Anel Meley Pani Thuli Review: வேலியே பயிரை மேய்ந்தால்.. ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி விமர்சனம்!
நடிகர்கள்: ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள்
இசை: சந்தோஷ் நாராயணன்
இயக்கம்: கெய்சர் ஆனந்த்
ஓடிடி: சோனி லைவ்
சென்னை: படிப்பறிவு இல்லாத காட்டுமிராண்டிகளாக மனிதர்கள் இருந்த நிலையெல்லாம் மாறி இலவசமாக கூட கல்வி கொடுத்து படிக்க வைத்தாலும், வளர்ந்து பெரிய பதவிகளுக்கு சென்றாலும், பெண்களை ஒரு காமப் பொருளாகவே பார்க்கும் எண்ணம் ஒழியாத வரை பெண்கள் வாழ்வு அனல் மேலே பனித்துளி போலத்தான் அனுதினமும் வெந்து மடியும்.
இயக்குநர் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் மற்றும் அழகம் பெருமாள் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் நேரடியாக சோனி லைவ்வில் வெளியாகி உள்ளது.
3 பெரிய பதவியில் இருப்பவர்களால் பலாத்காரம் செய்யப்படும் மதி (ஆண்ட்ரியா) அவர்கள் மூவரையும் சட்டத்திற்கு முன்பு நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.. விரிவான விமர்சனத்திற்குள் செல்வோம் வாருங்கள்..
அனல் மேலே பனித்துளி
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி என்கிற பாடல் வரிகளையே தலைப்பாக இயக்குநர் இந்த கதைக்கு தேர்வு செய்த விதத்திலேயே பாராட்டுக்களை பெறுகிறார். படு போல்டான கதை ஹீரோயினையே பலாத்காரம் செய்றாங்க அதில் போல்டாகவும் மெச்சுரீட்டியான நடிப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என ஆண்ட்ரியாவை தேர்வு செய்த விதத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்.
ஆண்ட்ரியா மிரட்டல்
ஸ்போர்ட்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படும் டெக்லத்தானில் வேலை பார்க்கும் மதியாக இந்த படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவரை காதலிக்கும் நபராக ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார். சக பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் ஒரு தலை காதல் பிரச்சனை, மிரட்டல் உள்ளிட்டவற்றை எடுத்து குரல் கொடுக்கும் வீரப் பெண்ணாகவே ஆரம்பத்தில் இருந்தே காட்டப்பட்ட விதம் அவருடைய கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு தெளிவாக புரிய வைக்கிறது.
3 பேரால் பலாத்காரம்
கொடைக்கானலுக்கு தனது தோழி ஒருவரின் திருமணத்திற்கு செல்லும் மதி சன் செட் வியூ பாயிண்ட்டில் அதன் அழகை ரசித்தப்படியே நேரம் போனது கூட தெரியாமல் தனிமையில் பார்த்துக் கொண்டிருக்க திடீரென மயக்கமடைகிறார். அவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் பலாத்காரம் செய்கின்றனர். மயக்க நிலையில், முகம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், அவர்களின் சில அடையாளங்கள் மட்டும் மதிக்கு நினைவில் இருக்கிறது.
காவல் நிலையத்தில் புகார்
ஆடைகள் கிழிக்கப்பட்டு காட்டில் அலங்கோலமான நிலையில் இருந்து எழுந்து ஒரு மருத்துவமனைக்கு வரும் ஆண்ட்ரியா சில மருந்துகளை கேட்க, இது போலீஸ் கேஸ் ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துடுங்க என அறிவுறுத்துகின்றனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு ஆண்ட்ரியா செல்ல, அங்கே அழகம் பெருமாள் காவல் அதிகாரியாக உள்ளார்.
அடித்து விசாரணை
இதற்கு முன்னதாக ஆண்ட்ரியா சில பெண்களுக்கு உதவி செய்தார் அல்லவா? அவர்களுக்கு தொல்லை கொடுத்த ஆண்கள் குற்றவாளிகளா? என்கிற கோணத்திலும், அதிலும் ஒருவன் கொடைக்கானல் வந்திருந்த விஷயத்தை சொல்ல, அவனை பிடித்து அடித்து விசாரிக்கின்றனர். ஆனால், அவர்கள் இல்லை என்பதை ஆண்ட்ரியா புரிந்து கொள்கிறார்.
வேலியே பயிரை மேய்ந்தால்
தன்னை பலாத்காரம் செய்தவர்கள் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆண்ட்ரியா அந்த ஸ்டேஷனில் உள்ள அழகம் பெருமாள் உள்ளிட்ட மூன்று போலீஸார் தான் தன்னை பலாத்காரம் செய்தனர் என்பதை புரிந்து கொள்கிறார். அங்கே உள்ள பெண் போலீஸ் அனுபமா குமாரிடம் சொல்ல, ஆண்கள் என்றாலே அப்படித்தான்மா உனக்கு நான் நீதி வாங்கித் தருகிறேன் என போலீஸ் நிலையத்திலேயே அவரை அடைத்து வைத்து விட்டு செல்ல, அந்த மூன்று பேரும் மீண்டும் ஆண்ட்ரியாவை சித்ரவதை செய்து ஆடைகளை அவிழ்த்து வீடியோ எடுத்து வெளியே சொன்னால் அவ்வளவு தான் இதை லீக் செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர்.
கிளைமேக்ஸ் என்ன
சென்னைக்கு திரும்பும் ஆண்ட்ரியா வக்கீல் ஒருவரை வைத்து வழக்கு தொடர்கிறார். ஆதவ் கண்ணதாசன் வீட்டில் இந்த பெண் வேண்டாம் என சொல்கின்றனர். இதையெல்லாம் கடந்து அந்த வழக்கில் 3 பேருக்கும் ஆண்ட்ரியா தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இந்த விஷயம் தெரிந்த பின்னர் ஆதவ் கண்ணதாசன் ஆண்ட்ரியாவை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா என்பது தான் அனல் மேலே பனித்துளி படத்தின் கிளைமேக்ஸ்.
பிளஸ்
ஆண்ட்ரியாவின் நடிப்பு தான் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிச் செல்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு ஆண்ட்ரியாவின் துடிப்புகளை தெளிவாக ரசிகர்களுக்கு காட்டி பயத்தையும் பரிதாபத்தையும் வரச் செய்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பெண்ணின் உடலை வெளியே அம்பலப்படுத்தி விட்டால் மானம் போய்விடும் என்றும் மானம் தான் உயிரை விட முக்கியம் என்றும் சொல்லி சொல்லியே பெண்களை முடக்கி வைத்திருக்கும் சமூகத்தின் மனசாட்சியை சில இடங்களில் வசனம் மூலம் உலுக்கி எடுத்து இருக்கிறார் இயக்குநர். நான் வாழ்ற வாழ்க்கையில் தான் என் மானம் இருக்கும் என் நிர்வாண உடம்பில் இல்லை என ஆண்ட்ரியா வசனம் பேசும் காட்சிகள் பலம்.
மைனஸ்
அந்த பெண் போலீஸ் அனுபமா ஆண்ட்ரியாவை அங்கேயே விட்டுச் சென்றது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. அவங்க வீட்டிற்கு கூட அழைத்துச் சென்றிருக்கலாம். இல்லை மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்திருக்க வேண்டும். அதே போல கிளைமேக்ஸ் காட்சியில் நீதிபதியும் ஆண்ட்ரியாவும் பேசும் வசன காட்சிகள் பாடம் எடுப்பது போன்ற உணர்வை தருகிறது. இப்படி சில குறைகளை தவிர்த்து விட்டு படத்தை பார்த்தால் பெண்களின் வலி மண்டைக்குள் உரைக்கும். குழந்தைகளுடன் படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











