அயலி வெப்சீரிஸில் இடம்பெற்ற டீட்டெய்லான மாதவிடாய் காட்சிகள்.. இந்த அளவுக்கு வீரியம் அவசியம் தானா?
சென்னை: ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ள அயலி வெப்சீரிஸில் பெண்கள் வயதுக்கு வந்தால் அவர்களை உடனடியாக திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்பதும், வயதுக்கு வந்த பெண்கள் அயலி கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கதை கட்டமைக்கப்பட்ட நிலையில், கதையின் நாயகி தமிழ் அதை எல்லாம் உடைத்து எறிந்து அந்த ஊரை மாற்றினாரா இல்லையா? என்பது தான் அயலி வெப்சீரிஸின் கதையாக உள்ளது.
இதில், பெண்கள் வயதுக்கு வருவதும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ரொம்பவே வீரியமாக இடம்பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.
கோயில்களில் பெண்களை இதே காரணம் காட்டி அனுமதிக்காத நிலை இன்னமும் உள்ள நிலையில், அயலி வெப்சீரிஸ் அந்த இடத்தையே டச் செய்திருப்பது சரியா? தவறா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

அயலி வெப்சீரிஸ்
இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் அபி நக்ஷத்ரா நடித்துள்ள அயலி வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது. வெப்சீரிஸ் என்றாலே ஆக்ஷன் காட்சிகளாலும் போலீஸ் வெப்தொடர்களாகவும் நீண்டு வந்த நிலையில், சமூக அக்கறையுடன் கூடிய பெண்ணியம் பேசும் வெப்சீரிஸாக இந்த அயலி வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. 8 எபிசோடுகள் கொண்ட அயலி வெப்சீரிஸை முதல் எபிசோடு போட்டால் 8 எபிசோடுகளையும் ஒரே மூச்சில் பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாகவும் கன்டென்ட் ரீதியாகவும் இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழா தமிழாவில்
அயலி வெப்சீரிஸ் எடுத்துள்ள கன்டென்ட் ரொம்பவே ஸ்ட்ராங்காக சமூக கருத்துக்களை கொண்டு உள்ள நிலையில், ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியிலே கரு பழனியப்பன் அயலி வெப்சீரிஸில் நடித்த நடிகர்களையும் அந்த படக்குழுவினரையும் வைத்து நிகழ்த்திய நிகழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் பார்க்க
கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் படித்தால் அது எந்த அளவுக்கு ஒரு ஊரை முன்னேற்றும் என்கிற கருத்துக்களை அடுக்கி சொல்லி உள்ள அயலி வெப்சீரிஸை கல்வராயன் மலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.
பண்பாடை காப்பாத்துறேன்னு
பண்பாடை காப்பாத்துறேன்னு இவனுங்க பண்ற அயோக்கியத்தனத்துல நமக்கும் பங்கிருக்கு, நம்ம குடும்ப விஷயத்தில தலையிடும் உரிமையை இவனுங்க கிட்ட கொடுத்துட்டு நாம தான் ஒவ்வொரு முறையும் கஷ்டப்படுறோம். இந்த குரங்கு கூட்டத்தோட பேச்சை கேட்காமல் நமக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்தாலே இவனுங்க காணாம போயிடுவானுங்க என சமூகத்தை வளர விடாமல் தவிர்க்கும் பிற்போக்குவாதிகளை சவுக்கால் அடிக்கும் வசனங்களும் நிறைந்துள்ளன.
இன்க் தான கொட்டிடுச்சு
மேலும், வயதுக்கு வரும் காட்சியை மிகவும் இயல்பாகவும் சிகப்பு இன்க் பாட்டிலை கொட்ட வைத்து பாவாடை மீதுள்ள கறையை பார்த்து பயந்து கொண்டிருக்கும் தமிழை இன்க் தான கொட்டிடுச்சு என அவரது ஆசிரியர் சொன்னதும், நாம சொல்லலனா யாருக்குமே தெரியாது என்பதை புரிந்து கொண்டு அந்த கறையை சட்டை மீது பூசிக் கொண்டு ஊர் முழுக்க நடந்து வரும் காட்சிகள் எல்லாமே சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளன.
மாதவிடாய் பிரச்சனை
வயதுக்கு வந்த பெண்கள் அயலி தெய்வத்தின் கோயிலுக்குள் செல்லக் கூடாது என இருக்கும் தடையை உடைப்பது. மாதவிடாய் என்பது இயற்கையான ஒரு விஷயம் என்பதும் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் துணியை தமிழ் பைக்குள் வைத்துச் சென்று ஒரு கட்டத்தில் அம்மாவிடம் மாட்டிக் கொள்வது, அதன் பின்னர் இது மாதம் மாதம் வரும் பிரச்சனை எப்படிடா மறைப்ப என அம்மா மகளிடம் கேட்டு விட்டு குழம்பி நிற்கும் மகளிடம் அதையெல்லாம் அம்மா பார்த்துக் கொள்கிறேன் என அனுமோள் சொல்லும் காட்சிகள் பெண்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
தீட்டுன்னு ஏதுமில்லை
பின்னர் அப்பா மகள் அந்த துணியை காயப்போடுவதை பார்த்து விட்டு மனைவியை கண்டிப்பது, மனைவி மாதவிடாய் காலத்தில் இருக்கிறாள் என நினைத்துக் கொண்டு மகளை விளக்கேற்ற சொல்வது என மாதவிடாய் பிரச்சனையை ஒரு பெரிய தீட்டாக இந்த சமூக பல ஆண்டுகளாக பார்த்து வரும் நிலையில், அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்றும் தெய்வம் எல்லாம் தண்டிக்காது. இந்த ஆணவம் பிடித்த மனிதர்கள் தான் பெருமையை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் ஆணவக் கொலைகளை செய்து வருகின்றனர் என்றும் ஆணித்தரமாக சொல்லி உள்ளது.

தேவையா தேவையில்லையா
வெப்சீரிஸில் இப்படி வெட்ட வெளிச்சமாக மாதவிடாய் பற்றியும் தீட்டு பற்றியும், வயதுக்கு வருவது போன்ற காட்சிகள் இடம்பெறுவதும் அதீத காட்சிகள் அதை சுற்றியே நகர்வதும் தேவையில்லாத ஒன்று என விவாதங்கள் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ள நிலையில், மூடநம்பிக்கைகள் ஒழித்து பெண்களை எதை சொல்லி முடக்கி வைக்கின்றனரோ அதன் உண்மைத்தன்மை வலுவாக சொன்னால் தான் பலருக்கு புரியும் என்றால் அதை பட்டவர்த்தனமாக இந்த அயலி வெப்சீரிஸில் வெளிச்சம் போட்டுக் காட்டியதில் எந்தவொரு தவறும் இல்லை. செக்ஸ் எஜுகேஷனை விட பெண்கள் தீட்டு இல்லை என்கிற கல்வி இந்த சமூகத்திற்கு மிகவும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











