மதுரை வீரன் - விமர்சனம் #MaduraiVeeranReview
அக்மார்க் மதுரை படம் என்பதை டைட்டில் முதல் டிசைன், ப்ரோமோ வரை சொல்லிவிட்டார்கள். அந்த மதுரை மண் ஜுனியர் கேப்டனுக்கு ஒட்டுகிறதா என்பதைப் பார்ப்போம்.
திருமணத்திற்கு பெண் தேட என்று அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு மலேசியாவில் இருந்து மதுரைக்கு வருகிறார் சண்முகபாண்டியன். ஆனால் உண்மைக் காரணம் தனது அப்பா சமுத்திரகனியை கொன்றவனை கண்டுபிடிப்பதுதான். அந்த முயற்சியில் அவர் வெற்றி அடைந்தாரா? சமுத்திரகனியை யார், எதற்காக கொலை செய்தது? தனது தந்தையின் கனவான ஜல்லிக்கட்டை நடத்த சண்முகபாண்டியன் மேற்கொள்ளும் போராட்டம் என்ன ஆனது? என்பதையெல்லாம் கலந்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் பிஜி முத்தையா.

முதலில் படத்தின் ப்ளஸ்களை பார்ப்போம். மலையடிவார கிராமமாகக் காட்டினாலும் மதுரை மண்ணையும் வாழ்வியலையும் படத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன. விஷுவலும் சூப்பர்.
சண்முகபாண்டியன் தோற்றத்தில் மதுரைக்காரனை அசலாகக் கொண்டு வந்துள்ளார். நடிப்பில் பாஸாக முயற்சி செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் டிஸ்டிங்ஷன் வாங்கும் ஜுனியர் கேப்டன், நடிப்பில் பார்டர் மார்க்கில்தான் பாஸாகிறார். இன்னும் பயிற்சி தேவை (உண்மையை சொல்லித்தானே ஆகணும்!)
ஹீரோயின் மீனாட்சி நல்ல அறிமுகம். சமுத்திரகனிக்கு இது அசால்ட்டு கேரக்டர். வழக்கம்போல பின்னுகிறார்.

வில்லன்களாக வேலராமமூர்த்தி, மைம் கோபி, தேனப்பன். அவரவர்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் பெரிய மைனஸே பாலசரவணன்தான். கேப் விடாமல் பேசி மொக்கை போடுகிறார். இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று உடன் இருப்பவரை கிண்டல் செய்வதெல்லாம் காமெடியில் சேர்த்துக்கொள்கிறார். தயவுதாட்சண்யம் பார்க்காமல் வெட்டித் தள்ளியிருக்கலாம்.
கேமராவும் இசையும் மதுரை மண்ணை சென்னை தியேட்டருக்கு அழைத்து வருகின்றன. ஹீரோ, வில்லன்களுக்கு வார்த்தைகளில் தரப்படும் பில்டப்களை கொஞ்சம் விஷுவலிலும் சொல்லியிருக்கலாம்.
நல்ல கதைக் களத்தையும், லொகேஷன், விஷுவல் என்று வித்தியாசமாகப் பிடித்த பி ஜி முத்தையா திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம். மதுரை வீரன் மனதில் நிற்கவில்லை.


Click it and Unblock the Notifications











