இயக்குநர் கோபி நயினாருக்கு 'நின்றபடி கைத்தட்டல்கள்'! - பட்டுக்கோட்டை பிரபாகர்
அறம் - படமல்ல! வலியோடு, கண்ணீரோடு, ஆத்திரத்தோடு, அக்கறையோடு, பொறுப்போடு, ஆதங்கத்தோடு, விரக்தியோடு, வேதனையோடு, நியாயத்தோடு, அறிவார்ந்த கேள்விகளோடு அணுகியிருக்கும் முக்கியமான சமூகப் பிரச்சினையின் 360 டிகிரி பதிவு!
இந்தியா ஏன் ராக்கெட் விடுகிறது என்கிற கேள்வியுடன் படம் துவங்குகிறது. கற்பானாலும் சரி, உயிரானாலும் சரி ஏழைக்கொரு பார்வையும், பணக்காரனுக்கு ஒரு பார்வையும்..நகரத்திற்கு ஒரு அக்கறையும், கிராமத்திற்கு ஒரு அலட்சியமும் எங்கும் எதிலும் நிரவியிருப்பதை அமிலம் தோய்த்த வார்த்தைகளால் சாடுகிறது படம்.

ஒரு நேர்மையான கலெக்டர் இங்கே பவர் பாலிட்டிக்ஸ் சூழலில் மனசாட்சியுடனும், மனிதாபிமானத்துடனும் கடமையாற்ற இயலாது என்பதை படம் அழுத்தமாக அடிக்கோடிடுகிறது.
ஒவ்வொரு நடிகைக்கும் தன் கேரியரில் ஒரு சில முத்திரைப் படங்கள் அமையும். நயன்தாராவுக்கு இந்தப் படம். நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக மதிப்புடன் படத்தில் போலவே நிஜத்திலும் நடக்கலாம். பின்னணி குரல் கொடுத்திருக்கும் தீபா வெங்கட்டின் பங்களிப்பும் இதில் சேரும்.
அவரைத் தவிர அத்தனை முகங்களும் அதிகமாக அறிமுகமாகாதவர்கள். ஆனால் இயல்பான நடிப்பால் நம் அன்பை அள்ளிக் கொள்கிறார்கள்.

நம் இளைஞர்களின் அறிவும், கண்டுபிடிப்புகளும் எப்படி அலட்சியப்படுத்தப்படுகின்றன, அரசாங்க அதிகாரிகளின் எனக்கென்ன என்கிற அலட்சியப் போக்கு, அரசியல்வாதிகளின் பண்த் திமிர், மக்கள் பிரச்சினைகளுக்கு தன் அதிகாரத்தையும் மீறி உதவத் துடிக்கும் நேசமான மனுஷியாக ஒரு பாசிட்டிவ் கலெக்டர் எப்படி சிந்திப்பார், பேசுவார் என்று இயக்குநர் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்.
ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டிவிட்டு தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் அதை மூடாமல் விடுவதால் 381 குழந்தைகள் இதுவரை இறந்திருக்கிறார்கள் என்கிற எண்ணிக்கை மிரட்டுகிறது. மனதைப் பிசைகிறது. வலிக்கிறது.
மிகவும் நேர்மையான, நியாயமான, மிகையில்லாத நல்ல படம். அவசியம் பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சிபாரிசு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications











