Putham Puthu Kaalai Review: காதல் முத்திரையில் இருந்து மாறிய கவுதம் மேனன்!
கொரோனா காலகட்டத்தில் நடக்கும் ஐந்து வெவ்வேறு கதைகளின் தொகுப்புதான் புத்தம் புது காலை!
சுதா கொங்கராவின், இளமை இதோ இதோ, கவுதம் வாசுதேவ் மேனனின், அவரும் நானும் அவளும் நானும், சுகாசினி மணிரத்னம் இயக்கி இருக்கும் காஃபி எனி ஒன்?, ராஜீவ் மேனனின் ரியூனியன், கார்த்திக் சுப்புராஜின் மிராக்கிள். இந்த ஐந்து குறும்படத்தை ஒன்றாக்கி பெரும்படமாக்கி இருக்கிறார்கள்.
எந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்துவிடாத எளிமையான கதையை கொண்ட படங்கள் இவை.
கல்யாணி கெமிஸ்ட்ரி
இளமை இதோ இதோ கதை, மனைவியை இழந்த வயதான ஒருவருக்கும் கணவனை இழந்த வயதான பெண்ணுக்குமான காதலை, செல்லச் சண்டை, சின்ன ஏக்கம், பெரிய ஃபீலிங் என கவிதையாகச் சொல்லி இருக்கிறார், சுதா கொங்கரா. பெரியவர்களாக ஜெயராம், ஊர்வசி நடிப்பில் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவர்களின் இளவயது தோற்றத்தில் வரும் காளிதாஸ், கல்யாணி பிரியதர்ஷன் கெமிஸ்ட்ரி நச்.
காதல் கதைகளில்
கவுதம் மேனனின் 'அவரும் நானும் அவளும் நானும்', தாத்தாவுக்கும் பேத்திக்குமான அன்பையும் காதல் திருமணம் செய்துகொண்ட தனது அம்மாவை ஏற்காத தாத்தாவின் பாசத்தையும் நெகிழ்ச்சியாகச் சொல்கிறது. வழக்கமாக மாடர்ன் காதல் கதைகளில் டச்சிங் கொடுக்கும் டைரக்டர் கவுதம், இதில் தாத்தாவுக்கும் பேத்திக்குமான சென்டிமென்ட்டில் மனதைத் தொடுகிறார்.
பேத்தியாக ரிதுவர்மா
ரிடையர்ட் சயின்டிஸ்ட் கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கரும் பேத்தியாக ரிதுவர்மாவும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். சுகாசினியின் காஃபி எனி ஒன்? கதையில் கோமா நிலைக்குச் சென்றுவிட்ட தனது மனைவியை அன்பால் குணப்படுத்த முயற்சிக்கிறார் கணவர். வெளிநாட்டில் இருந்து வரும் மகள்கள் மருத்துவமனைக்குதான் கொண்டு செல்லவேண்டும் என்கிறார்கள். அதை மீறி, தன் பாசத்தால் மனைவியை காப்பாற்றினாரா என்பதுதான் கதை.
ராஜீவ் மேனனின் ரீயூனியன்
சுகாசினி, அனு ஹாசன், ஸ்ருதிஹாசன் என கமல் குடும்ப படம் போலவே இது இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற கதைகள் வந்திருப்பதாலும் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியும் என்பதாலும் வழக்கமானதாகவே இருக்கிறது. ராஜீவ் மேனனின் ரீயூனியன், தன் வீட்டுக்கு வரும் பள்ளித்தோழி ஆண்ட்ரியாவுக்கும் சிக்கில் குருச்சரணுக்குமான காதலாகும் நட்பை சொல்லும் படம். ஒவ்வொரு ஷாட்டும் மாடர்னாக, பளிச்சென இருக்கும் அளவுக்கு கதையில் அழுத்தம் இல்லை.
மிராக்கிள் நடந்ததா
கார்த்திக் சுப்புராஜின் மிராக்கிள், வழக்கம் போல அவர் ஸ்டைலில் இருக்கிறது. திருடச் செல்லும் பாபி சிம்மா, முத்துக்குமார் வாழ்க்கையில் மிராக்கிள் நடந்ததா என்பதை கொஞ்சம் கிண்டலாகவும் ட்விஸ்ட்டுடனும் சொல்லி இருக்கும் படம். பாபியும் முத்துக்குமாரும் நடிப்பால் நிறைவு செய்கிறார்கள், தங்கள் கேரக்டரை.
அவ்வளவு நாடகத்தனம்
இதன், முதல் நான்கு கதைகளும் மேல்தட்டு குடும்பங்களில் நடக்கும் விஷயங்களை காட்டுகிறது. அதனால்தானோ, என்னவோ கதையோடு ஒன்ற முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே ஷூட்டிங், குறைவான கேரக்டர்கள், அதிகமான வசனங்கள் என்பதால் காட்சிகளில் அவ்வளவு நாடகத்தனம். அதையும் மீறி, இந்த கொரோனா காலக்கட்டத்தில் பாசிட்டிவ் ஃபீலிங்கை தருகிறது, இந்த புத்தம் புது காலை.


Click it and Unblock the Notifications











