பகைக்கு பலியான பாண்டி… பண்ணையாரை பழிவாங்க காத்திருக்கும் முத்தையா: பேட்டைக்காளி விமர்சனம்
சென்னை: விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், 'பேட்டைக்காளி' என்ற இணையத் தொடரை தயாரித்துள்ளார்.
ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகும் 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ்ஸை ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் எபிசோட் கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது எபிசோட் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
தற்போதைய ஜல்லிக்கட்டு
வெற்றிமாறன் தனது 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' மூலம் 'பேட்டைக்காளி' வெப் சீரிஸை தயாரித்துள்ளார். ல. ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த பேட்டைக்காளி வெப் சீரிஸ், ஜல்லிக்கட்டை பின்னனியாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஆனால், வழக்கமாக தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ஹீரோயிசமான ஜல்லிக்கட்டு, அதன் கொண்டாட்டங்கள் இல்லாமல் யதார்த்தமான வாழ்வியலோடு உருவாகியுள்ளது. முதல் எபிசோட் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், தற்போது இரண்டாவது எபிசோட் ரிலீஸாகியுள்ளது.
பகையை தீர்த்த பண்ணையார்
ஜாதிய அடக்குமுறை, வன்மம், ஜல்லிக்கட்டுப் போட்டியில் கிடைக்கும் கெளரவம், அதற்காக எதையும் செய்யத் துணியும் பிடிவாதம் என பல அடுக்குகளாக முதல் எபிசோடிலேயே கதையின் போக்கு இதுதான் எனக் காட்டியிருந்தார் இயக்குநர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பண்ணையார் வேல ராமமூர்த்தியின் மாட்டைபிடித்து அவரை அவமானப்படுத்துகிறார் கலையரசன். அதோடு பிடிபட்ட காளையும் இறந்துவிட, அதனால் கலையரசனின் ஊரைச் சேர்ந்தவர்களை பண்ணையாரின் ஆட்கள் அடித்து துன்புறுத்துகிறார்கள். இதனால், ஊராரின் வேண்டுகோளை ஏற்று பண்ணையாரிடம் மன்னிப்புக் கேட்கச் செல்கிறார் பாண்டி. செல்லும் இடத்தில் தகராறு வர பண்ணையாரின் ஆட்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு காட்டுக்குள் தனது மாமா முத்தையாவுடன் பதுங்கி விடுகிறார்.
பழிக்குப் பழி வாங்கும் முத்தையா
ஆனால், எதிர்பாராதவிதமாக தனது முறை பெண்ணை பார்க்கச் சென்றுவிட்டு திரும்பும் போது மாயமாகும் பாண்டி, அதன்பிறகு சடலமாகவே மீட்கப்படுகிறார். மருமகன் பாண்டியை பண்ணையார் தான் கொலை செய்திருக்க வேண்டும் என அவரை பழிவாங்க துடிக்கும் முத்தையா, பண்ணையாரின் டிரைவரை மட்டும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார். ஆனால், இந்தத் தாக்குதலில் விபத்தில் சிக்கிய பண்ணையார் பார்வை பறிபோன நிலையில் வீடு திரும்புகிறார். இது பண்ணையாரின் அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த அவரது மகனுக்கு சாதகமாகிப் போகிறது. அதேபோல், பண்ணையாரின் நிலைமையை பார்த்து அவரது இளம் மனைவியும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
கொலை செய்தது யார்?
முதல் எபிசோடை பார்க்கும் போது, பாண்டி கேரக்டரில் நடித்துள்ள கலையரசன் தான் பேட்டைக்காளியின் நாயகனாக தோன்றினார். ஆனால், அவர் இரண்டாவது எபிசோடிலேயே உயிரிழந்து விடுகிறார். முக்கியமாக அவரை கொலை செய்தது யார் என்பது இன்னும் தெரியவரவில்லை. முத்தையா கேரக்டரில் நடித்துள்ள கிஷோர், பண்ணையாரான வேல ராமமூர்த்தியை பழிவாங்க முடியாமல் மீண்டும் காட்டுக்குள் பதுங்கி விடுகிறார். பண்ணையாரின் அதிகாரம் அவரது மகனின் கைகளுக்கு செல்கிறது. முதல் இரண்டு சீசன்களிலேயே திரைக்கதை அசுர வேகத்தில் சென்றால், அடுத்து வரும் எபிசோட்கள் எப்படி இருக்கும் என யூகிக்கவே முடியவில்லை. அடுத்த வாரம் வெளியாகும் மூண்றாவது எபிசோட் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











