தர்மதுரை.. ஒரு சினிமாக்காரரின் விமர்சனம்!
- வெங்கட்
தர்மதுரை... மிக மிகச் சிறந்த படம். இந்தப் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த பின் ஊடகங்களில் வெளியான எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தும் புறம் தள்ள வேண்டிய விஷமத்தனங்களே.
படத்தில் குறைபாடுகளே இல்லையா... எனில் உண்டு என்பதே பதில். ஆனால் அவை எல்லாம் நினைவில் நிற்காத... இடையூறு செய்யாத குறைகள். ஆனால் இப்படம் நமக்கு தரும் அனுபவம், சிந்தனை.. மகிழ்ச்சி ... நம்பிக்கை .. நல்ல செய்தி ... இவை எல்லாம் மிகவும் உயர் ரகம்.

விஜய் சேதுபதி அடுத்த 20 வருட தனித்தன்மை நிறைந்த உச்ச நட்சத்திரமாக உயர்ந்த நடிகராக நிலைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. இவர் சிந்திக்கும் திறன் உள்ள நடிகர் ( இது பொதுவாக அபூர்வம்). இருப்பினும் உடல் ஆரோகியத்தையும் கண்களின் ஈர்ப்பு சக்தியையும் பாதுகாத்துக் கொள்ள ... அதிகரித்துக் கொள்ள வேண்டும். தர்மதுரை திரைப்படம் இவருக்கு நிச்சயம் ஒரு தங்கப்பதக்கம்தான் ..
சீனு ராமசாமியின் படைப்புகளில் இப்படம் என்றும் முதலிடத்தில் நிற்கும். இனியும் இப்படி ஒரு அமைப்பு ( நடிகர்கள் கூட்டணி தொழில் நுட்பக் கலைஞர்கள் கூட்டணி தயாரிப்பாளரின் தாராள முதலீடு) கிடைக்குமா என தெரியாது.
இப்படத்தில் வரும் சண்டைக்காட்சி... கல்லூரியில் கடைசி நாள் பாடல் ( முக்கிய நடிகர்கள் கையில் திடீரென முளைக்கும் கிடார்கள்.. இதயம் நக்கும் பேச்சரங்கம்) போன்ற சிறு குறைகளை மறந்து விட்டால் ( மனதில் தங்கவில்லை என்பது வேறு விஷயம்) தர்மதுரை ஒரு திரை இலக்கியமே...
தமன்னா ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, எம் எஸ் பாஸ்கர், ராதிகா, ராஜேஷ் கஞ்சா கருப்பு, சவுந்தர்ராஜா, அருள்தாஸ் மற்றும் அனைத்து நடிகர்களும் அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்கள்.. வாழ்த்துகள்...
யுவன் ஷங்கர், வைரமுத்து, சுகுமார் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
சீனு ராமசாமி சார் ... முதல் வாரம் இப்படத்தை விமர்சனம் என்ற பெயரில் கலாய்த்தவர்களை கண்டு கொள்ளாதீர்கள் ... அவர்களுக்கு என்ன கோபமோ ...என்ன பிரச்சனையோ .. என்ன பின்னணியோ ... காரணம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு உண்மையை உணர்த்தவே இப்படம் இன்று மாபெரும் வெற்றியாக வசூல் சாதனையாக பார்ப்பவர்களின் மகிழ்ச்சி நிறைந்த பாராட்டுகளாக பெறப்போகும் விருதுகளாக சாதித்துக் கொண்டிருக்கிறது.
ஆனந்த விகடன் ஜோக்கர் படத்துக்கு ஐம்பது மார்க் தரும் போது எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ அதே அளவு இப்படத்திற்கான விமர்சனத்தையும் மதிப்பெண்ணையும் பார்த்து வேதனைப்பட்டேன்.
தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் இப்படத்தை எடுத்து முடித்த கதை ஒரு பெரும் தவம் ... வெற்றி அவருக்கு கிடைத்த வரம்.
பல்வேறு சொந்த காரணங்களுக்காக நேற்றுதான் இப்படத்தைப் பார்த்தேன்.... அந்த தவறுக்கு வருந்துகிறேன்... மற்றபடி வெற்றிக்குப் பின் சாமரம் வீசுகிறேனோ என எண்ண வேண்டாம். சீனு ராமசாமியின் திறமை... வலிமை.. பலம், பலவீனம் எல்லாம் எனக்கு பல வருடங்களாகத் தெரியும். நாளை அவர் எடுக்கப் போகும் திரைப்படத்தின் கதையும் அவர் சொல்லி எனக்கு தெரியும் ... அழகியல் இயல்பியல் கலவைதான் சீனு ராமசாமி!


Click it and Unblock the Notifications











