ரிலீசானது அஜித்தின் 'என்னை அறிந்தால்'! தெறி மாஸ் என்கின்றனர் ரசிகர்கள்
சென்னை: ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த என்னை அறிந்தால் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் தெறி மாஸ் என்கின்றனர் படம் பார்த்த ரசிகர்கள்.
ஏ கிளாஸ் ஆடியன்ஸ்சை ஈர்க்கும், கவுதம் மேனனும், ஆல் கிளாசையும் அபேஸ் செய்யும் அஜித்தும் இணைந்து ஸ்வீட் காம்போவாக கொடுத்துள்ள படம்தான் என்னை அறிந்தால். கடந்த மாதம் ரிலீசாக வேண்டிய திரைப்படம், பட வேலைகள் பாக்கி காரணமாக தாமதமானது. ஆனால் புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்பதைப்போல உள்ளது படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு.

இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் நேற்றிரவே படம் ரிலீஸ் ஆன நிலையில், தமிழகத்தில் அதிகாலையிலேயே ரிலீஸ் ஆனது. பெங்களூருவிலும் அதிகாலை ரிலீஸ் ஆனது. என்னை அறிந்தால் ரிலீஸ் ஆன அனைத்து தியேட்டர்களுமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கட்-அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகளை வைத்து கொந்தளித்தனர் ரசிகர்கள்.
கேரளாவில் இதுவரை அஜித் படங்களுக்கு இல்லாத அளவுக்கு 107 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அங்கு முதல் ஷோ காலை 7.15 மணிக்கு ஆரம்பித்தது.
படம் பார்த்த ரசிகர்கள் அனைவரின் கருத்துமே, படம் தெறி மாஸ் என்பதுதான். வேறு வார்த்தைகள் ரசிகர்கள் வாயில் இருந்து வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. சத்யதேவ் கதாப்பாத்திரம் கர்ஜிப்பதாக பெருமைப்படுகின்றனர் ரசிகர்கள். கவுதம் மேனன் படத்திற்கே உரிய ரொமான்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமில்லையாம். திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு அருமையாம்.
ஒரே படத்தில், காதல் மன்னனாகவும், அடித்து நொறுக்கும் தலயாகவும் அஜித்தை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். இதுவரை கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே அதிகபட்சமாக வசூலை வாரிக்குவிக்கும் படம் என்னை அறிந்தாலாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறுவதை கேட்க முடிந்தது. அப்போ.. அஜித்துக்கு ஹாட்ரிக்தான்..


Click it and Unblock the Notifications











