Boomerang Review : சக்தி முகத்துல சிவா.. தன்வினையே தன்னைச் சுடுகிறது- பூமராங் விமர்சனம்
Recommended Video

சென்னை : நாம் என்ன கொடுக்கிறோமோ அது தான் நமக்கு திருப்பி கிடைக்கும் என்ற கருத்தை, அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கலந்து அவியலாக படைத்திருக்கிறது பூமராங்.
இளைஞர் ஒருவர் தீவிபத்தில் சிக்கி முகத்தை இழப்பதோடு படம் துவங்குகிறது. அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அதே மருத்துவமனையில் மூளை சாவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சுகாசினியின் மகன் அதர்வா. சுகாசினியின் அனுமதியுடன், அதர்வாவின் முகத்தை எடுத்து, தீவிபத்து ஏற்பட்ட அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் பொருத்துகிறார்கள். புதிய முகத்துடன் அழகாக வெளியே வரும் சிவாவுக்கு (அதர்வா), அந்த முகம் பல்வேறு நன்மைகளை செய்கிறது. மேகா ஆகாஷுடனான காதல் கைகூடுகிறது. ஆனால் அந்த முகத்தின் காரணமாகவே அவருக்கு பிரச்சினைகளும் வருகிறது.

யாரோ சிலர் அதர்வாவை கொல்ல பார்க்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், சுகாசினி அதர்வாவின் உண்மையான தாய் அல்ல என்பது தெரிய வருகிறது. அப்படியென்றால் அதர்வா யார்? அவரைக் கொல்ல நினைக்கும் அந்த கும்பல் யார்? ஏன் அவரைக் கொல்லத் துடிக்கிறார்கள் என பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதி படம்.

புதியமுகம் படத்திற்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் என்பதால், பூமராங் புதிதாக தெரிகிறது. முதல் பத்து நிமிட காட்சிகள் நமக்கு புதிய உணர்வை ஏற்படுத்துகின்றன. யார் என்றே தெரியாத ஒருவரின் முகத்தை சூழ்நிலை காரணமாக மற்றொருவர் பொருத்திக்கொண்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்த விதம் புதுமை.

அதேபோல், இன்றைய காலகட்டத்தில் ஐடி துறையில், லேஆஃப், காஸ்ட்கட்டிங், பேரோல் ரிவிஷன் உள்ளிட்ட பெயர்களை வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் ஊழியர்களை வேலையைவிட்டு தூக்குகிறார்கள் என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். படித்த இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை விவசாயம் சார்ந்த விஷயங்களுக்கு எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் படம் பேசுகிறது. இது தவிர நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களும் படத்தில் இருக்கின்றன.

ஆனால் பலவீனமான திரைக்கதை, ஆரம்பத்தில் ஏற்பட்ட வியப்புடன் தொடர்ந்து பயணிக்க முடியாமல் செய்துவிடுகிறது. ஒரு சில காட்சிகளுக்கு பிறகு, கதை இப்படி தான் இருக்கம் என யூகித்துவிட முடிவதால் சலிப்பு ஏற்படுகிறது. தேவையே இல்லாத காட்சிகள் இடையில் வந்து, படத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. ஏற்கனவே, கார்ப்பரேட்டுக்கு எதிராக நிறைய படங்கள் வந்துவிட்டதால், இதில் பேசப்படும் அரசியலும் புதிதாக இல்லை. பல காட்சிகள் கத்தி படத்தையே ஞாபகப்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை.

இந்த படத்திற்காக அதர்வாக கொடுத்துள்ள உழைப்பும், அர்ப்பணிப்பும் அளப்பரியது, பாராட்டுக்குரியது. மொட்டை அடித்தபடி, முகத்தில் ஜிப் போட்டது போல் வரும் அந்தக் காட்சியில், வேறு எந்த நடிகரும் நடிப்பாரா என்பது சந்தேகமே. ஒரு கதாநாயகனாக முழுபடத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். நிச்சயம் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் அதர்வா.
'சக்தி முகத்துல சிவா', 'இந்த முகத்துக்கு நீ கூடுபாய்றத்துக்கு முன்னாடி', 'இதென்ன கத்தி படமா' என்பது உள்ளிட்ட ஷார்ட் கவுண்டர் வசனங்கள் மூலம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் சதீஷ். ஆனால் பல இடங்களில் அவரது வசனங்கள், பழைய பஞ்சாங்கமாகவே தெரிகின்றன. கொஞ்சநேரமே வந்தாலும், கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்சர் அடிக்கிறார் ஆர்ஜே பாலாஜி. வழக்கமான காமெடியனாக இல்லாமல், கனமான பாத்திரம் அவருக்கு. எல்கேஜி படத்தில் பேசிய வசனங்களில் கொஞ்சத்தை இதிலும் பேசியிருக்கிறார்.

மேகா ஆகாஷ், இந்துஜா என படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சிவாவின் ஜோடியாக வரும் மேகா ஆகாஷ் அழகாக தெரிகிறார். சக்தியுடன் வரும் இந்துஜா, பொறுப்பாக இருக்கிறார். மற்றபடி இருவருக்குமே பெரிய வேலை இல்லை படத்தில்.
சுஹாசினி உள்பட நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், அதில் சுஹாசினி மட்டுமே மனதில் நிற்கிறார். இரண்டு காட்சிகள் தான் என்றாலும், தனது அனுபவத்தை கொண்டு அதனை மிக யதார்த்தமாக செய்திருக்கிறார். வில்லன் உபென் படேலின் கதாபாத்திரம் பெரிதாக ஈர்க்கவில்லை.
ரதனின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். குறிப்பாக, 'தேசமே' பாடல் மனதை உருக்குகிறது. ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் கோட்டைவிட்டிருக்கிறார். சில இடங்களில் ஏன் இந்த ஒலி என்பதே புரியவில்லை.
படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளிலேயே நம்மை இம்ப்ரெஸ் செய்துவிடுகிறார் கேமராமேன் பிரசன்ன குமார். படத்தில் வரும் அனைவரையுமே அழகாக காட்டியிருக்கிறார். படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால், ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பு பேசப்பட்டிருக்கும்.
தன்வினை தன்னைச்சுடும் என்பது தான் படத்தின் ஒன்லைன். ஆனால் அதைவிட்டுவிட்டு நிறைய பிரச்சினைகள் குறித்து பூமராங் பேசுகிறது. அதனால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. எடுத்துக்கொண்ட கதையை, சீராகவும், நேராகவும் சொல்லியிருந்தால் பூமராங், சுழண்டடித்திருக்கும்.


Click it and Unblock the Notifications











