பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் ஓவியம்...அசத்திய கேரள இளம் பெண்
திருவனந்தபுரம் : டைரக்டர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். 1990 கள் துவங்கி தற்போது வரை இசை துறையையும், ரசிகர்களின் மனங்களையும் ஆட்சி செய்து வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதுவரை நூற்றுக் கணக்கான பாடல்கள், இசை ஆல்பங்கள் என இசையமைத்து, ஆஸ்கார் உள்ளிட்ட பல உலக விருதுகளை வென்று விட்டார். சமீபத்தில் 99 சாங்ஸ் மூலம் முதல் முறையாக தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என்ற அவதாரத்தையும் எடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

மனங்களை ஈர்த்த இசைப்புயல்
இசையால் மட்டுமல்ல தனது எளிமை, அடக்கம் ஆகியவற்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை பலரின் மனங்களையும் கவர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், சோஷியல் மீடியாக்களில் போடும் ஒவ்வொரு போஸ்ட்டும் கூட அனைவரையும் ஈர்த்து விடுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் ஓவியம்
இந்நிலையில் சமீபத்தில் ட்வட்டரில் அவர் பதிவிட்டுள்ள தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த சூர்யா என்ற பெண், வித்தியாசமான முறையில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியத்தை உருவாக்கி உள்ளார். இந்த தகவலை தான் ஃபோட்டோவுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பாடல் வரிகளால் ஓவியம்
இந்த ஓவியம் 71 மீட்டர் நீளம், 56 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான புகழ்பெற்ற 391 பாடல்களின் வரிகளை கொண்டு, அவரின் ஓவியத்தை அந்த பெண் வரைந்துள்ளார். ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடல் முதல் பாம்பே படத்தில் வரும் பாடல்கள் வரை இதில் அவர் பயன்படுத்தி உள்ளார்.

சாதனை புத்தகத்தில் இசைப்புயல்
வெறும் பாடல்களை மட்டும் பயன்படுத்தி இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்ல. இந்த ஓவியம் 2021 ம் ஆண்டிற்கான இந்திய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் மிகப் பெரிய Typographic ஓவியம் இது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஸியான இசைப்புயல்
தற்போது ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கி தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பட்ஜெட் படமான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல் உள்ளிட்ட சில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











