Aaryan Review: ஆரியன் விமர்சனம்.. விஷ்ணு விஷாலுக்கு வெற்றியா?.. வீண் முயற்சியா?
சென்னை: விஷ்ணு விஷால் எப்படியாவது ராட்சசன் படத்தை போல இன்னொரு வெற்றிப் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என்கிற வெறியுடன் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அவரை வசமாக வளைத்துப் போட்டு இப்படியொரு சீரியல் கொலை த்ரில்லர் கதையை சொல்லி இயக்குநர் பிரவீன் இந்த படம் கண்டிப்பாக பெரிதாக வொர்க்கவுட் ஆகும் என நம்ப வைத்துவிட்டார் என்று தான் தோன்றுகிறது.
வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற விஷ்ணு விஷாலின் முயற்சி இந்த முறை எந்தளவுக்கு அவருக்கு கைகொடுத்துள்ளது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

இந்த படம் ராட்சசன் இல்லை என பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில், படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது ரசிகர்களும் கண்டிப்பாக இது ராட்சசன் இல்லை என்பதை வேறு டோனில் சொல்லிக் கொண்டு வரும் நிலை தான் ஏற்பட்டுள்ளது.
ஆரியன் கதை: பெரிதாக சோபிக்காத எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்), நயனா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) நடத்தும் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அங்கே உள்ள நபர்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து, தான் 5 பேரை கொல்லப் போவதாக சவால் விடுகிறார். அதில், முதல் ஆள் அந்த டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் இருப்பவர் என்கிற க்ளூவும் கொடுக்கப்பட்டு முதல் கொலை அரங்கேறுகிறது. அடுத்தடுத்து கொல்லப்படும் நபர்களின் பெயர் பட்டியல் காவல் அதிகாரியான டிசிபி நம்பியிடம் (விஷ்ணு விஷால்) கிடைக்க அந்த சீரியல் கொலைகளை தடுக்க நாயகன் என்ன செய்தார்? அந்த கொலைகளுக்கான காரணம் என்ன? செல்வராகவன் கதாபாத்திரத்தின் முக்கிய மோட்டிவ் என்ன? என்பது தான் இந்த ஆர்யன் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: ஆரம்பத்தில் அழகராக செல்வராகவன் வந்து அடுத்தடுத்து சீரியல் கொலைகள் நடக்கப் போவதை சொல்லும் இடங்களில் எல்லாம் அடுத்த ராட்சசன் படத்தை விஷ்ணு விஷால் கொடுத்து விட்டார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் அமர்ந்திருக்க, படத்திற்குள் விஷ்ணு விஷால் வந்த பிறகு படம் தனது வேகத்தை மொத்தமாக இழந்து விடுவது தான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
மேலும், படத்தின் மையக்கரு மற்றும் கொலைக்கான மோடிவ் என இயக்குநர் சொல்ல வந்த கதையை எப்படி ஏற்றுக் கொண்டு விஷ்ணு விஷால் இந்த ஆரியன் படத்தை ஓகே சொல்லி நடித்தார் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.
ஒரு அநியாயத்துக்கு இன்னொரு அநியாயம் தான் தீர்வு என்பது போல இந்த படத்தின் கதையையும் திரைக்கதையையும் இயக்குநர் உருவாக்கி வைத்துள்ளார். அந்த விஷயம் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு கனெக்ட் ஆகும் என்பதை பொறுத்துதான் இந்த ஆரியன் வெற்றி பெறும். ஆனால், நமக்கு அது பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.
பிளஸ்: விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக வரும் மானசா செளத்ரி என நடிகர்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. சீரியல் கில்லர் கதை என்பதால் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் பணியும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம்.
மைனஸ்: படத்தின் மையக் கருவின் நியாயம் பாராட்டுக்களை பெற்றாலும், அதை திரைக்கதையாக மாற்றி அமைத்த இடத்தில் இயக்குநர் மற்றும் அவரது குழு ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது என்று தான் தோன்றுகிறது. சீரியல் கில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கும், வித்தியாசமான திரைக்கதை படங்களை தேடிப் பிடித்து பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும் இந்த ஆரியன் நிச்சயம் பார்க்கக்கூடிய படமாகவே இருக்கும்.
குறிப்பு: தமிழ் பிலிமிபீட் யூடியூப் சேனலில் ரஞ்சித் கண்ணன் ஆரியன் படத்துக்கு கொடுத்த விமர்சனத்தை இந்த வீடியோவில் காணலாம்.


Click it and Unblock the Notifications











