குற்றம் செய்தவன் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பான் - உத்தரவு மகாராஜா விமர்சனம்
டிஐடி நோயைப் பற்றிப் பேசுகிறது உத்தரவு மகாராஜா படம்.
இஸ்திரி தொழிலாளியான எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ரவி (உதயா). இஸ்திரிக்கு வந்த ஒரு கோட் சூட்டை அணிய வேண்டும் என மகன் (சிறு வயதில்) ஆசைப்பட, அதை நிறைவேற்றுகிறார் தந்தை. அப்போது எதிர்பாராதவிதமாக கோட்டின் உரிமையாளர் இதனை பார்த்துவிட, குடும்பமே அவமானப்படுகிறது. இதனால் டி.ஐ.டி எனப்படும் மனநோய்க்கு ஆளாகிறார் உதயா. வளர்ந்து வாலிபனான பிறகும் அவருக்கு அந்த பாதிப்பு தொடர்கிறது. யாரோ ஒரு ராஜாவின் குரல் உதயாவை தொந்தரவு செய்கிறது. இதனால் மரணம் ஏற்படும் அளவுக்கு பாதிக்கப்படுகிறார். யார் இந்த ராஜா? உதயாவுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் என்பதே கதை.

முதல் படத்தை திரில்லர் கதையாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆசிப் குரைஷி. நல்ல கதை கரு தான். ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. அதேபோல பாத்திரப்படைப்புகளிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. மற்றபடி முதல் படத்திலே இந்த அளவுக்கு டெக்னாலஜி விஷயங்களை ஆராய்ந்து முயற்சித்திருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.
பல ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர் உதயாவிற்கு இந்த படம் வெற்றியை தருமா என்பது சந்தேகமே. மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனாக நிறைய மெனக்கெடல்களுடன், வித்தியாசமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அது பல இடங்களில் ஓவர் ஆட்டிங் ஆகிவிடுகிறது.

படத்தில் மூன்று நாயகிகள். அதில் பிளாஷ் பேக் காட்சியில் கிராமத்து பெண்ணாக வருபவர் மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.
படத்தில் பிரபுவின் கதாபாத்திரம் என்ன என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் தனது கம்பீரமான நடிப்பால் வழக்கம் போல் குறைகளை நிறையாக்கிவிடுகிறார்.
ஸ்ரீமனின் சீரியஸ் நடிப்பு படத்தில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதேசமயம் கோவை சரளாவுடன் சேர்ந்து அவர் செய்யு காமெடி, கடுப்பேத்துறாங்க மை லார்டு மொமன்ட். இவர்களை தவிர, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, மனோபாலா, தனஞ்ஜெயன், ஆடம்ஸ் என நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பாடல்களைவிட பின்னணி இசையில் பின்னியிருக்கிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார். ஆனால் முதலில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் குதிரை ஓசை, ஒரு கட்டத்துக்கு மேல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒலிக்கலவையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் காட்சிகளும், சேசிங் காட்சிகளும் சிறப்பு. எடிட்டர் சத்ய நாராயணா இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால் படத்தில் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும்.

மொத்தத்தில் இந்த மகாராஜாவுக்கு ரசிகனின் உத்தரவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











