Kudimagan Review: குடியால் அழியும் குடும்பம்... மதுவுக்கு எதிராக போராடும் 'குடிமகன்'! விமர்சனம்
மது பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதை பற்றி பேசுகிறது குடிமகன் திரைப்படம்.
Recommended Video

சென்னை: மது பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படி அழிகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது குடிமகன் திரைப்படம்.
டாஸ்மாக் மதுபான கடை இல்லாத கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார் நாயகன் கந்தன் (ஜெய்குமார்). எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாத விவசாயியான கந்தன், மனைவி செல்லகண்ணு (ஜெனிபர்), மகன் ஆகாஷ் மீது அளவுகடந்த பாசத்துடன் இருப்பவர். தான் உண்டு தனது வேலை உண்டு என்றில்லாமல் மட்டும் இல்லாமல் ஊருக்குள் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் முதல் ஆளாக கலந்துகொள்பவர்.

நண்பர்கள் சிலர் வெளியூருக்கு சென்று எப்போதாவது மது அருந்திய போதிலும், கந்தன் மட்டும் மனக்கட்டுப்பாட்டுன் இருக்கிறார். ஆனால் பணத்துக்கு ஆசைப்படும் உள்ளூர் கவுன்சிலரால், அந்த ஊரில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்படுகிறது. ஊர் பெரியவர் பவா செல்லத்துரையுடன் சேர்ந்து, கந்தனும் அந்த டாஸ்மாக் கடைக்கு எதிராக குரல் கொடுக்கிறார். ஆனால் விதி கந்தனை குடிகாரனாக மாற்றுகிறது. வெளியூருக்கு சென்று எப்போதாவது குடிக்கும் மற்ற ஆண்களும் முழுநேர குடிகாரர்களாக மாறிவிடுகின்றனர். குடிபழக்கம் கந்தனை எந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்பது தான் மீதி படம்.

தமிழ்நாட்டில் இன்று பல வீடுகளில் நாம் பார்க்கும் காட்சிகளை திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சத்தீஸ்வரன். மது பழக்கம் ஒரு குடும்பத்தை எந்த அளவுக்கு சீரழிக்கிறது என்பதை மிகையில்லாமல் காட்டியிருக்கிறார். இதனால் அவசியமான ஒரு காலகட்டத்தில், மிகவும் அவசியமான ஒரு படமாக வந்துள்ளது குடிமகன்.
மதுவுக்கு எதிரான சில வசனங்கள் மிகவும் அழுத்தமாக உள்ளன. கந்தன் குடிகாரனான பிறகு, அவனது குடும்பம் படும் கஷ்டங்கள் நம்மை உருக வைக்கின்றன. படம் பார்த்து வெளியே வரும் குடிகாரர்கள், அன்றைய ஒரு நாளாவது குடிக்காமல் இருப்பது நிச்சயம்.

நாயகனாக நடித்துள்ள ஜெய்குமார், புதுமுகம் என்றாலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு தகப்பனாக, கணவனான, குடிக்காரனாக தனது கடமையை சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்துள்ள ஜெனிபர், ஒரு பொறுப்பான குடும்ப தலைவியாக திரையில் ஜொலிக்கிறார். பல ஆண்டுகளாக சினிமாவில் இருப்பவர் என்பதால், அசால்டாக நடித்துள்ளார். கணவனை அடித்து வெளுப்பது, அழுது புலம்புவது, நம்பி ஏமாறுவது என விதவிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஜெனிபருக்கு குடிமகன் கைக்கொடுக்கும் என நம்பலாம்.
படத்தின் மிகப் பெரிய சர்ப்ரைஸ் குட்டி பையன் ஆகாஷ். சமூக சேவைக்காக ஏற்கனவே அறியப்பட்ட இந்த சுட்டி பையன், திரையில் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கலக்கியிருக்கிறான். சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்கிறான்.

கந்தனின் நண்பனாக நடித்துள்ள வீரசமர் வரும் காட்சிகள் காமெடிக்கு கேரண்டி தருகின்றன. மூர்த்தி, கிரண், பாலா சிங் உள்பட படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
எஸ்.எம்.பிரசாந்த்தின் இசையும், சி.டி.அருளின் ஒளிப்பதிவும் கதையோட்டத்திற்கு கைக்கொடுத்துள்ளன. கே.ஆர்.செல்வராஜின் படத்தொகுப்பு படத்தை தொய்வடையவிடாமல் கொண்டு செல்கிறது.
படத்தின் கதையில் அதிக கவனம் செலுத்தியுள்ள இயக்குனர், திரைக்கதையிலும் அதே அளவுக்கு கவனம் செலுத்தியிருக்கலாம். காட்சிகள் பழசாக தெரிகின்றன. அதை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். அதேபோல், குடியை மட்டுமே மையப்படுத்தி முழுப்படத்தையும் எடுத்திருப்பது குறும்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், இன்றைய சூழலில் தமிழ்நாட்டிற்கு மிகவும் அவசியமானவன் இந்த 'குடிமகன்'.


Click it and Unblock the Notifications











