பீப் சாங்கிற்கு எதிராக குமுறிய ஒய்.ஜி.யை ஸ்ரேயாவுக்கு அப்பாவாக்கி அழகு பார்த்த சிம்பு!
சென்னை: தனது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவாக ஒய்.ஜி.மகேந்திரனை சிம்புவே சிபாரிசு செய்த விசயம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது நம்ம ஆளு வெற்றியைத் தொடர்ந்து சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுக்கு மூன்று நாயகிகள். அவர்களில் ஒருவர் தான் ஸ்ரேயா.

ஸ்ரேயா அப்பாவாக...
இவர் கதைப்படி ஒரு சிம்புவிற்கு ஜோடியாகவும், மற்றொரு சிம்புவிற்கு அம்மாவாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு இப்படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவாக ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வருகிறார்.

சிம்பு சிபாரிசு...
இந்தக் கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குநரிடம் சிபாரிசு செய்ததே சிம்பு தானாம். இதனை ஒரு பேட்டியில் ஒய்.ஜி.மகேந்திரனே தெரிவித்துள்ளார்.

மீண்டும் காமெடி...
மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், "இப்படத்தில் நான் ஸ்ரேயாவின் தந்தை வேடத்தில் நடிக்கிறேன். கடந்த 3 வருடங்களாக காமெடிக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடித்து வந்த எனக்கு இப்படத்தில் மீண்டும் காமெடி செய்ய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

உறுதி...
சிம்பு ஒரு திறமையான நபர். அவருக்கு சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்துள்ளது. ஸ்ரேயாவின் தந்தை வேடத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்பதில் சிம்பு உறுதியாக இருந்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் தெரிவித்தார்'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடம்பன்..
சிம்பு படம் மட்டுமின்றி ஒய்.ஜி.மகேந்திரன் தற்போது 'விஜய் 60', 'கடம்பன்', 'சைத்தான்' ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

பீப் பாடல்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கி சிம்பு சின்னாபின்னமானார். அப்போது அவருக்கு எதிராக கருத்துத் தெரிவித்தவர்களில் ஒய்.ஜி.மகேந்திரனும் ஒருவர். ஆனால், அதை மறந்து தனது படத்தில் சிம்பு அவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் நடிகர் சங்கத் தேர்தலில் தன்னை எதிர்த்தது மோதி சரத்குமார் குழுவில் இடம் பெற்ற ராதாரவியை, மருது படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் விஷால்.


Click it and Unblock the Notifications











