'ஒரு கதவு திறக்குது’... நண்பனுக்காக பாட்டுப் பாடிய கௌதம் மேனன் !
சென்னை : ராதாமோகன் இயக்கத்தில் தயாராகி வரும் உப்புக்கருவாடு படத்தில் இயக்குநர் கௌதம்மேனன் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
‘மொழி', ‘அபியும் நானும்' ‘பயணம்' முதலிய வெற்றிப் படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் தற்போது உப்புக் கருவாடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, குமரவேல், சாம்ஸ் மற்றும் ரக்ஷிதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். ஸ்டீவ் வாட்ஸ் இசையில் இப்படத்திற்காக மதன் கார்க்கி ‘ ஒரு புது கதவு திறக்குது'... என்ற பாடலை எழுதியுள்ளார்.

இளைஞனின் கொண்டாட்டம்...
இப்பாடலை இசையமைப்பாளர் ஸ்டீவ் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இயக்குநர் கௌதம்மேனன் பாடியுள்ளார். இது தொடர்பாக ராதாமோகன் கூறுகையில், ‘இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு துள்ளலை தந்துள்ளது.

கௌதமின் நண்பர்...
இசையமைப்பாளர் ஸ்டீவ் கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார்.

சோலோ சாங்...
படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். கௌதம் மேனன் பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார்.

வியப்பு...
கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஒரு கதவு திறக்குது...
ஒரு வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைக்கும் ஒருவனின் கொண்டாட்டமாய் வரும் ‘ஒருபுது கதவு திறக்குது...' என்ற பாடலை அதே துள்ளலுடனும், கொண்டாட்டத்துடனும் பாடிகொடுத்தார் கௌதம்.

கடற்கரைக் காற்று...
இப்பாடல் கடற்கரைக் காற்று போல் ரசிகர்களுக்கு புத்துணர்வை தரும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











