பெண்கள் என்னை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்: தாரை தப்பட்டை வில்லன் சுரேஷ்
சென்னை: தாரை தப்பட்டை படத்தை பார்த்த பெண்கள் எல்லாம் தன்னை திட்டிக் கொண்டிருப்பதாக வில்லனாக நடித்த சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தராக இருப்பவர் சுரேஷ். அவரை இயக்குனர் பாலா தனது தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடிக்க வைத்து நடிகர் அவதாரம் எடுக்க வைத்துள்ளார். படம் கடந்த 14ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படம் குறித்து சுரேஷ் கூறுகையில்,

கனவு மாதிரி
என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு கனவு போன்று உள்ளது. படத்தை பார்த்தவர்கள் எல்லாம் என் நடிப்பை பாராட்டுகிறார்கள்.

பாலா
இயக்குனர் பாலா எனக்கு கடவுள் போன்றவர். அவர் தான் எனக்கு இந்த அருமையான வாய்ப்பை அளித்தவர். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

படம்
படம் ரிலீஸாகி முதல் இரண்டு நாட்கள் ஒன்றும் தெரியவில்லை. அதன் பிறகு இன்று காலையில் இருந்து என் போன் நிற்காமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நடிகர்
நான் தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக இருந்தாலும் ஒரு நடிகராக புகழ் கிடைப்பது வித்தியாசமாக உள்ளது. அசோகன் மற்றும் பி.எஸ். வீரப்பா ஆகியோர் இன்று உயிரோடு இருந்திருந்தால் என் நடிப்பை பார்த்து பெருமைப்பட்டிருப்பார்கள் என்று எனக்கு மெசேஜ் வந்தது. இது எல்லாம் பாலா சாரால் தான் சாத்தியம் ஆனது. அவர் சொன்னதை தான் நான் செய்தேன்.

செல்ஃபி
நான் தியேட்டருக்கு சென்றபோது ஒரு ஆண் என்னைப் பார்த்தவுடன் என் அருகே வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். தனது மனைவியையும் அவர் அழைத்தபோது அவர் என் அருகே வர பயந்து ஓடிவிட்டார். சில பெண்கள் என்னை திட்டி சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அறிந்த பாலா சார், நான் வெற்றி பெற்றுவிட்டதாக தெரிவித்தார் என்றார் சுரேஷ்.


Click it and Unblock the Notifications











