Sathru Review: திருடன் போலீஸ் ஆட்டமாடும் சத்ரு... மிரட்டும் வில்லன்.. அசத்தும் போலீஸ்! விமர்சனம்
போலீஸ் - திருடன் இடையே நடக்கும் ஆடு புலியாட்டம் தான் சத்ரு படத்தின் கதை.
Recommended Video

சென்னை: பலமான எதிரியிடம் சிக்கி தவித்து, அவரை வீழ்த்தும் போலீஸ் ஹீரோவின் கதை தான் சத்ரு.
கதிர் ஒரு நேர்மையான ரப் அண்ட் டஃப் போலீஸ் அதிகாரி. உதவி ஆய்வாளராக இருக்கும் அவர் உயர் அதிகாரிகளுக்கு கூட கட்டுப்படாதவர். இதனால் வேலைக்கு சேர்ந்த இரண்டு வருடங்களில் இரண்டு முறை சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். இந்நிலையில் லகுபரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து குழந்தைகளை கடத்தி அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்துகிறார்கள். அப்போது கதில் குறிக்கிட்டு, லகுபரண் டீமில் இருக்கும் ஒருவரை போட்டுத் தள்ளுகிறார். இதனால் வெறியாகும் லகுபரண் மற்றும் டீம் கதிரையும், அவரது குடும்பத்தையும் பழிவாங்க துடிக்கிறார்கள். இந்த திருடன் போலீஸ் விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் மீதிக் கதை.

காக்க காக்க தொடங்கி, தமிழ் சினிமாவில் இதுபோன்று ஏராளமான போலீஸ் திருடன் கதைகள் வந்துள்ளன. ஆனால், எந்த சமரசமும் இல்லாமல், எடுத்துக்கொண்ட கதையை மிகவும் நேர்த்தியாக, விறுவிறுப்பாக சொன்ன விதத்தில் வித்தியாசப்பட்டு கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் நவீன் நஞ்சுண்டன்.
முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக நகர்கிறது படம். பார்வையாளர்களின் கவனம் திரையில் இருந்த அகலாத வண்ணம் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். ஹீரோவுக்கும், வில்லனுக்குமான மோதல் காட்சிகளை எதார்த்தமாக காண்பித்திருக்கிறார். முருகனின் சூரசம்ஹார கதையை ஒப்பிட்டு, புத்திசாலிதனமாக திரைக்கதை அமைத்திருப்பதை பாராட்ட வேண்டும்.

பரியேறும் பெருமாளை அடுத்து, கதிரின் சினிமா கேரியரில் இது முக்கியமான படம். இதுவரை கதையின் நாயகனாக நடித்து வந்த கதிரை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்து செல்கிறது சத்ரு. மிகவும் கமர்சியலாகவும் இல்லாமல், அதே நேரம் சுவாரஸ்யமாகவும் படம் இருப்பதால், இந்த படம் நிச்சயம் கமர்சியல் ஏரியா பக்கம் கதிரை அழைத்து செல்லும்.
காக்கி யூனிபார்ம், முறுக்கெறிய உடல், ரேபான் க்ளாஸ் என போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டுகிறார். திருடர்களில் இருந்து உயரதிகாரிகள் வரை அசால்டாக கையாள்வது, எதிரி யார் என தெரியாமல் திண்டாடுவது என லைக்ஸ் அள்ளுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார்.

படத்தின் மையமே வில்லன் கதாபாத்திரம் தான். யாருடா இந்த பையன் என கேட்கும் அளவிற்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார் லகுபரன். கொடூரமான செயல்களை குற்ற உணர்ச்சியே இல்லாமல் அசால்டாக செய்து மிரட்டுகிறார். ஆனால் சில காட்சிகளில் ஒரே மாதிரி ரியாக்ஷன் கொடுப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். லகுபரனுடன் வில்லன் டீமில் வரும் கியான், சத்து உள்ளிட்ட பசங்களும் சிறப்பாக வில்லத்தனம் செய்திருக்கிறார்கள். காட்டியிருக்கிறார்கள்.
சிருஷ்டி டங்கே பேருக்கு தான் ஹீரோயின். வழக்கமாக ஹீரோவுடன் டூயட் பாடவாவது ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் பாடல்கள் இல்லாததால், அந்த வாய்ப்பும் சிருஷ்டிக்கு இல்லை. கொஞ்ச நேரமே வந்தாலும், தனது கண்ணக்குழி அழகில் ரசிகர்களை மயக்குகிறார்.
சுஜா வருணிக்கு இந்த படத்தில் வில்லி ரோல். வழக்கம் போல் நன்றாகவே செய்திருக்கிறார். இவர்களை தவிர படத்தில் நீலிமா, பொன்வண்ணன், மாரிமுத்து, ரிஷி, பவன் என நிறைய பேர் நடித்துள்ளனர். அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

புதிதாக எதுவும் முயற்சிக்காமல், காட்சிகளுக்கு தகுந்தாற்போல் பின்னணி இசையமைத்திருக்கிறார் சூர்யபிரசாத். படத்தின் விறுவிறுப்புக்கு பின்னணி இசை நன்றாக உதவியிருக்கிறது.
முதல் காட்சியிலேயே இம்ப்ரஸ் செய்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. படம் ராவாக தெரிவதற்கு இவரின் ஒளிப்பதிவு முக்கிய காரணம். ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங்கில் படம் நகர்வதே தெரியவில்லை. திரைக்கதைக்கு தகுந்த மாதிரி விறுவிறுப்பாக எடிட் செய்திருக்கிறார்.

படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக திரைக்கதையில் அதிக கவனம் செலுத்திய இயக்குனர், கதையிலும் அதே அளவுக்கு கவனம் செலுத்தி இருக்கலாம். இதுபோல் திருடன் போலீஸ் கதைகள் ஏராளமாக வந்துவிட்டபடியால், சத்ருவின் கதை கொஞ்சம் பழசாக தெரிகிறது. அதேபோல் முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். ஹீரோவும் வில்லனும் சர்வ சாதாரணமாக ஏகப்பட்ட கொலைகளை செய்வதும், கொஞ்சம் ஓவர் டோஸாக இருக்கிறது.
போலீஸ் - திருடன் கதையை வித்தியாசமாக சொன்ன விதத்தில் சத்ரு தனித்து நிற்கிறான்.


Click it and Unblock the Notifications











