டாப் ஹீரோக்களால் ஓடிடியிலும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு பிரச்சினை... யாரை சொல்கிறார் பா ரஞ்சித்?
சென்னை: யோகி பாபு நடித்துள்ள பொம்மை நாயகி என்ற திரைப்படம் பிப். 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஷான் இயக்கியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், பொம்மை நாயகி படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பா ரஞ்சித், ஓடிடி தளங்கள் குறித்தும் பேசினார்.
அப்போது சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை ஓடிடி தளங்கள் புறக்கணிப்பதாக அவர் பேசிய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா ரஞ்சித் தயாரிப்பில் பொம்மை நாயகி
அட்ட கத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான் பா ரஞ்சித், மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் பொம்மை நாயகி என்ற படத்தை தயாரித்துள்ளார். யோகி பாபு லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார். பொம்மை நாயகி திரைப்படம் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஓடிடி தளங்கள் மீது பா ரஞ்சித் வருத்தம்
அப்போது பொம்மை நாயகி திரைப்படம் குறித்து பேசிய பா ரஞ்சித், ஓடிடி தளங்கள் மீதான தனது வருத்தத்தையும் பதிவு செய்தார். அதாவது நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி தளங்களிலும் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே வாங்கப்படுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார். "தற்போதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்களை ஓடிடி தளங்களில் விற்க முடியாது. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற முன்னணி ஓடிடி தளங்கள், ஆண்டுக்கு 12 முதல் 20 படங்கள் வரை வாங்குகின்றனர். ஆனால் அவையனைத்தும் பெரிய நடிகர்களின் படமாக தான் இருக்கின்றன" என்றார்.

சின்ன பட்ஜெட் படங்களை வாங்குவதில்லை
தொடர்ந்து பேசிய அவர், "ஹாட்ஸ்டார் உட்பட மற்ற ஓடிடிகள் சிறிய பட்ஜெட் படங்களை வாங்குவதிலும் பார்ப்பதிலும் இங்கு வெளிப்படைத்தன்மை இல்லை. நீலம் ப்ரொடக்ஷனுக்கு இங்கே கொஞ்சம் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு செல்வாக்குகள் இருப்பதால் என்னால் அவர்களை எளிதாக அணுக முடிகிறது. ஆனால் நிறைய இளம் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை எடுத்துவிட்டு ஓடிடி தளங்களுக்கு விற்பதில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். ஒரு படத்தை தியேட்டருக்கு கொண்டு செல்வதிலேயே இன்று பிரச்சினை உள்ளது" எனக் கூறினார்.

ஓடிடியில் விற்றால் தான் பணம் கிடைக்கும்
மேலும், "கிட்டத்தட்ட 70, 80 லட்சம் செலவு செய்தால் தான் மக்களிடம் சேரும்படி ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியும், இல்லையென்றால் திரையரங்குகள் கிடைக்காது, ஸ்க்ரீன்ஸ் கிடைக்காது. காலை 10 மணி ஷோ கொடுப்பார்கள் அல்லது மக்கள் படம் பார்க்காத தியேட்டர்கள் கொடுப்பார்கள். ஆனால் ஓடிடி தளங்களை நீங்கள் அணுகவே முடியாது. அவர்களை அணுக தமிழ்ச் சூழலில் ஒரு அமைப்பே கிடையாது. பெரிய தயாரிப்பாளர்களாலும் சிறிய தயாரிப்பாளர்களுக்கு உதவ முடியவில்லை. அவர்களும் படங்களை விற்பதே இங்கு பெரிய போராட்டமாக உள்ளது. ஓடிடியில் விற்றால் தான் தயாரிப்பாளருக்கு போட்ட பணம் ஓரளவு வரும், ஆனால் அதுவும் பெரிய ப்ராசஸ். அதற்கு ஒரு படத்தை முடித்து ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக" தெரிவித்தார்.

திரையரங்குகள் தான் ஜனநாயகப்பூர்வமான இடம்
அதேபோல், "ஓடிடி தளங்களைச் சேர்ந்தவர்கள் தான் முதல் விமர்சகர்கள், அவர்கள் படம் பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனால் அது மற்ற ஓடிடி நிறுவனங்களுக்கும் பரவி விடும். முன்பெல்லாம் விநியோகஸ்தர்கள் இப்படி செய்யும்போது படத்தை ரிலீஸ் செய்துவிட சிறு இடமாவது இருந்தது. என்னைப் பொருத்தவரை திரையரங்குகள் தான் ஜனநாயகப் பூர்வமான இடம் என்று நினைக்கிறேன்" என பேசி முடித்தார். பா ரஞ்சித்தின் இந்த கருத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பா ரஞ்சித் இயக்கியிருந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











