Poikkal Kuthirai Review: ஒரு கால் இல்லாமல் சாதித்தாரா பிரபுதேவா? பொய்க்கால் குதிரை விமர்சனம்!
நடிகர்கள்: பிரபுதேவா, ரைசா வில்சன், வரலக்ஷ்மி சரத்குமார்
இசை: இமான்
இயக்கம்: சந்தோஷ் பி. ஜெயக்குமார்
சென்னை: பொன் மாணிக்கவேல், தேள், மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை என தொடர்ந்து வரிசையாக பல படங்களை ரிலீஸ் செய்து வருகிறார் பிரபுதேவா.
குறைந்த பட்ச லாபம் கிடைத்தால் போதும் என நினைத்து கம்மி பட்ஜெட்டில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் படத்துக்கு பிறகு மீண்டும் ஏ சான்றிதழ் அல்லாத படமாக இயக்கி உள்ள இந்த பொய்கால் குதிரை ஓடியதா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..
என்ன கதை
விபத்து ஒன்றில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் கதிரவன் (பிரபுதேவா). ஒரு கால் இழந்தாலும் தனது அன்பு மகளை காப்பாற்ற வேண்டும் என வாழ்ந்து வரும் அவருக்கு, ஒரு நாள் திடீரென மகளுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கு, பல லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கின்றனர். பெரும் பணம் படைத்த ருத்ராவின் (வரலஷ்மி சரத்குமார்) மகளை கடத்தி பண்ம் கேட்கலாம் என்கிற பிளான் போட, ஆனால், வரலக்ஷ்மியிடம் சிக்கிக் கொள்கிறார் பிரபுதேவா. அப்படி இருந்தும் அவரது குழந்தையை வேறு ஒருவர் கடத்த அந்த குழந்தையை பிரபுதேவா காப்பாற்றினாரா? இல்லையா? கடத்தியது யார் என்பது தான் பொய்க்கால் குதிரை படத்தின் கதை.
மயில புடிச்சி கால ஒடைச்சு
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனக் கொண்டாடப்படும் பிரபுதேவா நடிக்கிறார் என்றாலே படத்தில் 4 அல்லது 5 பாடல்களை வைத்து தாறுமாறான ஸ்டெப்ஸை போட்டு ஓட்டி விடலாம் என இயக்குநர் சந்தோஷ் நினைக்காமல், பிரபுதேவாவுக்கு ஒரு காலே இல்லை என ஸ்க்ரிப்ட் எழுதியதும் அதற்கு ஓகே சொல்லி பிரபுதேவா நடித்ததும் நிஜமாகவே பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான். ஒரு கால் இல்லாதவராகவும், மகள் வாங்கிக் கொடுக்கும் பிராஸ்தெடிக் காலுடன் நடிக்கும் காட்சிகளிலும், ஆரம்பத்தில் வரும் ஓப்பனிங் பாடல் மற்றும் பேருந்தில் பேட் டச் செய்யும் பொறுக்கிகளை அடித்து வெளுப்பதும் என அசத்தி உள்ளார்.
கொஞ்சம் கூட கவலையே இல்லை
பிரபுதேவா தனது குழந்தையை கடத்த திட்டம் போடுவதை அறிந்து கொண்டு அவரது ஆட்களை வைத்து பிரபுதேவாவை மடக்கிப் பிடிக்கும் காட்சிகளில் வரலக்ஷ்மி சரத்குமார் மீண்டும் சர்க்கார் படத்தின் பாப்பா கதாபாத்திரத்தை கண் முன்னே காட்டுகிறார். ஆனால், தனது மகள் கடத்தப்பட்டது தெரிந்த பின்னரும், படம் முழுக்க சீரியல் நடிகையை போல ஃபுல் மேக்கப்புடன் வருவதை இயக்குநர் தவிர்த்து இருக்கலாம். சில மான்டேஜ் சீன்களில் மகளுக்காக ஃபீல் செய்ய சொல்ல ஃபீல் செய்துள்ளார். மற்றபடி கதையோடும் கதாபாத்திரத்துடனும் ஒன்றவில்லை.
வேம்புலிக்கு நல்ல ரோல்
சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து அசத்திய நடிகர் ஜான் கொக்கன் தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார். இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமாரின் கணவராக தேவா எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதையிலும் அவரது கதாபாத்திரம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.
பிளஸ்
ஆபாச படங்களை மட்டுமே இயக்கும் இயக்குநர் என்கிற பெயரை மாற்ற சந்தோஷ் பி. ஜெயக்குமார் போராடியிருப்பது நன்றாகவே தெரிகிறது. பொய்க்கால் குதிரை டைட்டிலில் இருந்து மகளின் சந்தோஷத்துக்காக வீட்டையே நீச்சல் குளமாக மாற்றும் அப்பாவின் அன்பு என அப்பா - மகள் பாண்டிங்கை ரசிக்கும்படியாக கொடுத்தது. கடைசி வரை யார் வில்லன் என்கிற ட்விஸ்ட்டை காப்பாற்ற போராடியது உள்ளிட்ட விஷயங்கள் படத்திற்கு பலம் தான். பிரகாஷ் ராஜ், ரைசா வில்சன், ஜெகன் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள போர்ஷனை சரியாக செய்துள்ளனர். ஒரு கால் இல்லாத நபர் எப்படி சண்டை போடுவார், சண்டை போட்டால் நம்பும்படியாக இருக்க வேண்டுமே என்பதை பார்த்து பார்த்து செய்து தினேஷ் காசி மாஸ்டர் அப்ளாஸ் அள்ளுகிறார்.
மைனஸ்
படத்தின் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்தமாக குறைகிறது. வில்லனை மறைக்க என்ன தான் ட்விஸ்ட் வைத்தாலும், காஸ்டிங்கிலேயே கண்டு பிடிக்கும் அளவுக்கு இருப்பது மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. வரலக்ஷ்மி சரத்குமாரின் போர்ஷனை இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம். திரைக்கதையில் சறுக்கும் இடங்களில் கூடுதல் கவனத்தை செய்திருந்தால் இன்னமும் படம் அருமையான படமாக அமைந்திருக்கும். பொய்க்கால் குதிரை - ஒரு முறை பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











