டோரா - விமர்சனம்
-எஸ் ஷங்கர்
நடிகர்கள்: நயன்தாரா, தம்பி ராமய்யா, ஹரீஷ் உத்தமன்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
இசை: விவேக் மெர்வின்
தயாரிப்பு: ஏ சற்குணம் - ஹிதேஷ் ஜபக்
இயக்கம்: தாஸ் ராமசாமி
பேய்ப் பட சீஸன் ஏகத்துக்கும் டல்லடித்துப் போய், பேய்கள் சினிமாக்காரர்களைக் கண்டு பயப்படும் நேரத்தில் வெளியாகியிருக்கும் படம் டோரா.
இனி டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல், லேடி சூப்பர் ஸ்டாராகத் தொடர வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது நயன்தாராவுக்கு. இந்தப் படத்தில் ஃபைட், பஞ்ச் வசனம் என தனக்கு அந்நியமான ஏரியாக்களை புகுந்திருக்கிறார்.

மிடில் க்ளாஸ் தம்பி ராமய்யாவின் மகள் நயன்தாரா. மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முயற்சிக்கிறார். ஒரு நாள் குல தெய்வம் கோயிலுக்குப் போக தன் பணக்கார தங்கையிடம் (கால் டாக்ஸி ஓனர்) கார் கேட்கிறார். தங்கை அவமானப்படுத்துகிறார். இதனால் கால் டாக்ஸி பிஸினஸ் ஆரம்பிக்க ஆசைப்பட்டு, ஒரு பழைய ஆஸ்டின் காரை வாங்குகிறார்கள் (கால் டாக்சிக்கு வாங்கற காரா அது.. அதுவும் புது முயற்சியாம்!).
அந்தக் காருக்கு ஒரு நாள் கொடைக்கானல் ட்ரிப் கிடைக்கிறது. இந்த ட்ரிப்பின் போது நடக்கும் விபரீதங்களைத் தொடர்ந்து ஒரு சாமியாரை அழைத்து விஷயத்தைச் சொல்ல, காருக்குள் ஒரு நாயின் ஆவி இருப்பதாகவும், அது சிலரைப் பழிவாங்கக் காத்திருப்பதாகவும் கூறுகிறார்.

நாய் யாரைப் பழிவாங்குகிறது.. அதற்கு நயன்தாரா என்ன செய்தார்.. இந்த சிக்கலிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதுதான் க்ளைமாக்ஸ் என்பதை நீங்களே யூகித்துவிட்டீர்கள்தானே!

ஸோலோ பர்மான்மென்சில் இன்றைய தேதிக்கு நயன்தாராவை அடித்துக் கொள்ள ஆளில்லை. இன்னும் இளமையாகவே இருக்கிறார். ஒரு வெகுளிப் பெண்ணாக கவர்கிறார். காமெடி, ஆக்ஷன், பயம் என கலந்துகட்டி சிலம்பமாடியிருக்கிறார். அதுக்காக ஒரேயடியா விஜயசாந்தியாகிடாதீங்க... போரடிக்கும், ரசிகர்களுக்கு!
போரடிக்கும் டோராவின் முதல் பாதியில் பெரிய ஆறுதல் தம்பி ராமய்யாவின் காமெடி.
ஹரீஷ் உத்தமனுக்கும் நல்ல வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நிறைய இடங்களில் காலகாலமாகப் பார்த்துப் பழகிய காட்சிகள், வசனங்கள். குறிப்பாக அந்த போலீஸ் அதிகாரி, ஹரீஷைப் பார்த்து அடிக்கடி 'என்ன பண்ற... இன்னுமா கண்டுபிடிக்கல...' எனக் கேட்கும் காட்சி. நயன்தாராவின் அந்த இரட்டை முகக் காட்சியும் புதிதல்ல... சந்திரமுகி, அந்நியனில் பார்த்துப் பழகியதுதான்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, இரண்டாம் பாதியில் சிறப்பு. விவேக் மெர்வின் பின்னணி இசை சுமார்தான். ஒரே ஒரு பாடல். பரவாயில்லை ரகம். ஆரம்பக் காட்சிகளில் சப்தத்தைக் குறைத்திருக்கலாம்!
ஆங்... டோரா யாருன்னு தெரியணுமா... அதான் பேயா வர்ற அந்த நாயோட பேரு!
டோரா ஒரு நயன்தாரா படம். அவருக்காக ஒரு முறை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











