அரிதான நோயால் பாதிக்கப்பட்ட இசையமைப்பாளர்… இளம் வயதிலேயே மரணம்… திரையுலகினர் இரங்கல்!
சென்னை: 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரகுராம் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் ரகுராம் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிடாயின் கருணை மனு
2017ல் வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. சுரேஷ் சங்கையா இயக்கத்தில், விதார்த், ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ரகுராம் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமான ரகுராம், சில ஆல்பங்களுக்கு இசையமைத்து பலரது கவனத்தை ஈர்த்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் முன்னணி இசையமைப்பாளர்களிடம் ப்ரோகிராமராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

அரியவகை நோயால் பாதிப்பு
இந்நிலையில், அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், சிறு வயதிலேயே அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ரகுராம் 8ம் வகுப்பு படிக்கும்போதே amyotrophic lateral sclerosis என்ற Geneti நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதே நோயால் தான் மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார் ரகுராம். அவரின் சிகிச்சைக்கு ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருந்ததாகவும், இதனை அவரது தாய் மாமா கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மேலும் ரகுராம் 32 வயது வரை வாழ்வார் என மருத்துவர்கள் கூறியிருந்ததாகவும், ஆனால் அவர் தனது தன்னம்பிக்கையால் 38 வயது வரை வாழ்ந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையிலும் ரகுராம் உயிரிழந்துள்ளார். இளம் இசையமைப்பாளரான ரகுராமின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் ரகுராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திரையுலகில் தொடரும் சோகம்
திரையுலகில் தொடர்ந்து இளம் வயது கலைஞர்கள் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு முன்தினம் கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக பாடகர் பம்பா பாக்யாவும் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். அதேபோல், இன்னொரு பக்கம் திரையுலகினரின் தற்கொலைகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. சென்ற வருடம் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்ததும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











