உடுமலையில் குசேலன்!

குசேலன் படத்தின் பல காட்சிகளை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் செட் போட்டு எடுத்து வந்தார் இயக்குநர் பி.வாசு. பல காட்சிகளை அங்கு எடுத்த வாசு, முக்கிய காட்சிகளை பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி தற்போது ஹைதராபாத் ஷெட்யூலை முடித்து விட்டு தற்போது பொள்ளாச்சிக்கு இடம் பெயர்ந்துள்ளது குசேலன் யூனிட்.
தற்போது உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளியில், குசேலன் படப்பிடிப்பு நேற்று நடந்தது. மத்திய அரசின் அனுமதியுடன் இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்புக்காக பள்ளி நுழைவு வாயில் மற்றும் வழித் தடம் ஆகிய இடங்களில் செட் அமைக்கப்பட்டிருந்தது. பள்ளி வளாகத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.
ஷூட்டிங்குக்காக ரஜினிகாந்த் கோவையில் இருந்து கார் மூலம் காலை 9.30 மணியளவில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் பள்ளி வளாகத்தில் மேக்கப் போடச்சென்றார். சிறிது நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரு தனியார் மேல்நிலை பள்ளியின் வெள்ளி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டன.
விழாவில் நடிகர்கள் பசுபதி, வடிவேல், லிவிங்ஸ்டன் நடிகைகள் சோனா, மீனா ஆகியோர் கலந்து கொண்டது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டன. நுழைவு வாயிலிலும், மேடையிலும் வெள்ளி விழாவிற்கு வருகை தரும் சூப்பர் ஸ்டார் அவர்களே வருக, வருக என்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தன.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர்கள் சுந்தரராஜன், சந்தானபாரதி, மயில்சாமி, வையாபுரி, தியாகு, நடிகை கீதா ஆகியோரும் வந்திருந்தனர்.
ரஜினியைப் பார்க்க பெரும் திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களைப் பார்த்து ரஜினி கையசைத்தார்.


Click it and Unblock the Notifications











