யாஷிகாவின் தோழி கிடந்ததே தெரியல.. பார்த்திருந்தால் காப்பாத்திருக்கலாம்.. நேரில் பார்த்தவர்கள் பகீர்!
சென்னை: யாஷிகாவின் தோழி சாலையோர பள்ளத்தில் கிடந்ததே தெரியவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு திரும்பிய போது அவரது கார் விபத்துக்குள்ளானது.
இதில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த யாஷிகா ஆனந்த் அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
விபத்தில் யாஷிகா மற்றும் அவருடைய ஆண் நண்பர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். யாஷிகாவுக்கு உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

படு ஸ்பீடாக சென்றதால்
இந்நிலையில் விபத்து நடந்த சூளேரிக்காடு பகுதியில் விபத்தை நேரில் பார்த்தவர்களும் நொறுங்கிய காருக்குள் சிக்கியிருந்த யாஷிகா உட்பட 3 பேரையும் மீட்டவர்கள் பகீர் கிளப்பும் தகவலை கூறியுள்ளனர். யாஷிகா சென்ற கார் படு ஸ்பீடாக சென்றதால் பலரும் காரை திரும்பி பார்த்துள்ளனர்.

தீப்பொறி பறந்தப்படியே..
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் உள்ள செண்டர் மீடியனில் மோதி கார் நான்கு முறை உருண்டுள்ளது. கார் செண்டர்மீடியனில் மோதியதும் தீப்பொறி பறந்தப்படியே சென்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலையோர பள்ளத்தில்
மேலும் மோதிய வேகத்தில் காரின் டாப் டோர் திறந்துள்ளது. அப்போது காரும் உருண்டதால் யாஷிகாவின் தோழி டாப் டோர் வழியாக தூக்கி வீசப்பட்டுள்ளார். கார் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் சாலையோர பள்ளத்தில் கிடந்துள்ளார் வள்ளி செட்டி பவனி.

யாரும் கவனிக்கவில்லை
ஆனால் அவரை யாருமே கவனிக்கவில்லை. இருட்டில் அவர் விழுந்ததையும் யாரும் கவனிக்கவில்லை. அவர்களின் நண்பர்களும் வள்ளி செட்டி பவனி பற்றி கேட்கவில்லை. யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்களை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முக்கால் மணிநேரம் கழித்து
எல்லாம் முடிந்து முக்கால் மணி நேரம் கழித்து சாலையோர பள்ளத்தில் முனகல் சத்தம் வந்ததை கேட்டு சென்று பார்த்த போதுதான் அங்கு ஒரு இளம்பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து மற்றொரு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்பே பார்த்திருந்தால்..
ஆனால் அதற்குள் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவனி உயிரிழந்துவிட்டார் என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் முன்பே பார்த்திருந்தால் நிச்சயம் அவரையும் காப்பாற்றியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

காருக்குள் சரக்கு பாட்டில்
மேலும் விபத்து நடந்த பகுதியில் யாஷிகாவின் ஆதார் கார்டு கிடந்ததை வைத்தே அவர் யாஷிகா ஆனந்த் என தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு காருக்குள் சரக்கு பாட்டில்கள் இருந்ததாகவும் மீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











