Indra Review: இந்திரா விமர்சனம்.. வசந்த் ரவியின் கிரைம் த்ரில்லர் படம் மிரட்டுதா? உருட்டுதா?
சென்னை: அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, மெஹ்ரீன் பிர்சடா, சுனில், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று இந்திரா திரைப்படம் வெளியானது. பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியிலேயே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பொதுமக்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு என்ன ரிசல்ட் கொடுக்க காத்திருக்கின்றனர் என்பது விரைவில் தெரிந்து விடும்.
கடந்த வாரம் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இந்த வாரமும் அதிகளவிலான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடித்த வசந்த் ரவி ஜெயிலர் 2வில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் வருவாரா என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ள இந்திரா படத்தை களத்தில் இறக்கியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக இருந்து சஸ்பென்ஸ் செய்யப்படும் வசந்த் ரவி பார்வை போன பின்னரும் தனது மனைவியை கொன்ற சைக்கோ கில்லரை எப்படி கண்டு பிடித்து பழிவாங்குகிறான் என்கிற கதையை இயக்குநர் சபரிஷ் நந்தா சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
இந்திரா கதை: இந்திரன் எனும் பெயரில் போலீஸ் அதிகாரியாகவே வசந்த் ரவி நடித்துள்ளார். அவரை எல்லாரும் இந்திரா என அழைக்க இயக்குநர் டைட்டிலையும் அப்படியே வைத்துள்ளார். பெண்ணை மையப்படுத்திய கதையோ என நினைத்து விட வேண்டாம். சென்னையில் திடீரென விசித்திரமாக சில கொலைகள் நடக்கின்றன. அதில் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால் கொல்லப்படுபவர்களின் மணிக்கட்டு வெட்டப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கை விசாரிக்கும் இந்திராவின் மனைவி மெஹ்ரீன் பிர்சடாவும் சைக்கோ கில்லரால் கொல்லப்படுகிறார். ஹீரோவுக்கும் பார்வை போய்விடுகிறது. இப்படியொரு இக்கட்டான சூழலில் வில்லனை ஹீரோ கண்டுபிடித்தாரா? கதையை முடித்தாரா? என்பது தான் இந்திரா படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: வசந்த் ரவி பார்வையற்றவராக சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவரது இமைகள் துடிக்கும் காட்சிகளில் எல்லாம் நடிப்பின் ஆழம் மெருகேறியிருக்கிறது. பட்டாஸ் படத்துக்குப் பிறகு திருமணத்தை எல்லாம் நிறுத்திய மெஹ்ரீன் பிர்சடா மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஆனால், இந்த படத்திலும் அவருக்கு பெருசா ஸ்கோப் இல்லாமல் போட்டுத் தள்ளிவிடுகின்றனர். ஜெயிலர் படத்தில் வசந்த் ரவியுடன் இணைந்து நடித்த சுனில் இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார். அனிகா சுரேந்திரன் மற்றும் சுமேஷ் மூரின் நடிப்பு அட்டகாசம்.

பிளஸ்: படத்தின் மேக்கிங்கை அறிமுக இயக்குநர் பக்காவாக கையாண்ட விதம் பாராட்ட வைக்கிறது. வசந்த் ரவி, மெஹ்ரீன் பிர்சடாவின் காதல் காட்சிகளை எல்லாம் அழகாக படம்பிடித்து இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறார். கிரைம் த்ரில்லர் படங்கள் என்றாலே இடைவேளை காட்சி பக்காவாக ஒரு செம ட்விஸ்ட் உடன் இருக்க வேண்டும் என்கிற செக் பாக்ஸை சரியாக டிக் அடித்திருக்கிறார் இயக்குநர்.
மைனஸ்: வழக்கமான சைக்கோ த்ரில்லர் படமாகவே முதல் பாதி செல்வது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறிவிட்டது. இருந்தாலும், 2வது பாதி மற்றும் கிளைமேக்ஸில் தாக்குப் பிடித்து சுபம் போட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் சுவாரஸ்யமற்ற காட்சிகள் ரசிகர்களை சற்றே கடுப்பாக்கி விடும். அதையெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் படம் இன்னும் நல்லா வந்திருக்கும். ஆனாலும், தியேட்டரில் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். சைக்கோ த்ரில்லர் விஷயத்தையும் தாண்டி ஒரு விஷயம் படத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











