Don't Miss!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- News மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...! விமர்சனம்
குழந்தைகளுக்கு தற்காப்பு கலையை கற்றுத்தர வேண்டியதன் அவசியத்தை பற்றி கூறுகிறது எழுமின் திரைப்படம்
Recommended Video
சென்னை: இன்றைய கால சூழலில் குழந்தைகளுக்கு படிப்பு ஒன்று மட்டுமே போதாது, தற்காப்பு கலையும் அவசியம் எனக் கூறுகிறது எழுமின் திரைப்படம்.
தொழிலதிபர் விஸ்வநாதன் (விவேக்)- பாரதி (தேவயானி) தம்பதியின் ஒரே மகன் அர்ஜுன் (சுகேஷ்). குத்துச்சண்டையில் வல்லவனாக திகழும் அர்ஜுனை போற்றி வளர்க்கிறார்கள் விவேக்கும் தேவயானியும். அர்ஜுனின் ஏழை நண்பர்களான அஜய் (பிரவீண்), கவின் (ஸ்ரீஜித்), வினித் (வினித்), ஆதிரா (கிருத்திகா), சாரா (தீபிகா) ஆகியோரும் தற்காப்பு கலைகளில் வல்லவர்கள்.
ஆனால் இவர்களுக்கு தற்காப்பு கலையை தொடர்ந்து கற்க குடும்ப பொருளாதார சூழல் தடையாக இருக்கிறது. மகனின் ஆசைக்காக அவனது நண்பர்களின் விளையாட்டு செலவை ஏற்கிறார் விவேக். ஒருகட்டத்தில் மகனை இழந்து தவிக்கும் விவேக் - வேதயானி தம்பதிக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள் அர்ஜுனின் நண்பர்கள். அவர்களின் கனவை நனவாக்க போராடும் விவேக்குக்கு தடையாக வருகிறார் ஸ்போர்ட்ஸ் அகாதமி தலைவர் சுந்தரம் (அழகம்பெருமாள்). இதனை முறியடித்து தற்காப்பு கலையில் மாணவர்கள் ஐந்து பேரும் எப்படி சாதிக்கிறார்கள் என்பது தான் எழுமின் சொல்லும் செய்தி.
ஆபாசம், கவர்ச்சி, இரட்டை அர்த்த காமெடி வசனங்கள் என வழக்கமான கமர்சியல் சினிமாவாக இல்லாமல், குழந்தைகளுக்கான திரைப்படம் ஒன்றை எடுத்ததற்காகவே இயக்குனர் விஜிக்கு மிகப்பெரிய பாராட்டுகள். குழந்தைகளுக்கான கேளிக்கையாக மட்டும் இல்லாமல், நல்ல செய்தி ஒன்றை சொல்கிறது எழுமின்.
பெரிய திருப்பங்கள், பரபரப்பு காட்சிகள் என எதுவும் இல்லாமல், எளிமையான திரைக்கதையில் உருக்கமான கதையை சொல்லியிருக்கிறார்கள். மாணவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து ஒவ்வொரு காட்சியையும் அமைத்திருக்கிறார் இயக்குனர். நிச்சயம் நல்ல முயற்சி விஜி.
வழக்கமான ஸ்போர்ட்ஸ் பட பார்முலாவுக்குள் படத்தை நகர்த்தாமல், மாணவர்கள் கற்கும் தற்காப்பு கலை நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு எப்படி உதவுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு. நிறைய விஷயங்களை ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்கள்.
காமெடி ஹீரோவான விவேக்குக்கு இது புதிய பரிமாணம். மகன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கும் அவர், அவனை இழக்கும் போது வெளிப்படுத்தும் உணர்வுகள் நம் கண்ணில் கண்ணீர் வரவழைக்கின்றன. நிஜ வாழ்க்கையில் அவர் எப்படி தவிக்கிறார் என்பதை திரையிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் மங்களம் சாரை ஞாபகப்படுத்தினால், இந்த படத்துக்கு அது நிச்சயம் தேவை என மனம் ஏற்றுக்கொள்கிறது. காமெடி ஏரியாவை செல் முருகனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, பெர்பாமன்ஸ் காட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளித் திரையில் மீண்டும் நடிகை தேவயானி. அதே கொஞ்சும் அழகுடன் மிளிர்கிறார். ஒரு பர்பெக்ட் அம்மாவாக சிறப்பாக செய்திருக்கிறார். வெல்கம் பேக் தேவயானி.
படத்தில் நடித்துள்ள ஆறு பசங்களும் உண்மையிலேயே மிரட்டியிருக்கிறார்கள். பாக்சிங், கராத்தே, குங்பு, சிலம்பம், ஜிம்னாஸ்டிக் என பசங்க செய்யும் ஒவ்வொரு சாகசமும் மிரளவைக்கிறது. அதுவும் ஆதிராவாக நடித்திருக்கும் கிருத்திகாவின் சிலம்பம் பிரம்மிக்க வைக்கிறது. இந்த பொண்ணு கம்பு சுத்துறத பார்த்த பிறகு, எந்த பையலாவது வம்பு பண்ண வருவானா என்ன...
வில்லன்களாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், ரிஷி, போலீசாக நடித்திருக்கும் பிரேம்குமார் என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். செல் முருகனின் ஒன் லைன்கள் சிரிப்பை வரவைக்கின்றன.
கணேஷ் சந்திரசேகர் இசையில் பாடல் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். தனுஷ் குரலில் எழடா மகனே பாடல், நெஞ்சை உருக்குகிறது. அனிருத் பாடிய போராடலாம் பாடல் உற்சாக டானிக். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் சிறப்பு.
ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கல் மைக்கேல் ராஜிக்கு ஒரு சிறப்பு பாராட்டுகள். சின்ன பசங்கள வெச்சு மிக விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை அமைச்சிருக்கிற விதம் சூப்பர். அந்த க்ளைமாக்ஸ் சண்டை காட்சி உண்மையிலேயே மிராக்கல் மைக்கேல்.
ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், சண்டைக்காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, மற்றக்காட்சிகளுக்கு கொடுக்கவில்லை. கார்த்திக் ராமின் படத்தொகுப்பில் படம் விறுவிறுப்பாக சென்றாலும், சில இடங்களில் சீரியல் எபெக்ட் கொடுக்கிறது. சின்ன பட்ஜெட் படம் என்பதை செட்டுகள் காட்டுகிறது.
விவேக் படம் என்றாலே காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த மனநிலையோடு தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். ஆனால் இதில் காமெடி டோட்டல் மிஸ்ஸிங். சண்டை காட்சிகளுக்கும், சென்டிமென்டுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை நகைச்சுவைக்கும் கொடுத்திருக்கலாம். அதேபோல நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது.
இருப்பினும் இன்றைய காலத்துக்கு குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான படம் எழுமின். அடிக்கு அடி, உதைக்கு உதைன்னு சட்டத்தை கையில் எடுக்கிறது தப்புதான். ஆனால் இன்றைக்கு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பார்க்கும் போது, அதெல்லாம் தப்பே இல்லைன்னு நினைக்க தோணுது.
குழந்தைகளுக்கு படிப்பு ஒன்று மட்டுமே போதாது, தற்காப்பு கலையும் அவசியம் எனச் சொல்லும் எழுமின் படத்தை பாராட்டி வரவேற்கலாம்.