The Family Man S3: மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ரெடி.. தி ஃபேமிலி மேன் சீசன் 3 ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
மும்பை: தேசிய விருது பெற்ற 'தி ஃபேமிலி மேன்' தொடரின் மூன்றாவது சீசன்அமேசான் பிரைம் வீடியோவில் எப்போது வெளியாகும் என்கிற கேள்விக்கு அட்டகாசமான பதில் கிடைத்துள்ளது. ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மனோஜ் பாஜ்பாய் மீண்டும் ரகசிய ஏஜென்ட் ஸ்ரீகாந்த் திவாரியாக அதிரடி ஆக்ஷனில் களமிறங்கவுள்ளார். தேசத்தைக் காப்பாற்றும் பணியையும், தனது குடும்பப் பொறுப்புகளையும் எப்படி ஸ்ரீகாந்த் சமன் செய்கிறார் என்பதே கதைக்களம்.
இந்த சீசனில் மனோஜ் பாஜ்பாயுடன், ஜெய்தீப் அஹ்லாவத், நிம்ரத் கவுர், ஷாரிப் ஹாஷ்மி, பிரியாமணி, அஷ்லேஷா தாக்கூர், வேதாந்த் சின்ஹா, ஸ்ரேயா தன்வந்தரி, குல் பனாக் போன்ற நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளனர். ஸ்ரீகாந்த் திவாரி என்ற உளவுத்துறை அதிகாரியின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதை, அதிரடி சாகசங்களுக்கும், குடும்பக் கடமைகளுக்கும் இடையில் அலைபாயும் அவரது போராட்டத்தை மையப்படுத்துகிறது.

'தி ஃபேமிலி மேன்' தொடரின் இந்த சீசனை ராஜ் & டி.கே, சுமன் குமார் ஆகியோர் இணைந்து எழுதி, இயக்கியுள்ளனர். இவர்களுடன், இந்த சீசனில் துஷார் சேத் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். சமித் அரோரா இந்த தொடருக்கு வசனங்களை எழுதியுள்ளார். ரசிகர்களின் தொடர் அன்பும் ஆதரவும் தங்களை பெரிதும் ஊக்கப்படுத்தியதாக ராஜ் & டி.கே தெரிவித்துள்ளனர்.
இந்த சீசன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக அமையும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். "இந்த முறை சவால்கள் அதிகமாக உள்ளன. முன்பைவிட அதிக ஆக்ஷன், விறுவிறுப்பான கதைக்களம், மனதை ஈர்க்கும் நடிப்பு என அனைத்திலும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளோம்," என்று ராஜ் & டி.கே தெரிவித்தனர்.
கதைக்களம் குறித்து மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். "இந்த சீசனில், வேட்டையாடுபவன் வேட்டையாடப்படுபவனாக மாறுகிறான். ஸ்ரீகாந்த் தனது தொழில் மட்டுமல்லாது, குடும்பத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ருக்மா என்ற புதிய எதிரியை எதிர்கொள்கிறார். முந்தைய இரண்டு சீசன்களைப் போலவே, நவம்பர் 21 அன்று வெளியாகவுள்ள இந்த சீசனும் உலகளவில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறும்," என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த மூன்றாவது சீசனில் ஸ்ரீகாந்த் திவாரி பல மடங்கு அதிக சவால்களை எதிர்கொள்கிறார். ஜெய்தீப் அஹ்லாவத் 'ருக்மா'வாகவும், நிம்ரத் கவுர் 'மீரா'வாகவும் வலிமையான எதிரிகளாக மனோஜ் பாஜ்பாய்க்கு புதிய சவால்களை உருவாக்குகின்றனர். வெளியில் இருந்து வரும் எதிரிகள் மட்டுமல்லாமல், உள்ளுக்குள்ளேயே மறைந்திருக்கும் சக்திகளிடம் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களை ஸ்ரீகாந்த் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 21ம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது என்கிற அறிவிப்புடன் ப்ரோமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமந்தா இந்த சீசனில் நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்பதே பதிலாக உள்ளது.


Click it and Unblock the Notifications











