எழுத்தாளர்கள் "சுபா "... இயக்குனர் ஷங்கர் பற்றி பல சுவாரசியத் தகவல்கள் !
சென்னை: எங்கள் கதை விவாதம் கூர்க் ரிசார்ட் ஒன்றில் தொடங்கியது. அந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் யார் என்று அப்போது முடிவாகாமல் இருந்தது. ஆனால், கதை விவாதத்துக்கு நாங்கள் புறப்படும் முன்பே ஷங்கருடைய கம்பெனியிலிருந்து முன்பணமாக ஒரு காசோலை அனுப்பி வைத்தார். அவருடைய Professional etiquette சினிமாவில் பார்ப்பது அபூர்வம்.
மைசூர் வரை ரயிலில் பயணம். இந்தியாவே கொண்டாடும் ஓர் இயக்குநராக இருந்தபோதிலும், அவர் மிக இயல்பாகவே எங்களுடன் உரையாடினார். இரண்டொரு நாளிலேயே பலநாட்கள் பழகியவர்போல பல முன் அனுபவங்களை அவர் எங்களுடன் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார் - எங்களைத் தாண்டி சில விஷயங்கள் வெளியே போகாது என்ற நம்பிக்கையுடன் இருந்தார் .
கதை விவாதம் சிறப்பாக நடந்தது. ஷங்கரிடம் நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு அம்சத்தை அவருடன் நெருங்கிப் பழகியபோது கவனித்தோம்: அவருடைய அபாரமான நகைச்சுவை உணர்வு. ஒருமுறை தோட்டத்தில் அமர்ந்து கதை விவாதம் நடந்தபோது சௌகரியம் கருதி ஒருவருக்குப் பின் ஒருவராக உதவியாளர்கள் இருக்கைகள் போட்டு அமர்ந்திருந்தார்கள்."என்னப்பா ஷதாப்தில உக்காந்த மாதிரியே உக்காந்திருக்கீங்க?" என்று கணநேரமும் யோசிக்காமல் கேட்டார்.

கஷ்டமாக இருந்தது
நாயகனின் தந்தை கதாபாத்திரத்தை நகைச்சுவையாக அமைக்கலாம் என்று பேசியதும், அருவிபோல், அடுத்தடுத்து நகைச்சுவைக் காட்சிகளை அடுக்கினார். குலுங்கிக் குலுங்கி சிரித்தோம். பிற்பாடு படத்தின் நீளம் கருதி அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தபோது எங்களுக்குக் கஷ்டமாக இருந்தது. கூர்கைத் தொடர்ந்து கொடைக்கானல், கபினி நீர்த்தேக்கம் என்று பல இடங்களில் கதை விவாதம் தொடர்ந்தது. கொடைக்கானலில் தங்கியிருந்த ஹோட்டலில் நிம்மதியாக சிற்றுண்டிகூட சாப்பிடவிடாமல், கூட்டம் மொய்த்துவிடும். நூறு கேள்விகள் அவர்மீது வீசப்படும். வேறு வழியின்றி, ஒதுக்குப்புறமான வேறிடம் தேடி மாற வேண்டியிருந்தது.

விவரங்களை ஆராய்ந்து
கதை விவாதத்தின்போது சிறப்பான வசனங்களோ, சுவையான குறிப்புகளோ வந்துவிழுந்தால், உடனடியாக உதவியாளரைப் பார்ப்பார். "இந்த முந்திரிய குறிச்சிவெச்சுக்கங்க" என்பார். அவற்றில் பெரும்பான்மை பிற்பாடு ஸ்கிரிப்ட் எழுதப்படும்போது, பயன்படுத்தப்படும். எதையுமே மேம்போக்காக அவர் அணுகுவதில்லை. நாயகன் உடற்பயிற்சிக்கூடம் நடத்துபவன் என்று முடிவானதும், ஜிம் பயிற்சியாளர்களைச் சந்தித்து உரையாடி பல தகவல்களையும், ஆண் அழகன் போட்டிக்குத் தயாராகிறவர்கள் என்னென்ன உண்பார்கள் என்பதையும் நாங்கள் சேகரித்துக் கொடுத்ததைப் பாராட்டினார். அதேபோல் ஒரு விஷக் கிருமி நாயகனின் உடலில் புகுத்தப்பட்டு அவனுடைய அழகும் கம்பீரமும் சிதைக்கப்படும் என்பதை கவனத்தில்கொண்டு, அதுபற்றிய விவரங்களை ஆராய்ந்து அவருடன் பகிர்ந்துகொண்டோம்.

தலைப்பாகப் பதிவுசெய்ய
நாயகன் கூனனாக இருப்பதால், அவனுடைய வளைந்த முதுகுபோல், படத்தின் தலைப்பிலேயே நிறைய வளைவுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார், ஷங்கர். ஐ, ஜ போன்ற எழுத்துகளில் ஏதாவது தலைப்பு கிடைக்கலாம் என்று அகராதியைப் புரட்டினோம். ‘ஐ' என்ற ஒற்றை எழுத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த பல அர்த்தங்களைப் பார்த்ததும், ஆச்சரியமானோம். கதையின் அத்தனை அடிப்படைகளையும் ஆதரிப்பதுபோல் அந்த அர்த்தங்கள் இருக்க.. அவரிடம் தெரிவித்தோம். அவரும் சரிபார்த்துவிட்டு, அதையே தலைப்பாகப் பதிவுசெய்ய உடனடியாக ஏற்பாடு செய்தார்.

ஒற்றை எழுத்துக்கு
"ஐ" என்றால் என்ன? சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி விளக்கம்: வியப்பு. அழகு. மென்மை. நுன்மை. கோழை. தலைவன். கணவன். அரசன். ஆசான். நச்சின் வீரியம்கொண்ட பாஷாணம். அந்த ஒற்றை எழுத்துக்கு இருக்கும் அத்தனை அம்சங்களும் வரும் படியாக படத்தில் ஒரு பாடல் திகழ வேண்டும் என்று விரும்பினார். ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' என்ற பாடலில் மதன் கார்க்கி அதை அழகாக நிறைவேற்றிக் கொடுத்தார்.

உணர்ச்சிகள் ஊறும்
திரைக்கதை முடிவானதும், ஒவ்வொரு காட்சிக்கும் வசனங்கள் எழுதிக் கொடுப்போம். ஷங்கரும் இன்னொரு பக்கம் அதே காட்சிக்கு எழுதுவார். இரண்டிலும் உள்ள முத்துக்களைப் பொறுக்கி, இறுதி வடிவம் அமைக்கப்படும். ஒவ்வொரு படத்துக்கும் ஷங்கர் கடைப்பிடிக்கும் முறை இதுவென அறிந்து வியந்தோம். சில பிரம்மாண்டமான செட்களை முத்துராஜ் அமைத்து அசத்தினார். உணர்ச்சிகள் ஊறும் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். "25 வருடங்களுக்கு முன்பே நாம் இணைந்திருக்க வேண்டியது.." என்று சொல்லி எங்களை அணைத்துக்கொண்டார்.

தீர்மானமான கருத்து
திரைக்கதை தீர்மானமாகி, வசனங்களுடன் எழுதப்பட்டபிறகு, படப்பிடிப்பில், அதை நோண்டிக்கொண்டிருக்கக் கூடாது என்பது ஷங்கருடைய தீர்மானமான கருத்து. முதல் படத்திலிருந்தே இதை அவர் கடைப்பிடித்து வருவதாகவும் அறிந்தோம். ‘ஐ' திரைப்படம் ஒரு வெற்றி பெற்ற படம். அந்த வருடத்தில் பல ஃபிலிம்ஃபேர் அவார்டுகளை வென்ற படம். ஷங்கர் திறமையாளர், திட்டமிடுவதில் வல்லவர் என்பதையெல்லாம் தாண்டி கடும் உழைப்பாளி. ‘Hard working Genius'. ஒளிப்பதிவு, இசை, கலை என்று ஒவ்வொரு துறையிலிருந்தும் விற்பன்னர்களைத் தன் படத்தில் இணைத்துக்கொள்வார். அவர்கள் ஒவ்வொருவரும் இது தன்னுடைய படம் என்ற எண்ணத்துடன், முழு அர்ப்பணிப்புடன் உழைக்குமளவு மரியாதையும், அன்பும் வழங்குவார். இதை அவருடனான எங்கள் திரைப் பயணத்தில் அறிந்து கொண்டோம்.

சுவாரஸ்யம்
இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றால் தமிழ் சினிமாவிற்கு ஒரு தனி பெருமை தான். அந்த படங்களில் வேலை செய்த அனுபங்களை பற்றி எழுத்தாளர் சுரேஷ் இணையத்தளத்தில் தன் நலம் விரும்பிகள் மட்டும் சினிமா ரசிகர்களுக்காக நிறைய தகவல்கள் கொடுப்பது பலருக்கும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. எழுத்தாளர்கள் சந்தித்த அனுபங்களை சொல்லும்போது அவர்களது எழுத்தும் வேற லெவல் அனுபவங்களை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications











