கருணாநிதிக்கு மீண்டும் பாராட்டு விழா: ரஜினி-கமலுக்கு வாழ்த்தும் பொறுப்பு!

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் செயலாளராகவும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைவராகவும் உள்ள அமைப்பு இந்த சங்கத் தமிழ்ப் பேரவை.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, பரூக் அப்துல்லா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி ஆகியோர் முதல்வர் கருணாநிதியை வாழ்த்திப் பேசுகிறார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'விழாவுக்கு எல்லோரும் அணிதிரண்டு வந்திடுக' என்று மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் அழைப்பு விடுத்து உள்ளார்.
'செந்தமிழ் வேந்தர், செம்மொழித் தலைவர், முதல்வருக்கு நன்றிப்பெருவிழா-நற்றமிழ்த் திருவிழா' என்ற பெயரில் இந்த விழா நடக்கிறது.
விழாவுக்கான அழைப்பிதழ் மிகப் பிரம்மாண்டமான அளவில், அனைத்து தரப்பினரும் பிரம்மிக்கத்தக்க வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் இந்த விழா நடக்கிறது. காலை 10 மணிக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. தலைமையில் மகளிர் கருத்தரங்கமும், பகல் 2 மணிக்கு லட்சுமண் சுருதி வழங்கும் கலைஞரின் 'திரைக்கனித் தேனமுது' (அதாவது முதல்வர் கருணாநிதி பணியாற்றிய படங்களின் பாடல்கள் மட்டும்) இசை நிகழ்ச்சியும் நடக்கின்றன.
மாலை 4 மணிக்கு முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் தலைமை 'நாடுபோற்றும் நம் கலைஞர் வரவாலே நடந்த நிகழ்ச்சியும், விளைந்த புரட்சியும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.
வாழ்த்தரங்கம்.. ரஜினி - கமல் சிறப்பு அழைப்பாளர்கள்!!
மாலை 6 மணிக்கு சங்கத்தமிழ்ப்பேரவை தலைவர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வாழ்த்தரங்கம் நடக்கிறது.
சங்கத் தமிழ்ப்பேரவை நிறுவனச் செயலாளர் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் வரவேற்று பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து மத்திய மந்திரிகள் எஸ்.எம்.கிருஷ்ணா, பரூக் அப்துல்லா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி ஆகியோர் முதல்வர் கருணாநிதியை வாழ்த்திப் பேசுகிறார்கள்.
நிறைவாக முதல்வர் கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார். இத்தகவல்கள் அழைப்பிதழிலும் அச்சிடப்பட்டுள்ளன.
ஒரு வாரத்தில் மூன்றாவது பாராட்டுவிழா!
கடந்த 6-ம் தேதி சினிமாக்காரர்கள் பிரமாண்டமாக பாராட்டு விழா நடத்தினர் முதல்வருக்கு. அடுத்த மூன்று தினங்களில் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வருக்கு திருக்குறள் பேரொளி விருது வழங்கி பாராட்டுவிழா நடத்தப்பட்டது.
அடுத்த நான்கு தினங்களில் இந்த சங்கத் தமிழ்ப் பேரவையின் பாராட்டு விழா நடக்கிறது!


Click it and Unblock the Notifications











