Ayali Web Series Review: வயசுக்கு வந்ததையே மறைத்து ஊரைத் திருத்த போராடும் தமிழ்.. அயலி விமர்சனம்!
நடிகர்கள்: அபி நக்ஷத்ரா, அனுமோள், சிங்கம்புலி, லிங்கா
இசை: ரேவா
இயக்கம்: முத்துக்குமார்
ஓடிடி: ஜீ5
சென்னை: 2.30 மணி சினிமாக்களே முதல் பாதி நல்லா இருக்கு, ரெண்டாவது பாதி ரொம்ப லேக் என ரசிகர்களை 100 கோடி நாயகர்களின் சமீபத்திய படங்கள் படுத்து எடுத்தி வரும் நிலையில், 4.30 மணி நேரம் 8 எபிசோடுகள் ஒரே மூச்சில் பார்க்க வைத்து விடுவதிலேயே அயலி பாஸ் ஆகி விட்டாள்.
500 வருஷ பழமையான அயலி தெய்வத்தை டைட்டிலாக வைத்தது மட்டுமின்றி கிளைமேக்ஸிலும் கொண்டு வந்து நிறுத்தியது இயக்குநர் முத்துக்குமாரின் கெட்டிக்காரத்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.
வயசுக்கு வந்துவிட்டால் படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைத்துவிடும் ஒரு ஊரில் வயதுக்கு வந்ததையே மறைத்து டாக்டருக்கு படிக்க போராடும் பெண்ணாக அபி நக்ஷத்ரா ஒவ்வொரு காட்சிகளிலும் போல்டாக நடித்துள்ளார். ஆபாசமாக நடிப்பது தான் போல்ட் என நினைத்துக் கொண்டிருக்கும் நடிகைகள் சற்றே இந்த சிறுமியின் நடிப்பை பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.
அயலி கதை
ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள அயலி வெப்சீரிஸ் பெண் கல்வியின் தேவையை உணர்த்துவது மட்டுமின்றி ஆணவக் கொலைகளையும் அசைத்துப் பார்க்கிறது. 500 வருஷத்துக்கு முன்பாக அயலி தெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகும் மக்கள் அந்த ஊரை விட்டு வேறு இடத்துக்கு புலம் பெயர்ந்தாலும் அவர்களின் வழக்கத்தை கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ளவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரபண்ணை எனும் பின் தங்கிய ஊரில் தான் அயலி வெப்சீரிஸ் கதை முழுவதுமே நடக்கிறது.
பெண்களுக்கு கட்டுப்பாடு
அந்த ஊரில் பெண்களை ஆண்கள் பாசத்தாலும், கடவுள் பெயர் சொல்லியும் அடிமைகளாக நடத்தி வருகின்றனர். பெண் பிள்ளைகள் அதிகபட்சம் 9ம் வகுப்பை தாண்டுவதில்லை. வயதுக்கு வந்து விட்டால், உடனடியாக திருமணம் செய்து வைத்து விடுவது, அந்த ஊரை தாண்டி வயதுக்கு வந்த பெண்களை வெளியே அனுப்பக் கூடாது. வெளியாட்களுக்கு ஊரில் இடமில்லை என ஏகப்பட்ட பிற்போக்குத் தனங்கள் நிறைந்த கிராமத்தை 90 காலக் கட்டங்களில் நடக்கும் கதையாக இயக்குநர் காட்டி இருக்கிறார். இன்னமும் பல இடங்களில் இதே போன்ற பிற்போக்குத் தனங்கள் நிலவி வருவதை திரைக்கதை வழியாக சவுக்கால் அடித்தது போல வசனங்களையும், திரைக்கதையையும் வைத்து இயக்கி உள்ளார் இயக்குநர்.
வயதுக்கு வந்ததையே மறைத்து
சிறுமியாக நடித்துள்ள அபி நக்ஷத்ராவின் தோழி ஒருத்தி வயதுக்கு வருவது அதன் பின்னர் அவள் படும் அவஸ்த்தை. படிப்பை நிறுத்துதல் உள்ளிட்டவற்ற பார்த்து வளரும் தமிழ்ச்செல்விக்கு 10ம் வகுப்புக்கு கூட போகாத ஊரில் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்கிற ஆசை முளைக்கிறது. ஆனால், காலம் கனிந்தால் பூப்படைவது இயல்பு தானே, அப்படி ஒருநாள் வயதுக்கு வரும் தமிழ்ச்செல்வி சிகப்பு இன்க் விபத்தாக அவள் மீது கொட்ட, அந்த ஊர் முழுவதும் 'இன்க்' என சொல்லிக் கொண்டு தனது சட்டையில் கூட அதை பூசிக் கொண்டு நடந்து வீட்டுக்கு செல்லும் காட்சிகள் அற்புதம். நாம சொன்னதான் தெரியும் போல, அம்மா, அப்பா கூட கண்டுபிடிக்கல, இனிமே இப்படியே இருந்தா படிக்கலாமே என வயதுக்கு வந்த விஷயத்தையே மறைத்து வாழ முற்படுகிறாள்.
ஆணாதிக்கம்
ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தாலும் கூட அந்த ஊர்க்காரர் என்பதால் அவர் புத்தி பெண்கள் மீது அப்படித்தான் இருக்கும் என்பதை காட்டுவது. பாசமாக குழந்தையை வளர்த்தாலும் ஆணாதிக்கத்தால் பெத்த மகளையும் மனைவியையும் கொல்ல முற்படுவது. அயலி சாமியை வைத்தே போடப்பட்ட அடிமைத்தனத்தை அந்த அயலி தெய்வத்தை வைத்தே மதியால் விதியை வெல்லும் முயற்சிகளில் தமிழ்ச்செல்வி செயல்பட்டு வர சாமி கோபத்தால் ஊர் எரிஞ்சிடுஞ்சு என வில்லன் மீண்டும் அந்த ஊர் பெண்களை அடக்க முற்படுவது என காட்சிகளும் வசனங்களும் ஆணாதிக்க புத்தியின் மீது தமிழ்ச் செல்வி கடைசியாக செவிலில் அறைவது போன்றே அறைகிறது.
குழந்தை திருமணம், கல்வி
வயதுக்கு வந்தவுடனே பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் நிகழும் பிரச்சனைகள், கல்வி ஒரு பெண்ணை மட்டுமின்றி ஊரையே எப்படி மாற்றுகிறது, பெண்களை கெளரவப் பொருளாக்கி நடக்கும் கெளரவக் கொலைகள், அடிமைத் தனம் என ஏகப்பட்ட சமூக கருத்துக்களை பாடமாக நடத்தாமல் வாழ்க்கையாக கடத்திய இடத்தில் அயலி அசத்துகிறாள்.
பெண்கள் மீது பாசமா காட்டுறீங்க
அப்பா உன்னை எப்படி பாசமா வளர்த்தேன் என கையில் அருவா வைத்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வா என கொந்தளிக்கும் காட்சியில் அருவி மதன் அசத்துகிறார். அப்போ அந்த காட்சியில், நீங்கள் என் மீது காட்டியது பாசம் அல்ல. குழந்தை பிறந்து விட்டாள் அது ஆணுக்கு கெளரவம். இல்லை என்றால் ஊர் தப்பா பேசும். பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பது கெளரவம். பெண்கள் சுயமாக சிந்தித்து செயல்பட்டால் அவர்களை கொன்று நீ நல்லவன்னு ஊருக்கு உன் கெளரவத்தை காட்ட நினைக்கிற இது பாசம் கிடையாது அப்பா என தமிழ்ச்செல்வி பேசும் வசனங்கள் சமூகத்திற்கு தேவையான பாடம்.
பார்க்க வேண்டிய வெப்சீரிஸ்
மகளின் நிலை தெரிந்ததும் உதவும் அம்மா அனுமோல் சிலிர்க்க வைக்கிறார். கிராமத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் தேர்ந்தெடுத்து முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்திருப்பதை பார்த்தாலே நிறைவாக உள்ளது ரேவாவின் இசை, ராம்ஜியின் ஒளிப்பதிவு என டெக்னிக்கல் ரீதியாகவும் இந்த வெப்சீரிஸ் வெயிட்டு காட்டுகிறது. இதில், நெகட்டிவை தேடுவதை விட இதில் உள்ள ஏராளமான பாசிட்டிவ்களுக்காக தாராளமாக குடும்பத்துடன் இந்த வெப்சீரிஸை அனைவரும் பார்த்து ரசிக்கலாம்!


Click it and Unblock the Notifications











