Parris Jeyaraj Review திரையரங்குகள் சிரிப்பலையில்... பாரிஸ் ஜெயராஜ் திரைவிமர்சனம்!
சென்னை : காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் சந்தானம் நடித்திருக்கும் பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
இயக்குனர் ஜான்சன் உடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் இத்திரைப்படம் கலகலப்பான காமெடி படமாக உருவாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கலகலப்பான காமெடி கலர்ஃபுல்லான காட்சி அமைப்புகள் சந்தானத்தின் வழக்கமான நக்கல் பேச்சு என காட்சிக்கு காட்சி அனைவரையும் சிரிக்க வைத்து படுஜோராக கொண்டாட வைத்துள்ளது பாரிஸ் ஜெயராஜ்.
ஹீரோவாக
காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக வலம் வருவது அவ்வளவு எளிதான காரியமில்லை. தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலையை காட்ட ஆரம்பித்த நடிகர் சந்தானம் இப்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். திரைப் படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் சந்தானம் தான் பிறந்து வளர்ந்த சென்னை சுற்றுச்சூழலில் நடக்கும் கதைகளையே தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
வெற்றிக் கூட்டணி
சந்தானம் நடிக்கும் படம் என்றால் அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என சொல்லப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் ஜான்சன் கே சந்தானம் கூட்டணி முதல்முறையாக இணைந்து பணியாற்றிய ஏ1 ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிபெற்றது. இந்த நிலையில் வெற்றிக் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் பாரிஸ் ஜெயராஜ் படமும் அதே பாணியில் கலகலப்பான காமெடியுடன் உருவாகி உள்ளது.
அதிக முக்கியத்துவம்
அனைகா சோடி, விஜே சஷ்டிகா ராஜேந்திரன், மாருதி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. வழக்கமான சந்தானம் படங்களில் இருக்கின்ற மாதிரியே காமெடிக்கு இந்தப்படத்திலும் முக்கியத்துவம் கொடுத்திருக்க திரையரங்குகளில் கூட்டம் அள்ளுகிறது. ஜான்சன் முதல் படத்தை விடவும் இந்த படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பதால் காட்சிக்கு காட்சி அனைவரும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.
பாடல்கள் அனைத்தும் மஜாவா
முதல் பாதி வழக்கம்போல சென்றாலும் இரண்டாம் பாதியில் சிரிக்காதவர்கள் கூட மெய்மறந்து சிரித்து விடுவார்கள் அந்த அளவிற்கு ஜான்சன் கே, சந்தானம் காம்போ மிக நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. முழுக்க முழுக்க வடசென்னையில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்க பாடல்கள் அனைத்தும் மஜாவா பட்டையைக் கிளப்புகிறது.
மலரும் காதல்
இந்த படத்தில் நடிகர் சந்தானம் பாரிஸ் பகுதியில் உள்ள கானா பாடகர் ஜெயராஜ் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயராஜின் முதல் காதல் தோல்வியடைய பின்னர் திவ்யாவைக் (அனைகா) காதலிக்க ஆரம்பிக்கிறார். இரு வீட்டு தரப்பினறும் இவர்களுடைய காதலுக்கு மறுப்பு தெரிவிக்க இதை தாண்டி இவர்களுடைய காதல் எப்படி ஒன்று சேர்ந்தது என்பது மீதி கதை.
முக்கியத்துவம் அளிக்கிறார்
படத்தில் சந்தானம் தான் முன்னனி கதாப்பாத்திரம் என்றாலும், அவருடைய தந்தை கதாபத்திரத்தில் நடித்துள்ள பிருத்விராஜ் தன்னுடைய பங்கை சிறப்பாக அளித்து படத்திற்கு முக்கியத்தும் அளிக்கிறார். சந்தானம் - பிருத்விராஜ் இடையேயான காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளது படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது. படத்தின் கடைசியில் வரும் காட்சிகள் ஒட்டு மொத்தமாக சிரிப்பு வெடி . நடிகர் சேஷு செய்யும் சேட்டை அமர்க்களம் .
ராம்காம்
ஜாலியாக ஒரு வடசென்னை ரவுண்டு சென்ற பீல் வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம் . ஒரு பக்கம் காமெடி ஒரு பக்கம் காதல் என்று கலந்து கட்டி ஒரு ராம்காம் ( ரோமான்டிக் காமெடி ) படம் வித்தியாசமான வடசென்னை பகுதியில் அதுவும் அந்த பகுதியின் கானா பாடல்களுடன் பார்ப்பது இனிது இனிது தான் . பழைய படமான நாட்டாமை படத்தில் செந்தில் கவுண்டமணி செய்த ஒரு காமெடி சீன் அடிக்கடி ஞாபகம் வந்தாலும் அந்த ஒன் லைனை வைத்து ஒரு முழு படமே எடுக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் .


Click it and Unblock the Notifications











