தியேட்டர்ல 40 நாள் ஓட்டியும் இரவின் நிழல் OTT ல எப்ப வரும்னு கேக்குறாங்களே.. பார்த்திபன் புலம்பல்!
சென்னை: பார்த்திபன் இயக்கி, நடித்த உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என நெருங்கிய நண்பர்களே தொல்லை செய்வதாக ட்வீட் போட்டுள்ளார் பார்த்திபன்.
கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி வெளியான இரவின் நிழல் இன்னமும் எந்தவொரு ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை.
பார்த்திபனின் அளப்பறிய முயற்சியை காண ஓடிடி ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் அதன் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஒத்த செருப்பு சைஸ் 7
வித்தியாசமான படங்களை புதிய பாதையில் சென்று கொடுத்து வருகிறார் பார்த்திபன். அவர் நடிக்கும் படங்களாகட்டும், இயக்கும் படங்களாகட்டும் ஏதாவது புதுமையாகவும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற முனைப்புடனே இயக்கி வருகிறார். தனி ஒருவனாக அவர் நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் உலக அரங்கில் பல்வேறு பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தன.

சிங்கிள் ஷாட் படம்
சிங்கிள் ஆளாக நடித்து விட்டோம் அடுத்து சிங்கிள் ஷாட்டில் படம் எடுக்கலாம் என யோசித்து, அதனையும் நான் லீனியர் படமாக எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் பார்த்திபன். சிங்கிள் ஷாட்டில் ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என்றும் சில ஹாலிவுட் படங்கள் போல கட்களை மறைத்த சிங்கிள் ஷாட் படமாக இருக்கக் கூடாது என்பதற்காக பார்த்திபன் மட்டும் இல்லை இரவின் நிழல் படத்தில் உழைத்த அத்தனை நடிகர்களும் உயிரைக் கொடுத்து நடித்திருந்தனர்.

நல்ல வசூல்
இரவின் நிழல் படத்தில் பார்த்திபன் உடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், பிரிகிடா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள், பின்னணி இசை மிரட்டின. தியேட்டரில் ஒத்த செருப்பு படத்துக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், இரவின் நிழல் படத்துக்கு நிறையவே ஆதரவு கிடைத்தது. 25 கோடி முதல் 30 கோடி வரை படம் வசூல் செய்திருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடியில் எப்போ
இரவின் நிழல் படத்துக்கு பிறகு வெளியான லைகர், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில், இரவின் நிழல் எப்போ தான் சார் வரும் என பார்த்திபனிடமே அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் நச்சரிக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பார்த்திபன் போட்டுள்ள ட்வீட் கவனத்தை ஈர்த்துள்ளது.

40 நாள் தியேட்டர்ல ஓட்டியும்
"தியேட்டர்ல 40 நாள் Ottட்டும்(ஓட்டிட்டும்) பாக்காம,OTTல தான் பாப்பேன்னு விரும்புர நண்பர்கள் திரும்பர பக்கமெல்லாம் கேள்வி கேட்பது சுகமான சுமை or கனமான சுகமே!வயிற்றிலிருந்து இறக்கினாலும் நெஞ்சில் சுமக்கும் தாய் போல் நானும். ... ott-யில் இறக்கிவிட முயல்கிறேன்.வரும் அதிவிரைவில்." என வெகு விரைவாக ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளார். அதிகபட்சமாக நெட்பிளிக்ஸ் இரவின் நிழல் படத்தை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கருக்கு தேர்வாகவில்லை
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் பார்த்திபனின் இரவின் நிழல் படம் ஆஸ்கருக்கு செல்லும் என எதிர்பார்த்தனர். தமிழில் இருந்தும் இந்த படத்தைத் தான் பரிந்துரை செய்திருந்தனர். ஆனால், குஜாராத்தி படமான செல்லோ ஷோ படம் தான் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











