Idly Kadai Review: இட்லி கடை விமர்சனம்.. தனுஷின் அகிம்சை இட்லி.. சூப்பரா? சுமாரா?
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு இட்லி கடை படத்தை தனுஷ் ரிலீஸ் செய்திருந்தாலும் இந்த படம் பக்காவான காந்தி ஜெயந்தி மெட்டீரியல் தான். இட்லியை போலவே சாஃப்ட்டான அகிம்சையை வலியுறுத்தும் படமாகவே இந்த இட்லி கடை படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். வன்ம கிரைண்டரும் கொடூர மிக்ஸியுமாக பல படங்கள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் என மல்லிகைப் பூ இட்லியை பரிமாறியிருக்கிறார் தனுஷ்.
டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த இந்த இட்லி கடை படத்தின் மூலம் இன்பன் உதயநிதி விநியோகஸ்தராக அவதாரம் எடுத்துள்ளார். ஆரம்பத்திலேயே இன்பன் உதயநிதி வழங்கும் என படம் தொடங்குகிறது.

தனுஷ், ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன், சமுத்திரகனி, ஷாலினி பாண்டே, கிதா கைலாசம் மற்றும் இளவரசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் மட்டுமே முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ள இந்த இட்லி கடை படம் சூப்பரா? சுமாரா? என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
இட்லி கடை கதை: அப்பா சிவனேசன் (ராஜ்கிரண்) தனது மனைவியுடன் (கீதா கைலாசம்) சேர்ந்து உருவாக்கிய இட்லி கடையில் தினமும் அதிகாலை எழுந்து குளித்து கோயிலுக்குச் செல்வது போல சென்று ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து, அம்மி கல்லில் சட்னி அரைத்து சிறிய கூரை வேய்ந்த இட்லி கடையை நடத்தி வருகிறார். அது அந்த ஊரின் அடையாளமாகவும் உள்ளது.
அப்பாவின் இட்லி கடையை ஃபிரான்சைஸ் ஆக மாற்ற முடிவு செய்யும் தனுஷின் முயற்சிக்கு ராஜ்கிரண் எல்லா இடத்துலையும் நானே சமைக்க முடியுமா? என்று கேட்க தவிடு பொடியாகிறது. குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்ட முடியாது, நான் மெட்ராஸ் போறேன் என முருகன் (தனுஷ்) கிளம்ப அவர் வெளிநாட்டில் வசிக்கும் பெரிய உணவு நிறுவனர் விஷ்ணு வர்தனின் (சத்யராஜ்) நிறுவனத்தில் பெரிய பொறுப்புக்கே செல்கிறார்.
சத்யராஜின் மகளையே தனுஷுக்கு கட்டித் தர இருக்கும் நிலையில், தந்தையின் மறைவு செய்தி அறிந்து சொந்த ஊருக்குத் திரும்பும் தனுஷ் சத்யராஜின் மகளை திருமணம் செய்துக் கொண்டாரா? அப்பா உயிராக நேசித்த இட்லி கடையை எடுத்து நடத்தினாரா? தங்கைக்காக களமிறங்கும் அண்ணன் அருண் விஜய்க்கும் தனுஷுக்கும் இடையே முட்டும் பகையில் யார் வென்றார்கள் என்பது தான் இட்லி கடை படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ராயன் படத்தில் தனுஷ் அதிகளவில் வன்முறையை கையிலெடுத்த நிலையில், அந்த படத்துக்கு எதிராக ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், இந்த இட்லி கடை படத்தில் வன்முறையை அதிகம் தவிர்த்துவிட்டு அகிம்சையை கையில் எடுத்து ஒரு அழகான இயக்குநராக மாறியிருக்கிறார்.
வானத்தைப் போல படத்தை போல ஒரு ஃபீல் குட் படமாக தனுஷின் இந்த இட்லி கடை படம் வெந்து இருக்கிறது. அருண் விஜய் தனுஷுக்கு எதிராக செய்யும் செயல்கள், அதற்கு தனுஷ் ஆற்றும் எதிர்வினை அருண் விஜய்யை மேலும், கோபத்திற்குள் ஆழ்த்தும் இடங்கள் எல்லாம் ஹைலைட். போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபன் கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமுத்திரகனி, நித்யா மேனன், இளவரசு என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். ராஜ்கிரண் கருப்பசாமி போலவே வரும் காட்சிகள் எல்லாம் கூஸ்பம்ப்ஸ். முதல் பாதி முழுக்க சென்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக வொர்க்கவுட் ஆனது.
ஆனால், இரண்டாம் பாதியில் படம் தனுஷ் சொன்னதை போலவே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை போல ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்து ரொம்பவே சாதாரணமாக முடிவடைவது ரசிகர்களை ஏமாற்றுகிறது.
பிளஸ்: தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பு இரண்டுமே படத்திற்கு பெரிய பலம். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பக்க பலமாக உள்ளது. கிரண் கெளசிக்கின் ஒளிப்பதிவு அந்த கிராமத்தையும் ஊரையும் ரம்மியமாக காட்டி ஸ்கோர் செய்கிறது. ராஜ்கிரண் நடிப்பு, நித்யா மேனன் தனுஷுக்கு துணையாக நிற்பது, மாவாட்டும் காட்சி மற்றும் முதல் பாதியில் அப்பாவின் கைப்பக்குவம் இட்லியில் வரும் இடம் என பல பிளஸ்கள் படத்தில் உள்ளன. கத்தி, ரத்தம், துப்பாக்கி சத்தம் என்றெல்லாம் இல்லாமல், சாதாரண ஃபீல் குட் படத்தை சாஃப்ட் இட்லியாகவே தனுஷ் வேகவைத்துக் கொடுத்துள்ளார். அப்பா அம்மாவை விட்டுட்டு போற பிள்ளைங்க எல்லாம் ஊதாரித்தான் என தனுஷ் பேசும் வசனம் எமோஷனல் டச்.
மைனஸ்: இரண்டாம் பாதியில் இந்த விஷயமே படத்திற்கு பெரிய பலவீனமாகவும் மாறுகிறது. அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் சத்யராஜ் கொடுத்த வேலையை செய்தாலும், அவர்களது கதாபாத்திரங்கள் வலுவாக எழுதப்படாமல் மேம்போக்காக எழுதப்பட்டு இருப்பது படத்தின் பெரிய குறையாக இரண்டாம் பாதியில் மாறி நிற்கிறது. அண்ணாமலை படத்தை போல 2ம் பாதி எலிவேட் ஆக நல்ல வாய்ப்பும் இருந்தும் சிம்பிளாகவே தனுஷ் முடித்து விட்டார். அருண் விஜய்யின் மன மாற்றத்துக்கு தனுஷ் தரப்பில் இருந்து ஏதாவது நிகழ்ந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் இந்த இட்லி கடை. தாராளமாக தியேட்டரில் ருசிக்கலாம்!


Click it and Unblock the Notifications











