‘காட்ஃபாதர்’ பாணியில் மம்முட்டி...‘பீஷ்ம பர்வம்’ விமர்சனம்
நடிகர்கள்: மம்முட்டி, சாக்கோ. நதியா, சௌபின் சஹீர் , திலீஷ் போத்தன், நெடுமுடி வேணு, கே.பி.ஏ.சி.லலிதா
இயக்குநர்: அமல் நீரத்
இசை: சுsஹின் ஷியாமன்
ரேட்டிங்: 3.5/5.
சென்னை: மம்முட்டி மலையாளப்பட உலகின் சூப்பர் ஸ்டார் அவருக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரது புதிய படம் ஓடிடி தளத்தில் ஹாட்ஸ்டாரில் ஏப்.1 அன்று வெளியாகியுள்ளது. பீஷ்ம பர்வம் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் மம்முட்டியை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.
இதுதான் கதை
கொச்சியில் இருக்கும் மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் வாரிசுகளாக 3 பிள்ளைகள், ஒரு பெண். ஒருவர் உதவாக்கரை, இரண்டாமவர் மம்முட்டி, மூன்றாமவர் சர்ச் பாதிரியார், 4 வது ஒரு பெண் அவரது கணவர் ஒரு போலீஸ் ஆஃபீசர். உதவாக்கரையாக இருக்கும் மூத்த அண்ணனுக்கு 2 மகன்கள், போதை பொருள் பழக்கம், சினிமா எடுக்கிறேன் என பணத்தை விரையமாக்குவதும், ஊதாரித்தனமாக திரிவதும் வேலை. வீட்டில் மனைவியை கொடுமைப்படுத்துவதையும், மம்முட்டி ஒருவரை பார்த்தவுடன் அடங்கி நடப்பதுமாக இருக்கின்றனர்.
தாதா மைக்கேல் மம்முட்டி
குடும்பத்தின் இரண்டாவது மகனாக மைக்கேலாக மம்முட்டி வருகிறார். சட்டக்கல்லூரி மாணவர் தந்தைக்காக பழிவாங்கி ஜெயிலுக்கு போய்விட்டு வருகிறார். குடும்ப பாரம் தன் மீது விழுந்ததாலும், கொலை வழக்கில் ஜெயிலுக்கு போனதாலும் காதலி இருந்தும் மணக்காமல் தனி ஆளாக வாழ்கிறார். கிட்டத்தட்ட தாதா.
குபேர குடும்பத்தில் அத்தனைபேரும் எதிரிகள்
மிகப்பெரிய குபேரக் குடும்பத்தில் மூத்த மகனாக இல்லையென்றாலும் அனைத்து பொறுப்புகளும் மைக்கேலிடம் (மம்முட்டி) வருகின்றன. அவர் வைத்ததுதான் சட்டம் அவருக்கு அடங்கி அனைவரும் நடக்கின்றனர். ஊரில் வரும் பஞ்சாயத்துகளும் நாயகன் பாணியில் சரி செய்து தருகிறார். அதனால் ஊருக்குள் அவர் மீது மக்களுக்கு மிகுந்த மரியாதை. மூன்றாவது மகன் சர்ச் ஃபாதர். பெண் விஷயத்தில் வீக், குடும்ப விஷயத்தில் மம்முட்டிக்கு எதிரானவர். தங்கை காவல் அதிகாரியை மணந்துள்ளார், அந்த காவல் அதிகாரிக்கும் மம்முட்டியை பிடிக்காது.
மிரட்டும் மம்முட்டி
குடும்பங்கள் தனித்தனியே இருந்தாலும் அனைவரும் மம்முட்டி மீது பயம் கலந்த மரியாதையுடன் பழகுவதை பல காட்சிகளில் இயக்குநர் வைத்திருப்பார். மம்முட்டி வரும் காட்சிகளில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து எதிர்க்க முடியாமல் சிலர் புழுங்குவதையும் அழகாக காட்டியிருப்பார்.
நண்பனை மறக்காத மம்முட்டி
ஒரு மோதலில் தன்னை காப்பாற்றி தனக்காக உயிர் விட்ட நண்பன் குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல் பார்த்துக்கொள்கிறார் மம்முட்டி. நண்பனின் மனைவியாக நதியா சில காட்சிகள் வந்துபோகிறார்.
பழிவாங்க மும்பையிலிருந்து வரும் தாதா
மம்முட்டியால் கொல்லப்பட்ட இரண்டு பேரின் மகன் சுதேவ் நாயர் மும்பையில் தாதாவாக இருக்கிறார். அவரது தாத்தா பாட்டியாக மறைந்த நெடுமுடி வேணு, கே.பி.ஏ.சி.லலிதா வருகின்றனர். மக்ன்கள் மரணத்திற்கு பழி வாங்க துடிக்கும் இயலாமை கேரக்டரை இருவரும் சரியாக செய்துள்ளனர். மம்முட்டியை கொல்ல பேரன் கொச்சி வருகிறார். அவரை பழிவாங்க தாத்தா பாட்டி தூண்டி விடுகின்றனர்.
விஸ்வரூபம் எடுக்கும் மம்முட்டி
மம்முட்டியை பழிவாங்க வரும் பேரன் சுதேவ் நாயருடன் மம்முட்டியின் சகோதரர் மகன்கள், தம்பி, தங்கை கணவன் இணைகிறார்கள். நண்பனின் மகன் ஸ்ரீநாத் பாஸியை சுதேவ் நாயரின் ஆட்களை கொலை செய்ய அண்ணன் ஷௌபின் சாகர் கொதித்தெழுகிறார். இதனால் சீண்டப்படும் மம்முட்டி விஸ்வரூப அவதாரம் எடுப்பதே மீதியுள்ள கதை.
மீதி கதை இதுவா?
ஒரு கட்டத்தில் சுதேவ் நாயரின் ஆட்கள் மம்முட்டியை கொலை செய்ய முயற்சிக்க அதில் கடும் தாக்குதலுக்கு ஆளான மம்முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் மருத்துவமனையிலிருந்தே எதிராளிகளை மம்முட்டி பழிவாங்குகிறாரா? என்பதே கதை.
கேமராமேன், எடிட்டர் அசத்தும் காட்சிகள்
கதை பழைய காட் ஃபாதர், நாயகன் பட டைப் கதை. மம்முட்டியை தவிர யார் நடித்தாலும் படத்தை பார்க்க முடியாது. படம் மெகா ஹிட் ஆகியுள்ளது. படம் முழுவதும் ஒரே லொக்கேஷன் வீடு, சில இடங்கள் மட்டுமே. படம் 1990 களில் நடப்பதுபோன்று காட்டுகிறார்கள். கேமராமேன் அனந்த் சி சந்திரனின் கண்கள் அருமையாக அனைத்தையும் காட்சிப்படுத்தியுள்ளன. அவருக்கு இணையாக எடிட்டிங்கில் விளையாடியுள்ளார் விவேக் ஹர்ஷன்.
மிரட்டும் இசை
படத்தின் இன்னொரு பலம் சுஷின் ஷியாமின் பின்னணி இசை. மம்முட்டி நடந்து வரும் காட்சிகளில் தனி இசை அதிர வைக்கிறது. காட்சிக்கு காட்சி கேமராமேன், எடிட்டர், இசையமைப்பாளர் மூவரும் இணைந்து அசத்துகிறார்கள். இவர்கள் புண்ணியத்தில் பழைய கான்சப்ட் படத்தை சலிப்பில்லாமல் ரசிகர்கள் பார்க்க முடிகிறது.
மம்முட்டியின் தனி ஆவர்த்தனம்
படத்தில் முக்கிய பங்கு வகிப்பது மம்முட்டியின் ஹேர் ஸ்டைல், நடை, உடை உள்ளிட்டவை. மம்முட்டியின் மகன் படம் வெளியான நேரத்தில் தான் இன்னும் கதாநாயகன் தான் என பல இடங்களில் நிரூபிக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளிலும், வில்லன் தன்னிடம் பேரம் பேச வரும்போது வெளியே போ என்று துரத்தும் காட்சியிலும் கலக்குகிறார்.
அமெச்சூர் தனமான காட்சிகள்
படத்தில் பல காட்சிகள் வசனங்கள் மூலம் மட்டுமே சொல்லப்படுகிறது. ஊரில் செல்வாக்கு மிக்கவர் என வசனம் பேசுகிறார்கள், மும்பையிலிருந்து கொல்ல வருபவர் சாதாரண வில்லன்போல் வந்து ஒன்றுமில்லாமல் திரிகிறார். இதுபோன்ற காட்சிகள் அமெச்சூர்த்தனமாக உள்ளது. மம்முட்டிக்காக ஒரு தடவை பார்க்கலாம்.
பழைய கதை புதிய ஸ்டைல் இயக்குநர் சாதிக்கிறார்
சாக்கோ. நதியா, திலீஷ் போத்தன், ஃபர்கான் ஃபாசில், அனசுயா, ஜினு ஜோசஃப், ஹரிஷ் உத்தமன், அனகா சௌபின் சஹீர் ஆகியோரை வைத்து பாத்திரங்களை அழகாக படமாக்கி தொய்வடையாமல் படத்தை கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் அமல் நீரத். பழைய பாத்திரத்தில் புதிய உணவை அருசுவையாக படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











