சினிமாவில் துரோகம்தான்.. முதுகில் குத்திய தலைவி இயக்குனர் விஜய்.. ரைட்டர் அஜயன்பாலா திடீர் தாக்கு!
சென்னை: 'தலைவி' பட இயக்குனர் விஜய் தனது முதுகில் குத்திவிட்டதாக எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
சரத்குமார், சேரன் நடித்த சென்னையில் ஒருநாள், உதயநிதி, ஹன்சிகா நடித்த மனிதன், பிரபுதேவா நடித்த லட்சுமி உட்பட பல்வேறு படங்களுக்கு வசனம் எழுதியிருப்பவர் அஜயன் பாலா.
தற்போது அமீரின் நாற்காலி, கிரிமினல் உட்பட சில படங்களுக்கு எழுதி வருகிறார். விஜய் இயக்கிய மதராசபட்டினம் உட்பட சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கதை
இவர், நடிக நிலம் என்ற நடிப்பு பயிற்சிப் பள்ளியை சென்னையில் நடத்தி வருகிறார். இவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையிலேயே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை விஜய் இயக்குகிறார். 'தலைவி' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் கங்கனா ரனவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார்.
Recommended Video

நம்பிக்கைத் துரோகம்
இந்நிலையில் இயக்குனர் விஜய் தனது முதுகில் குத்திவிட்டார் என்று எழுத்தாளர் அஜயன்பாலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அவமானப்படுத்தப்பட
இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து, கோர்ட் வழக்குகளில் ஆதராமாகப் பயன்படுத்தி வழக்கில் வெற்றிபெற்ற பின் என் பெயரை சுத்தமாக படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதற்கு திரைக்கதையில், வணிக நோக்கில் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்கும்படி நான் கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்பட காரணம்.

முதுகில் குத்தி விட்டார்
பத்தாண்டு நட்புக்காக இயக்குனர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆய்வு எழுத்து, தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என என் ஒன்றரை வருட உழைப்புக்கு கிடைத்த பலன், முதுகில் குத்தியதுதான். இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போதுகூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப் போகும் அவமானத்தை எண்ணி அகமகிழ்ந்திருப்பார் போல.

ஒப்பந்தமில்லாமல்
இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கியைக் கூட கொடுக்க மாட்டர்கள். நட்பிற்காகக் கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரியவேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக் கொள்ளும் கோரிக்கை. இவ்வாறு கூறியுள்ளார். இந்த புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











