Ayogya Review: பொண்ணுங்கள நாசம் பண்ணா உடனே தூக்கு தான்...மெசேஜ் சொல்லும் அயோக்யா! விமர்சனம்
ஒரு கெட்ட போலீஸ் நல்லவனாக மாறி, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் படம் தான் அயோக்யா.
Recommended Video
சென்னை: ஒரு கெட்ட போலீஸ் நல்லவனாக மாறி, பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் படம் தான் அயோக்யா.
சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட ஆதரவற்ற சிறுவனான விஷால், திருட்டு தொழில் செய்யும் ஆனந்த்ராஜிடம் வளர்கிறார். ஒரு நாள் ஆனந்த்ராஜை ஒரு போலீஸ்காரர் புரட்டி எடுக்க, போலீஸ் தான் கெத்து எனும் எண்ணம் விஷாலுக்கு வருகிறது.

அப்புறம் என்ன பற்பல திருட்டு வேலைகள் செய்து போலீஸ் அதிகாரி ஆகிறார். தூத்துக்குடியில் கேடுகெட்ட போலீஸ் இன்ஸ்ட்பெக்டராக பணிபுரியும் விஷாலின் உதவி சென்னையில் தாதாவாக இருக்கும் பார்த்திபனுக்கு தேவைப்படுகிறது. தனக்கு வேண்டிய அமைச்சரின் உதவியுடன் விஷாலை சென்னைக்கு மாற்றம் செய்து, அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கிறார் பார்த்திபன்.
கிரிமினலான பார்த்திபனும், கேடுகெட்ட போலீசான விஷாலும் சேர்ந்து, ஊரை அடித்து உலையில் போடுகிறார்கள். ஆனால் விஷாலின் நடவடிக்கை, நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் கே.எஸ்.ரவிக்குமாருக்கு எரிச்சலை வரவைக்கிறது.

இதற்கிடையே ராஷி கண்ணா மீது விஷாலுக்கு கண்டதும் காதல் வருகிறது. யோகி பாபு மூலம் சில பல சித்து வேலைகள் செய்து, ராஷி கண்ணாவையும் காதலில் விழவைக்கிறார். உடனே டூயட் பாடுகிறார்கள்.
இந்நிலையில், பூஜா தேவரியாவுக்கு பதிலாக ராஷி கண்ணாவை கொல்லப்பார்க்கிறார் பார்த்திபன். விஷாலின் காதலி தான் ராஷி கண்ணா என்றதும் விட்டுவிடுகிறார். இருப்பினும், யார் என்றே தெரியாத பூஜா தேவரியாவை காப்பாற்றும்படி விஷாலிடம் கேட்கிறார் ராஷி.

காதலியின் அன்பு கட்டளைப்படி பூஜா தேவரியாவை காப்பாற்றுகிறார் விஷால். அப்போது, விஷாலின் ஈகோவை பார்த்திபன் சீண்டிவிட, இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. இதையடுத்து, நல்ல போலீசாக மாறி விஷால் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுத்தாரா? பூஜா தேவரியாவின் பின்னணி என்ன? பாலியல் குற்றத்துக்கு உடனே தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விஷால் ஏன் வலியுறுத்துகிறார்? என பல கேள்விகளுக்கு விடைத்தேடி பயணிக்கிறது படம்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான டெம்பர் படத்தை தான், லேசாக பட்டி, டிங்கரிங் பார்த்து தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன். ஆரம்பத்தில் கெட்டவனாக இருக்கும் ஹீரோ, இறுதியில் நல்லவனாக மாறி இந்த சமுதாயத்துக்கு என்ன நல்லது செய்கிறான் என்பது தான் படத்தின் கதை. இதுபோன்ற நிறைய படங்கள் ஏற்கனவே தமிழில் வந்திருக்கின்றன. ஆனால் போலீசாக வரும் ஹீரோ, படம் முழுக்க கெட்டவனாக வருவது நமது ஆடியன்சுக்கு புதுசு.

படம் சொல்ல வரும் செய்தி சமூகத்துக்கு மிகவும் அவசியமானது. ஆனால் அதை சொன்னவிதத்தில் தான் மசாலா நெடி மிக அதிகமாக இருக்கிறது. மூளைக்கு வேலையே கொடுக்காமல், அயோக்யாவை ஒரு கமர்சியல் சினிமாவாக மட்டும் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம்.
படத்தின் பலம் கடைசி 10 நிமிடங்கள் தான். கோர்ட் அறையில் விஷால் கேட்கும் கேள்விகள், நமது இந்திய சட்டத்திட்டங்கள் மீது ஆணியாய் பாய்கிறது. க்ளைமாக்ஸ் காட்சி உருக்கமாக இருக்கிறது.
கேடுகெட்ட போலீஸ் அதிகாரியாக வரும் விஷால், அந்த கதாபாத்திரத்தின் மீது கோபம் வரும் அளவுக்கு நடித்திருக்கிறார். வழக்கம் போல் ஆக்ஷன் காட்சிகளில் பட்டய கிளப்புகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோயிச இமேஜை உடைத்தெறிந்ததற்கு பாராட்டத்தக்கது விஷால். தெலுங்கு ஹீரோக்களுக்கு இந்த துணிச்சல் வராது.
வில்லனாக வரும் பார்த்திபன், தனது வழக்கமான நக்கல் நடிப்பால் படத்தை மெருகேற்றி இருக்கிறார். வில்லத்தனமே செய்தாலும், அதனை ரசிக்கும்படியாகவே செய்கிறார்.
ராஷி கண்ணாவுக்கு வழக்கமான ஹீரோயின் வேடம் தான். அழகாக இருக்கிறார். மனதை கொள்ளை கொள்கிறார். கொஞ்சம், கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்.
நேர்மையான போலீஸ்காரராக யதார்த்தமாக நடித்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். படத்தின் திருப்புமுனை பாத்திரமாக வந்து, ஸ்கோர் செய்கிறார் பூஜா தேவரியா. யோகி பாபுக்கு மூன்று காட்சிகள் மட்டும் படத்தில். ஒரு காட்சியில் சிரிப்பு மூட்டுகிறார்கள்.
படத்துக்கு இசை சாம் சி.எஸ். பின்னணி ஓகே. ஆனால் பாடல்கள் சுமார் தான். கண்ணே கண்ணே பாடல் மட்டும் நல்ல மெலடி.
கார்த்தியின் ஒளிப்பதிவு சாதாரணமாக தெரிபவர்களையும் அழகாக காட்டுகிறது. ரூபனின் எடிட்டிங்கில் தனித்துவமான விஷயங்கள் எதுவும் இல்லை.
படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். என்ன தான் மசாலா படமாக இருந்தாலும், இப்படியாக அர்த்தமில்லாத காட்சிகளை வைப்பது இயக்குனரே. சென்னை மாநகரில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இவ்வளவு அதிகாரமா இருக்க முடியும். கொஞ்சம் மனசாட்சியுடன் கதைப் பண்ணுங்க வெங்கட் மோகன்.
பக்கா மசாலா படமாக இருந்தாலும், நல்ல மெசேஜ் சொன்னதால் மன்னிக்கப்படுகிறான் இந்த அயோக்யா.


Click it and Unblock the Notifications











