Victim anthrology Review...கொட்ட பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்...ரசிக்க வைத்ததா?
குறும்பட பெயர் : கொட்ட பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்
நடிகர்கள் : நாசர், தம்பி ராமைய்யா, விக்னேஷ்காந்த்
இயக்கம் : சிம்புதேவன்
சென்னை : சோனி லைவ்வில் வெளியாகியுள்ள அந்தாலஜி படம், Victim Who is Next?. 5 கதை, 5 டைரக்டர்கள் இயக்கி உள்ளனர்.இதில் இரண்டாவது கதையாக உருவாகி உள்ளது 'கொட்டை பாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்' என்கிற கதை.
கதையின் டைட்டில், ஆரம்ப சீன், மொட்டை மாடி 8 அனைத்தையும் பார்த்ததும் அனைவரின் மனதிலும் முதலில் வருவது வினோதய சித்தம் படத்தை தவறாக பிளே செய்து பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்பது தான். 5 நிமிடத்திற்கு பிறகு தான் இது வேறு கதை என்ற உணர்வு பார்ப்பவர்களின் மனதில் வருகிறது.
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நாசர், தம்பி ராமைய்யா நடித்துள்ளனர். கொஞ்சம் கூட தனது ஃபார்மேட் மாறாமல், அப்படியே தொடங்குகிறது படம். பத்திரிக்கையாளராக தம்பி ராமையா. சம கால நிகழ்வுகள், கொரோனா காலத்தில் மனிதர்களின் மனநிலையை காட்டி உள்ளனர்.
கொரோனா கால பாதிப்பு
கொரோனா கால ஆட்குறைப்பு பட்டியலில் இருக்கும் பத்திரிக்கையாளராக வீட்டில் இருந்து புலம்புகிறார் தம்பி ராமையா. ஒவ்வொரு நூற்றாண்டிலும் வரும் மொட்டை மாடி சித்தரை பேட்டி எடுத்தால், வேலையை தக்க வைக்கும் வாய்ப்பு இருக்கும் என எடிட்டர் கூற, அவரை எப்படி வரவழைப்பது என்கிற சிந்தனையில் இறங்குகிறார் தம்பிராமையா.
சித்தரிடம் பேட்டி
அவர் நினைத்தது அப்படியே திட்டமிட்டபடி நடக்கிறது. மொட்டை மாடி சித்தரை எப்படி வரவழைப்பது என்பதற்கான அத்தனை குறிப்புகளும், அடுத்தடுத்து அவருக்கு கிடைக்கிறது. இறுதியில் கொட்டை பாக்கு வத்தலை காய்ச்சியதும், மொட்டை மாடியில் தோன்றுகிறார் சித்தர். சித்தராக நாசர். '24 மணி நேரம் உன்னுடன் இருப்பேன், நினைத்ததை கேட்டுக் கொள்' என்று கூறும் அவர், சில நிபந்தனைகளையும் விதிக்கிறார்.
ஒரு கதைக்கு 4 க்ளைமேக்ஸ்
அந்த நிபந்தனைகளை கடந்து, மொட்டை மாடி சித்தரை பேட்டி எடுத்தாரா தம்பி ராமையா, அதன் பின் நடந்தது என்ன? வேலை கிடைத்ததா, சித்தர் விதித்த நிபந்தனைகளில் தம்பி ராமையா வென்றாரா என்பது தான் கதை.8 ரவுண்டாக நடக்கும் இந்த கதைக்கு சிம்புதேவன் 4 கிளைமாக்ஸ் வைத்துள்ளார். நான்கும் 4 பேரை பாதிக்கப்பட்டவராக காட்டுகிறது.
எதிர்பாராத ட்விஸ்ட்
வழக்கமான சிம்பு தேவனின் படமாகத் தான் இருக்கும் என நினைத்திருந்த வேளையில், கடைசியில் வரும் பல க்ளைமாக்ஸ் காட்சிகள், படத்தை ரொம்ப சுவாரஸ்யமாக்குகிறது. ராமையாவை ஏமாற்ற அவரது அலுவலக பணியாளர் போட்ட நாடகமும், எதற்காக அந்த திட்டத்தை போட்டாரோ, அந்த திட்டம் அப்படியே ரிவர்ஸ் ஆகி, கெடுதல் நினைத்தவனை விட, மற்றவர்களுக்கு அது பயனாக மாறும் ட்விஸ்ட், நல்ல சிந்தனை.
தம்பி ராமையாவின் லூட்டி
சித்தர் வந்துவிட்டார் என கதவு கண்ணாடியில் பார்த்துவிட்டு, ஆவலாக கதவை திறக்கும் போது, வெளியே ஸ்விகி டெலிவரி பாய் நிற்பதும், யாரும் தன்னிடம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கொரோனா நாடகம் போடும் போதும் தம்பி ராமையா நீண்ட நாட்களுக்குப் பின் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.
திருவிளையாடல் டயலாக் செம
நாசருடன் அவர் அடிக்கும் லூட்டிகளும், ராமையாவை ஏமாற்ற நடக்கும் நாடகமும் ஒரே சிரிப்பு தான். சீரியஸ் விசயத்தை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல், சொல்லி முடித்திருக்கிறார் சிம்பு தேவன். அதிலும், தருமியும்-புலவரும் பேசும் வசனம் போல, தம்பி ராமையாவும்-நாசரும் பேசும் வசனம் சம கால அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
இதெல்லாம் ரொம்பவே ஓவர்
சித்தருடன் அமர்ந்து சரக்கு போடுவது, சித்தரிடம் சாவித்ரி-சரோஜாதேவி, நயன்தாரா - த்ரிஷா வித்தியாசம் கேட்பது எல்லாம் ரொம்பவே அபத்தமாக உள்ளது. நகைச்சுவைக்காக வைக்கப்பட்டது என்றாலும் சிரிப்பிற்கு பதில் சலிப்பையே ஏற்படுத்துகிறது.சித்தரிடம் கேட்கும் கேள்விகள், அதுவும் தனது வேலையை காப்பாற்றிக் கொள்ள கேட்கும் ஒரு பத்திரிக்கையாளரின் கேள்வி என்பதால் இன்னும் கொஞ்சம் யோசித்து, அழுத்தமாகவே வைத்திருக்கலாம். வினோதயம் சித்தம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படங்களின் நினைவுகள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
யாருப்பா அந்த Victim ?
டிரைலரை பார்த்து அதிக எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புதேவனின் கொட்ட பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும் கொஞ்சம் ஏமாற்றம் தான். படம் முடிந்த பிறகும் கூட, இவர்களில் யார் Victim என்ற கேள்வி மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.34 நிமிடங்கள் கொண்ட இந்த குறும்படத்திற்கு ரசிகர்கள் 5 க்கு 3 என ரேட்டிங் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











