சிம்பு வீட்டு முன்பு இன்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டம்!
ஆபாசப் பாடலை இயற்றிப் பாடிய சிம்பு, அனிருத்தைக் கைது செய்யக் கோரி இன்றும் சிம்பு வீட்டு முன் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாம்பலம் மாசிலாமணி ரோட்டில் உள்ள சிம்பு வின் வீட்டு முன்பு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிம்பு வீட்டு முன்பு இன்று மீண்டும் போராட்டம் நடந்தது. பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பெண்கள் காலை 11 மணியளவில் சிம்பு வீட்டுக்கு திரண்டு சென்றனர். அவர்களை மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் தெரு முனையிலேயே தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கு நின்றபடியே சிம்பு, அனிருத் ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர். இருவரது படங்களுக்கும் செருப்பு மாலை அணிவித்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த சாணத்தையும் எடுத்து படங்களின் மேல் பூசினர்.

சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Click it and Unblock the Notifications











