விட்டர் பக்கத்தில், பிசாசு 2 படத்தின் போஸ்டரை வெளியிட்டு, புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ள இயக்குனர் மிஷ்கின், மேலும் கூறியிருப்பதாவது: கதைகளும், சினிமாவும் இல்லாத நம் வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். இனி வரும் நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செல்வோம்.

உதவ வேண்டும்
நான் தனிப்பட்ட முறையில் 'மாஸ்டர்' படத்திற்காக ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குக்கு செல்ல இருக்கிறேன். அனைத்து ரசிகர்களும் மீண்டும் திரையரங்குகளுக்கு செல்ல வேண்டும், திரைத்துறை மீண்டும் செழித்து வளர உதவ வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











