'டுட்டு'வின் மூன்றுகட்ட பயணத்தை சொல்லும் வண்டி..! விமர்சனம்
ஒரு வண்டி, சில மனிதர்கள், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் 'வண்டி' திரைப்படம்.
எந்தவொரு வேலையிலும் நிரந்தரமாக இருக்காமல், அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பவர் விதார்த். அவரது காதலி பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சாந்தினி. விதார்த்தின் இரண்டு நண்பர்களில் ஒருவர் ஸ்ரீராம். ரயில் நிலைய பைக் பார்க்கிங்கில் வேலை பார்ப்பவர். மற்றொருவர் கிஷோர் குமார். தள்ளுவண்டி கடையில் தோசை மாஸ்டர். சாந்தினியின் தந்தை ரவி. இவர்கள் அனைவரும் சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டில் குடியிருக்கிறார்கள். இந்த பகுதியின் ரவுடி அருள்தாஸ். போலீஸ் ஜான் விஜய். இவர்களுக்கு ஒரு செல்போனாலும், டுட்டு எனும் வண்டியாலும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை டுட்டுவின் பார்வையில் இருந்து விவரிக்கிறது படம்.

ஒரு சின்ன கதைக்கரு எடுத்து கொண்டு அதை சுற்றி சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ரஜீஷ் பாலா. பிளாக் காமெடி வகை படம் என்பதால், கதையைச் சுற்றி இல்லாமல், கதாபாத்திரங்களைச் சுற்றியே ஓடுகிறது வண்டி. டுட்டு உள்பட எல்லா கதாபாத்திரமுமே கச்சிதமாக இருக்கின்றன. குறிப்பாக டுட்டுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கும் மொட்ட ராஜேந்திரனின் குரல் கனக்கச்சிதம்.
அதேபோல கதையையும், கதாபாத்திரங்களையும் விவரிக்க இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கும் 'அவருடைய' குரல் காமெடிக்கு கேரண்டி சொல்கிறது. இறுதி காட்சி வரை அந்த குரலை பயன்படுத்தி இருப்பது, படத்துக்கு பெரிய பிளஸ்.
விதார்த் உள்பட படத்தில் எந்தவொரு கதாபாத்திரத்திற்கு பெர்பார்ம் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஜஸ்ட் லைக் தட் காட்சிகளுக்கு தகுந்த மாதிரி ரியாக்ட் செய்துவிட்டு சென்றால் போதுமானது. இருந்தாலும் தனது அண்டர்ப்ளே நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் விதார்த்.

சுவாதி கதாபாத்திரத்திற்கு யதார்த்தமாக பொருந்தி இருக்கிறார் சாந்தினி. அவரை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருந்தால், ரசிகர்கள் உற்சாகமடைந்திருப்பார்கள்.
ஜான் விஜய்க்கு வழக்குமான போலீஸ் கதாபாத்திரம் தான் என்றாலும், இந்த படத்தில் வேறுபட்டு தெரிகிறார். காமெடி ஏரியாவில் கலக்கி இருக்கிறார். சாந்தினியின் அப்பாவாக நடித்திருக்கும் டி.ரவி, ஏரியா ரவுடி அருள்தாஸ், நண்பர்களாக வரும் ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார் மற்றும் வில்லன்களாக வரும் டியுட் பசங்க என எல்லோருமே சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
பின்னணி இசையை நன்றாக ஸ்கோர் செய்திருக்கும் சூரஜ் எஸ்.குரூப், பாடல்களில் கோட்டைவிட்டிருக்கிறார். ராஜேஷ் நாராயணனின் ஒளிப்பதிவும், ரிசால் ஜெய்னியின் எடிட்டிங்கும் படத்தை மெருகேற்றியிருக்கிறது.
பிளாக் காமெடி படம் என்பதற்காக படம் முழுக்க உரையாடல்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது மிகப்பெரிய மைனஸ். ஒருகட்டத்தில் போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. அதேபோல முதல்பாதி முழுவதும் பிரச்சினைக்குள் செல்லாமல், அறிமுகத்திலேயே வண்டியை ஓட்டுவதும் ஸ்பீட் பிரேக்கர்களாக இருக்கின்றன.
அதேபோல் நிறைய இடங்களில் இது தான் கதை என எளிதாக யூகித்துவிட முடிகிறது. வ்சனங்களிலும், காமெடி ஏரியாவிலும் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம். தெளிவான திரைக்கதையாக இருந்தாலும், சில காட்சிகளின் நீளத்தை இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால், இந்த வண்டியின் பயணம் சுகமானதாக அமைந்திருக்கும்.


Click it and Unblock the Notifications











