சுந்தரி கார்டன்ஸ் மூவி விமர்சனம்..தேசிய விருதுக்குப்பின் அபர்ணா பாலமுரளியின் நடிப்பைச் சொல்லும் படம்

சென்னை: தேசிய விருதுக்குப் பின் அபர்ணா பாலமுரளி நடித்து வெளியாகியுள்ள படம் சுந்தரி கார்டன்ஸ். அதற்கு தகுதியானவர் தான் என நிரூபித்துள்ளார்.

மெல்லிய காதல் கதை, அதனுடன் சிறிய அளவு ஊடல் கூடல் என சுந்தரி கார்டன்ஸ் படத்தை அமைதியான காதல் கதையாக, அழகாக நகர்த்திக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம், தமிழில் டப் செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் சோனி லைவ்-ல் வெளியாகி உள்ளது. அமைதியான மன நிலையில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படம் உள்ளது.

அசத்திய அபர்ணா பாலமுரளி

அசத்திய அபர்ணா பாலமுரளி

சூரரைப் போற்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இவருடைய இயல்பான நடிப்பு இவர் மிகச் சிறந்த நடிகையாக வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சூரரை போற்றுப் படத்தில் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அபர்ணா பாலமுரளி எல்லா விதமான ரோல்களுக்கும் பொருந்தக்கூடிய முகஜாடை உள்ளவராக, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக இருக்கிறார். சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது வாங்கிய நிலையில் அபர்ணா முரளி நடித்து வெளிவந்துள்ள படம் 'சுந்தரி கார்டன்ஸ்' என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.

கதை இதுதான்

கதை இதுதான்

சுந்தரி கார்டன்ஸ் என்றவுடன் பெரிதாக எதுவும் கற்பனை செய்யத் தேவையில்லை. கதாநாயகி அவர் குடியிருக்கும் வீட்டின் பெயர் சுந்தரி கார்டன்ஸ், அவருடைய கேரக்டரின் பெயரும் சுந்தரி சாரா மேத்யூஸ். ஒரு பள்ளியில் லைப்ரரியனாக பணிபுரிகிறார் சுந்தரி (அபர்ணா பாலமுரளி) மிகவும் போல்டான ஒரு பெண். புற்று நோயிலிருந்து மீண்டவர், குழந்தைப்பெறுவதிலும் பிரச்சினை இருந்ததால் கணவன் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற்று தாயுடன் வசித்து வருகிறார். ஆனால் அவைகள் எதுவுமே தன்னை பாதிக்காத வகையில் ஜாலியாக, போல்டாக நடந்துக்கொள்கிறார். பள்ளியில் நடக்கும் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு காண்கிறார்.

அழகான பள்ளிக்கூட காட்சிகள், போல்டான அபர்ணா பாலமுரளியின் நடிப்பு

அழகான பள்ளிக்கூட காட்சிகள், போல்டான அபர்ணா பாலமுரளியின் நடிப்பு

இதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேருகிறார் விக்டர் பால் (நீரஜ் மாதவ்). முதல் நாளில் அவர் அபர்ணாவின் செயல்பாடுகளை கண்டு பிரமிக்கிறார். லைப்ரரிக்கு புத்தகம் எடுக்கச் செல்லும் அவர் லைப்ரரி முழுவதும் உள்ள புத்தகங்கள் பற்றிய அபர்ணாவின் அறிவைக் கண்டு மிரண்டு போகிறார். அன்றே அவருக்கு இன்னொரு அனுபவமும் கிடைக்கிறது, பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் காதலிக்கும் கல்லூரி மாணவனால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமாக இருப்பதாக சந்தேகம் வர பள்ளிக்கு தெரியாமல் மாணவியை அழைத்துச் சென்று பிரச்சினைக்கு தீர்வு காண்கிறார். மாணவி கர்ப்பம் இல்லை என்பது தெரிந்து ஏமாற்றிய கல்லூரி மாணவனை சந்திப்பதற்காக மாணவியை அழைத்துச் செல்லும்போது உடன் செல்லும் நீரஜ் மாதவ், மாணவனை அபர்ணா பின்னி எடுத்து அவனை மிரட்டுவதை கண்டு பிரமித்து போகிறார்.

நெருக்கம் காதலாக மலரும் தருணம்

நெருக்கம் காதலாக மலரும் தருணம்

பின்னர் இருவரும் பேசிப்பழகுகின்றனர். அபர்ணாவுக்கு நீர்ஜ் மாதவ் மீது மெல்ல காதல் உண்டாகிறது. ஆனால் நீரஜ் மாதவ் அப்பள்ளியில் வேலை செய்யும் இன்னொரு பெண் ஆசிரியரை காதலிக்கிறார். இதை தெரிந்து அபர்ணா முரளி நொறுங்கிப் போகிறார். இது பற்றி தனது நண்பரின் மகனிடம் சொல்லும் பொழுது அந்த சிறுவன் கொடுத்த யோசனையில் பேஸ்புக்கில் நீரஜ் மாதவனை பற்றி தவறாக பதிவிட்டு அந்த பெண்ணுக்கும் அதை அனுப்பி வைக்கிறார். இதனால் அந்தப்பெண் நீரஜ் மாதவ்வை வெறுக்க அபர்ணாவிடம் வந்து புலம்புகிறார் நீரஜ் மாதவ். பின் அபர்ணாவும், நீரஜ் மாதவ்வும் மீண்டும் நெருங்கி பழகுகிறார்கள். இந்நிலையில் அபர்ணாவின் தாயார் இறந்து விடுகிறார். அந்த துக்கத்தில் இருக்கும்போதே சகோதரன் வீட்டை விற்று பாகத்தை பிரிக்க நெருக்குகிறான்.

நாயகனின் தாயாரால் அடையும் அவமானம்

நாயகனின் தாயாரால் அடையும் அவமானம்

இதனால் உடைந்து போகிறார் அபர்ணா. அந்த நேரத்தில் நீரஜ் ஆறுதலாக இருக்கிறார். நீரஜ்ஜிடம் தான் விவாகரத்து ஆனது குறித்தும், கேன்சரிலிருந்து மீண்டது, குழந்தை பெற முடியாத நிலை பற்றி அபர்ணா சொல்கிறார். அந்த வாரம் ஈஸ்டர் பண்டிகைக்கு தன் வீட்டுக்கு அபர்ணாவை அழைத்துச் செல்கிறார் நீரஜ் மாதவ். அவரது குடும்பம் மிகப்பெரிய குடும்பம், கலகலப்பான குடும்பம், அப்பா முற்போக்கு எண்ணம் கொண்டவர். நீரஜ்ஜின் தங்கைக்கும் அபர்ணாவை பிடித்து போகிறது. ஆனால் நீரஜ்ஜின் தாயார் அபர்ணாவை விசாரிக்கும் போது அவர் விவாகரத்தானவர் என்று தெரிந்து அவரை தனியே அழைத்துச் சென்று என் மகனை மணக்கும் எண்ணம் ஏதாவது இருந்தால் விட்டு விடு என்று கோபமாக சொல்கிறார். இதனால் அவமானம் அடைந்த அபர்ணா அன்றே வீட்டுக்கு திரும்பி விடுகிறார்.

அவமானம், மன உளைச்சல், காதலனின் கோபம்

அவமானம், மன உளைச்சல், காதலனின் கோபம்

வீட்டிற்கு திரும்பும் அவரிடம் வாசலிலேயே சகோதரன் வீட்டை சொத்தை பிரித்துக் கொள்ள சொல்லி சண்டை போட மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டுக்குள் செல்கிறார். இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறாக முகநூலில் பதிவிட்டது அபர்ணா தான் என தனது போலீஸ் நண்பன் மூலம் தெரிந்துக்கொள்கிறார் கதாநாயகன் நீரஜ். ஆத்திரத்துடன் அவர் வீடு தேடி வந்து அபர்ணாவை கடுமையாக திட்டுகிறார். அபர்ணா அவரிடம் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு உன்னை காதலிப்பதால் தான் இவ்வாறு நடந்து கொண்டேன் என்னை மன்னித்துவிடு என்று சொல்ல அதை ஏற்க மறுக்கிறார் நீரஜ். தன்னுடைய பழைய தோழியிடம் நட்பை தொடர்கிறார்.

காதலனின் புறக்கணிப்பு, மன உளைச்சல் ஊரைவிட்டே செல்லும் நாயகி

காதலனின் புறக்கணிப்பு, மன உளைச்சல் ஊரைவிட்டே செல்லும் நாயகி

ஒருபுறம் தாயார் இறப்பு, மறுபுறம் சகோதரனின் சொத்து பிரச்சனை, தற்போது ஒரே ஆதரவான காதலனும் பிரிய அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சகோதரனிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார் அபர்ணா. மாற்றலாகி சென்ற அபர்ணா என்ன ஆனார், நீரஜ்ஜுக்கு உண்மை தெரிந்ததா, அபர்ணாவும் நீரஜ்ஜும் சேர்ந்தார்களா? அல்லது என்ன ஆனது என்பதை அழகாக பிற்பாதியில் காட்சிப்படுத்தியுள்ளார் புதுமுக இயக்குநர் சார்லஸ் டேவிஸ். ஒரு மெல்லிய நீரோட்டம் போன்ற ஒரு காதல் கதையை கொடுத்துள்ளார் இயக்குனர்.

படத்தின் பிளஸ்

படத்தின் பிளஸ்

படத்தின் பிளஸ் என்று பார்த்தால் படம் முழுவதும் வரும் அபர்ணா பாலமுரளியின் நடிப்பைச் சொல்லலாம். வெகு இயல்பாக அதிலும் மலையாள படங்களில் கேமரா மேன்கள் வைக்கும் நுண்ணிய காட்சிகளில் முகபாவங்களை வெளிப்படுத்தும் விதம், நீரஜ் மாதவிடம் காதல் வயப்படும் பொழுதும், உறுதியான ஒரு பெண்ணாக நடிக்கும் காட்சியிலும், காதலன் நீரஜ் மாதவ் வேறொரு பெண்ணை விரும்புவதைக் கண்டு மனதுக்குள் புழுங்கும் காட்சிகளிலும், பின்னர் தான் தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் காதலனிடம் மன்னிப்பு கேட்கும் காட்சிகளிலும், தாயார் மறைவு, சகோதரன் பிரச்சனை, காதலின் முடிவு என பல பிரச்சினைகளை சந்தித்த ஒரு பெண் எப்படி இயங்குவாள் என்பதை மிக அழகாக நடித்துள்ளார்.

ரம்மியமான கேமரா, பின்னணியில் ஒலிக்கும் பாடல் சிறப்பு

ரம்மியமான கேமரா, பின்னணியில் ஒலிக்கும் பாடல் சிறப்பு

கதாநாயகன் நீரஜ் மாதவ் ஏற்கனவே பல படங்களில் அறிமுகமானவர். அவரும் தனது பங்குக்கு அழகாக செய்துள்ளார். படத்தின் முக்கிய விஷயமே ஒரு அழகான காதல் கதையை மெல்லிய நீரோட்டம் போன்ற ஒரு சூழலில், மிக அழகாக சிறிதளவும் யார் மீதும் தவறு இல்லாத வகையில், அழகாக காட்சி அமைப்புகளுடன் கொண்டு சென்று உள்ளார் புதுமுக இயக்குனர் சார்லஸ் டேவிஸ். திரைக்கதையும் அவரே. இது அவருடைய முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை. சார்லஸ் டேவிஸின் எண்ணத்திற்கு ஏற்ப கேமராவும், பின்னணி இசையும் அழகாக கோர்க்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஹீரோ. ஹீரோயின் சந்திக்கும் காட்சிகளில் பின்னணியில் இசைக்கும் மெல்லிய பாடல் நம் மனதை வருடி செல்கிறது. கேரளாவை அழகழகாக காட்சி பிடித்து அதனுள் காதலர்களை நடமாட விட்டு, உடன் மெல்லிய பாடலையும் நம் மனதை வருடும் வகையில் இசைக்க விட்டு ஒரு கலவையான விருந்தை படைத்துள்ளார் இயக்குநர்.

படத்தின் மைனஸ்

படத்தின் மைனஸ்

படத்தின் மைனஸ் என்று பார்த்தால் பெரிய அளவில் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் ஹீரோ, ஹீரோயின் இருவரும் அடிக்கடி மது அருந்தும் காட்சிகள் மலையாள படங்களில் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் தமிழ் படங்களில் எத்தகைய விஷயங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மற்றொருபுறம் உறுதியான ஒரு பெண்ணாக அபர்ணா பாலமுரளியை காட்டும் இயக்குனர் திடீரென பள்ளிக்கு வரும் ஒருவர் மீது உடனடியாக காதலில் விழுந்து விடுவது போல் காட்டுவது ஏற்கத்தக்கதாக இல்லை. நீரஜ் மாதவ் சிறப்பானவர் என்பதற்கான எந்த காட்சி பதிவுகளும் படத்தில் இல்லை. அவர் பாட்டுக்கு வருகிறார், பேசுகிறார், போகிறார் இது திருமணமாகி விவாகரத்தான, ஒரு போல்டான பெண்மணிக்கு மனதை மாற்றும் விஷயமா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம். இதுபோன்ற அழுத்தம் இல்லாத காட்சிகள் படத்தில் பல இடங்களில் வருகிறது. பழத்தின் திரைக்கதை நீளத்தை குறைக்க வேண்டும், வேகமாக கதையை சொல்லிவிட வேண்டும் என்பதற்காக இத்தகைய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கலாம்.

நம்பி பார்க்கலாம்

நம்பி பார்க்கலாம்

சில சில குறைகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால் மிக அழகான காதல் கதை என்று சொல்லலாம். விவாகரத்தான பெண் மறுமணம் போன்ற சில முற்போக்கான விஷயங்களும் இந்த கதையில் உள்ளது. தமிழில் அழகாக டப்பிங் செய்திருந்தாலும் பாடல் வரிகளை மிக அழகாக அதே இசையுடன் ஒலிக்க விடுவது சிறப்பான ஒன்று. அபர்ணா பாலமுரளி தேசிய விருது பெற்றதற்கு தகுதியானவர்தான் என்பதை இந்த படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். ஒரு மெல்லிய காதல் உணர்வு கொண்ட படத்தை பார்த்த திருப்தி ஒரு மன அமைதி இந்த படத்தை பார்க்கும் வாசகர்களுக்கு கிடைக்கலாம். நம்பி பாருங்க, ஏமாத்த மாட்டாங்க. இந்த படம் ஓடிடி தளத்தில் சோனி லைவ்-ல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X