Devarattam review: அக்கா - தம்பி பாசத்தை பேசும் தேவராட்டம்... மற்றொரு மதுரை படம்! விமர்சனம்
அக்கா - தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளிவந்துள்ள மற்றொரு மதுரை படம் தேவராட்டம்.
சென்னை: அக்கா -தம்பி பாசத்துடன் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார கொடுமைகளைப் பற்றி பேசுகிறது தேவராட்டம்.
மதுரை தாதா, அவர் செய்யும் அட்டகாசம், அதனை தட்டிக் கேட்க வரும் ஹீரோ என வழக்கமான ஒன்லைன் தான். ஆனால், அதனை குடும்ப செண்டிமெண்ட் கலந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து என வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

மதுரையைக் கலக்கும் மிகக் கொடூரமான தாதா பெப்சி விஜயன். எல்லா வில்லன்களையும் போல், வெளியில் தான் வில்லன், வீட்டுக்குள் பாசமான தந்தை. தவமாய் தவமிருந்து ஒரு பிள்ளைக்கு தகப்பனாகிறார். அதனால் உயிருக்கு உயிராக மகனை அவர் வளர்க்கிறார். இதுஒருபுறம் இருக்க, ஆறு பெண் குழந்தைகளுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் வேல.ராமமூர்த்தி. அவரது மூத்த மகள் வினோதினியும் கர்ப்பமாக இருக்க, மனைவியும் கர்ப்பமாக இருக்கிறார். ஒரே நேரத்தில் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. இதற்கிடையே ஒரு பிரச்சினையில் வேல.ராமமூர்த்தியை கொலை செய்து விடுகிறார் பெப்சி விஜயன். இது எல்லாம் வெறும் பிளாஷ் பேக் தான்.
பிளாஷ் பேக் முடிந்து, கட் பண்ணி ஓபன் செய்தால், 25 வருடங்களுக்கு பின்பு தாவிச் சென்று நிற்கிறது கதை. ஆனால், அப்போதே நம்மால் அப்பா மரணத்திற்கு மகன் பழி வாங்கப் போகிறான் என யூகிக்க முடிகிறது. வினோதினி தன் மகளோடு, தம்பி கௌதம் கார்த்திக்கையும் வழக்கறிஞர்களாக வளர்க்கிறார். சட்டம் முடிக்கும் கௌதம் நிஜமாகவே அநீதிகளை கொஞ்சம் அழுத்தமாக 'அடி'த்துக் கேட்கிறார். ஹீரோயின் மஞ்சிமாவும் கிட்டத்தட்ட அதே கேரக்டர் தான்.

இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட, அதனை தனது ஸ்டைலில் தட்டிக் கேட்கிறார் கௌதம். இதில், பலாத்காரம் செய்த இளைஞரோடு, பெப்சி விஜயனின் மகனையும் கௌதம் கொன்று விடுகிறார். பிறகென்ன, மகன் கொலைக்கு பழி வாங்க களத்தில் குதிக்கிறார் பெப்சி விஜயன். தன் அப்பாவைக் கொன்ற பெப்சி விஜயனை கௌதம் கொல்கிறாரா, இல்லை மகனைக் கொன்ற கௌதமை அப்பா பெப்சி விஜயன் கொல்கிறாரா என்பது தான் மீதிக்கதை.
வழக்கமான முத்தையா பட டெம்பிளேட்கள் படத்தில் கொட்டிக் கிடக்கிறது. தனது முந்தைய படங்களில் அம்மா-மகன், மாமனார்-மருமகன், பாட்டி-பேரன் பாசத்தைக் காட்டியவர் இப்படத்தில் அக்கா-தம்பி பாசத்தை கதைக்களமாக்கி இருக்கிறார். ஆனால், அவரது முந்தைய படங்களில் படம் ஆரம்பித்த முதல் பத்து நிமிடங்களிலேயே கதைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் சென்று, விறுவிறுப்பை கூட்டி விடுவார் முத்தையா. அந்த டெக்னிக் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். தனது பழைய ரூட்டை மாற்ற நினைத்து, தவறான பாதையில் சென்று வழி தெரியாமல் முழுத்திருக்கிறார் என்பது பளிச்சென தெரிகிறது.

ஹரஹர மகாதேவகி, இஅமுகு என தனது ஆபாசப்பட நடிகர் இமேஜை உடைத்து, பி அண்ட் சி வகுப்புகளுக்கும் தனது நடிப்பு சென்று சேர வேண்டும் என பெரிதும் முயற்சித்திருக்கிறார் கௌதம். ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் பண்ணுகிறார். ஆனாலும் கிராமத்து இளைஞராக அவர் செட்டாகவில்லை என்றே கூற வேண்டும். ஒரு அந்நியத்தன்மை அப்பட்டமாகத் தெரிகிறது.
படத்தின் நாயகி மஞ்சிமா, சட்ட மாணவி நந்தினியை பல இடங்களில் ஞாபகப் படுத்துகிறார். மற்றபடி, முத்தையா படங்களில் ஹீரோயின்களுக்கு அவ்வளவாக வேலை இருக்காது என்ற உண்மையை தெரிந்து கொண்டு, எந்த எதிர்பார்ப்பும் இன்றி படத்தைப் பார்ப்பது நலம். ஆனால், கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவரான மஞ்சிமா, மதுரை பெண்ணாகவே தெரிகிறார்.

போஸ் வெங்கட், வினோதினி, முனீஸ் ராஜா, சூரி என படம் முழுவதும் நிறைய நட்சத்திரங்கள். அனைவரும் தங்களது பொறுப்புணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். சூரியின் காமெடி பாராட்டும்படி இல்லாவிட்டாலும், சில இடங்களில் சிரிக்க வைக்கிறது, சில இடங்களில் எரிச்சல் பட வைக்கிறது.
வில்லன் பெப்ஸி விஜயன், தனது ஓவர் ஆக்டிங்கை காட்டாமல் அடக்கி வாசித்திருப்பது ஆறுதலான விஷயம். அவரது மகனாக வரும் தெய்வம் மற்றும் இதர சில்லரை வில்லன்களும் டெரராகவே தெரிகிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் டைட்டில் பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் எல்லாம் சுமார் ரகம் தான். மதுரை என்றவுடன் தாரை தப்பட்டை, உருமி எல்லாம் வைத்து பின்னணி இசை கோர்த்திருக்கிறார். ஆனால், அது படத்தின் விறுவிறுப்பைக் கூட்ட உதவவில்லை.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவு பேசப்படும் வகையில் உள்ளது. படத்தில் வரும் அனைவரையும் அழகாக காட்டி இருக்கிறார். பிரவீன் கே.எல்-ன் எடிட்டிங்கில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் முன் பாதியில் இருக்கும் வேகம், பின் பாதியில் மிஸ்ஸிங்.

அக்கா - தம்பி பாசம், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கமர்சியல் சினிமாவாக பேசுகிறது படம். ஆனால் பாத்திரப் படைப்புகள், படத்தின் கதைக்கு வலுவாக அமையவில்லை. அதேபோல, சாதி பற்றிய விஷயங்கள் மறைமுகமாக காட்டப்பட்டுள்ளது. "கண்ணகி மகன் தான் வாழனும், காந்தா மகன் வாழக்கூடாது" என்பது போன்ற வசனங்கள், படத்தின் கதை கருவிற்கு எதிர்மறையாக உள்ளது. இப்படி சுட்டிக்காட்டக்கூடிய பல குறைகள் படத்தில் உள்ளது.

வழக்கமான ஒரு மதுரை படமாகவே வந்துள்ளது தேவராட்டம்.


Click it and Unblock the Notifications











