பாட்டெழுதுவது என் வேலையில்லை: இயக்குநர் சீனு ராமசாமி

சன் டிவியின் சூரிய வணக்கம் விருந்தினர் பக்கத்தில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, தன்னுடைய நீர்பறவை திரைப்படம் பற்றியும், கவிதை, இலக்கியம், நட்பு வட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
தன்னுடைய முதல் படமான தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் வெளியானபோது தான் பரபரப்பாக இருந்ததாகவும், தன்னைச் சுற்றியிருந்தவர்கள் அமைதியாக இருந்ததாக கூறினார். ஆனால் நீர்பறவை படம் வெளியானபோது நான் அமைதியாக இருந்தேன். என்னைச்சுற்றியிருந்தவர்கள் பரபரப்பாக இருந்தனர் என்றார்.
நீர்பறவை படம் பற்றி அதிகம் பகிர்ந்து கொண்ட சீனு ராமசாமி படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், நந்திதாதாஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்தார். மணிரத்னம் இயக்கும் கடல் படத்திற்கும் நீர்பறவை படத்திற்கும் உள்ள ஒன்றுமை குறித்து கேள்வி எழுந்த போது அவர் கப்பலில் போய் மீன் பிடிக்கப் போயிருக்கிறார். நான் நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறேன் என்று அடக்கமாக கூறினார் சீனு ராமசாமி.
பரபரப்பான இயக்குநராக இருந்தாலும் கவிதைத் தொகுப்புகளை வெளியிடுகிறார். நல்ல கவிஞரான நீங்கள் ஏன் உங்கள் படங்களுக்கு பாடல்களை எழுதுவதில்லை என்று கேட்டனர் தொகுப்பாளர்கள். அதற்கு பதிலளித்த சீனு ராமசாமி, நான் டைரி எழுதுவது போலத்தான் கவிதை எழுதுகிறேன். அதற்காக பாட்டெல்லாம் எழுத முடியாது. எனக்கு எழுதவும் தெரியாது. நான் இயக்குநர் வேலையை சிறப்பாக செய்தால் போதும். பாடல்கள் எழுதுவதற்கு என்று சிறப்பான கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இருக்கின்றனர் என்றார். இனி தன்னுடைய அடுத்ததாக எழுத்தாளர் எஸ். ராமகிருஸ்ணன், எழுத்தாளர் ஜெயமோகன் கதைகளை படமாக்கப்போவதாகவும் கூறினார் சீனு ராமசாமி.


Click it and Unblock the Notifications











